கவிதைக்காரர்கள் வீதி





கடவுள்கள்
நீயும் நானும்
கடவுளாகத்தான் இருந்தோம்,
குழந்தையாக
இருந்தபோது!
- செல்வராஜா, சேலம்.

விலாசம்
பேருந்து நிலையத்தில்
வந்திறங்கும்
வெவ்வேறு திசைப் பயணிகளின்
ஊர்ப் பெயர்களை
சொல்லிச் செல்கின்றன
ஜவுளிக்கடை துணிப்பைகள்!
- ஜி.வி.மனோ, தூத்துக்குடி.

கொடை
குடையைத் தாண்டி
குவித்து நீட்டிய கைகளில்
நதிக் குழந்தைகளை
வழங்கியது வானம்!
- வீ.விஷ்ணுகுமார்,
கிருஷ்ணகிரி.


ஏமாற்றம்
ஓடி ஒதுங்கி
நிற்போரைப் பார்த்து
ஏமாற்றத்துடன்
திரும்பிப் போனது,
வரவேற்பை எதிர்பார்த்து
வந்த மழை!
- என்.உஷாதேவி, மதுரை.

வெட்கம்
குடையின்கீழ்
இரண்டு பேருக்குத்தான்
இடமிருக்கிறது.
உன் வெட்கத்தை
வேறு எங்காவது
ஒதுங்கச் சொல்!
- பிரியதர்ஷன், சேலம்.

மனப்பயணம்!
புறப்பட்டுவிட்டது புகைவண்டி
கையசைத்து விடைபெற்று
உன்னை
வழியனுப்பிவிட்டுப்
பின் நகர்கிறேன்.
இறுதிப்பெட்டியில்
தொற்றிக்கொள்கிறது
என்னைக் கழற்றிவிட்டு
என் மனம்!
- சிவபாரதி, சிதம்பரம்.