தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது?





வாழ்க்கையே போர்க்களம்தான் என்ற முடிவுக்கு சிறிய வயதிலேயே வந்து விடுவீர்கள். தட்டுத் தடுமாறி வருவதைவிட, போராடிப் போராடி அங்கீகாரத்தைப் பெற்று மேலே வருவீர்கள். எத்தனைதான் கீழே விழுந்தாலும் தன்மானத்தை விடமாட்டீர்கள். நெளிவு சுளிவோடு இருந்தால் கொஞ்சம் சிரமத்தை குறைத்துக் கொண்டிருக்கலாம். இளகிய உள்ளம். அன்பான பேச்சு. எல்லாம் இருந்தாலும் அருகிலுள்ளோரின் சிறு அத்துமீறல்களைக்கூட கண்டிக்கத் தயங்க மாட்டீர்கள். எதைக் காட்டியும் உங்களை வளைக்க முடியாது. தானும் அனுபவிக்காமல், பிறரையும் நெருங்கவிடாமல் இருக்கிற உங்கள் குணத்தை பலரும் நொந்து கொள்வார்கள். வெற்றிக்கு அருகில் வந்தாலும், ஏதோ ஒரு துரதிர்ஷ்டம் உங்களைத் துரத்துவது போல அடிக்கடி உணர்வீர்கள்.

சூறைக்காற்று வீசினாலும், நடுவே எதற்கும் கலங்காமல் உறுதி காட்டும் இரும்புத் தூணைப் போல நிற்பீர்கள். வாழ்க்கையின் ஆரம்பத்தில் பிரச்னைகளைப் பார்த்து பயந்து, பதுங்கி, பரிதவித்து, பிறகு பாய ஆரம்பிப்பீர்கள். இம்மாதிரி வாழ்க்கையின் தாக்குதலுக்கு உள்ளாவதால் உறவினர்களால் ஒதுக்கப்படுவீர்கள். கம்யூனிச சிந்தனை உங்களுக்கு அதிகம் உண்டு. போலியான பக்தியை வெறுப்பீர்கள். நெருக்கடி நேரங்களிலும் நீதி தவற மாட்டீர்கள்.       

உங்களிலும் மூத்தவர்களுக்கு பயப்படமாட்டீர்கள். ஆனால், இளையவர்களுக்கு அஞ்சுவீர்கள். எளிதாகப் பகை வெல்வீர்கள். உங்கள் லக்னத்தின் அதிபதியான குரு பகவான் ஒரு வணங்காமுடி. சிலர் சிறு வயதிலேயே செல்வமுடையவர்களாகவும் சத்திய நிஷ்டையோடும் திகழ்வார்கள். நாட்டுப்பற்று, இனப்பற்று என்று ஊருக்காக உழைப்பீர்கள். உங்களின் இலக்கு எப்போதுமே தவறுவதில்லை. ஊருக்கு நீங்கள் துணிவுள்ளவராகத் தெரிந்தாலும் வாழ்க்கைத் துணைக்கு பயப்படுவீர்கள்.

கேந்திரத்தில் - அதாவது ராசிக் கட்டங்களின் மூலைகளில் - உங்களின் லக்னாதிபதியான குரு நின்றால், கடும் சோதனைகளைக் கடந்து வரவேண்டியிருக்கும். அதேபோல திரிகோணங்களான 5. 9 போன்ற இடங்களில் அமர்ந்தால் நல்லதே நடக்கும். 1, 4, 7, 10 போன்ற இடங்களிலோ நின்றாலோ, உங்களை முடங்க வைக்கும். முன்னேற முடியாது படுத்தும். எமோஷனலாக பேச வைக்கும். புதன் உங்களின் பாதகாதிபதியாக வருவதால், படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காது திணறுவீர்கள். உயரதிகாரிகளை சந்திக்கப் போகும்போது நன்கு தயார்படுத்திக் கொண்டு செல்ல வேண்டும்.
‘தாயா... தாரமா...’ என்ற தடுமாற்றம் இருக்கும். இருவரில் ஒருவர்தான் அனுகூலமாக இருப்பார். ஏமாற்றங்களோடும், தோல்விகளோடும் உங்களை சந்திக்க வரும் நபர்களை தேற்றி ஆறுதல் படுத்துவீர்கள். அதேநேரம் உங்களின் பொறுமையை சோதிப்பதுபோல இருந்தால், மெதுவாக விலக்கி விடுவீர்கள். எப்போதுமே உயர்ந்த விஷயத்தை நோக்கித்தான் நகருவீர்களே தவிர, சில்லறை விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள். வெற்றியை தக்க வைத்துக் கொள்ள போராடுவீர்கள். பொதுவாகவே, எல்லோரும் யோசிக்கும் கோணத்தில் விஷயங்களை அணுக மாட்டீர்கள். சொந்த ஜாதகத்தில் தனுசுக்குள் ஏதேனும் ஒரு நல்ல கிரகம் இருப்பது நல்லது.

உங்களின் ராசிநாதனான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் அம்மாதான் எல்லாமும் என்றிருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் குரு கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால், மாற்றாந்தாய் அரவணைப்பில் வளர வேண்டியிருக்கும். சிலருடைய தாய் இரண்டாம் தாரமாக இருப்பார்கள். வீட்டை பார்த்துப் பார்த்து கட்டுவீர்கள். நீங்கள் வீடு கட்டும் இடத்தில் அழகான மரங்கள் இருந்தால் வெட்டுவதற்கு யோசிப்பீர்கள்.

உங்களுக்கு சூரியன் பாக்யாதிபதியாகவும், செவ்வாய் பூர்வ புண்ணியாதிபதியாகவும் வருகிறார்கள். சூரியன் கிட்டத்தட்ட உங்களுக்கு சகல பாக்கியங்களையும் கிடைக்கச் செய்வார். பெரும்பாலான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவார். அரசாங்கத்தால் கிடைக்க வேண்டிய அத்தனை கௌரவங்களையும் கிடைக்கச் செய்வார். அடிப்படை ஜாதகத்திற்கு வலிமையைக் கொடுப்பார். உங்கள் ஜாதகத்தில் சூரியன் எப்படி இருந்தாலும் சரிதான்... சில நடைமுறைப் பரிகாரங்களை கைக்கொள்ளுங்கள். தந்தையிழந்த குழந்தைக்கும், பார்வை இழந்தவருக்கும் உதவுங்கள். உணவை சூடாக எடுத்துக் கொள்ளுங்கள். உணவில் கோதுமை, சூரியகாந்தி எண்ணெய் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சி, சுக்கு கஷாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மாணிக்கக் கற்களை அணியுங்கள். தந்தையின் சொத்துக்களை விற்காமல் வைத்துக் கொள்ளுங்கள். பரம்பரை பரம்பரையாக செல்லும் கோயிலுக்கு விடாமல் சென்று வாருங்கள். சொந்த கிராமத்துக் கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு உதவுங்கள். உங்கள் தெருவில் சமூக சேவைகளில் பங்கெடுங்கள். சூரிய தசை, சூரிய புக்தி, கார்த்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள், ஞாயிற்றுக்கிழமை, 1, 10, 19, 28 போன்ற நாட்கள் என்று எல்லாமுமே உங்களுக்கு சாதகமாக இருக்கும். பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு. அந்த தினங்களில் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளலாம்.



உங்களுக்கு சூரியனை விட செவ்வாயே இன்னும் அதிகமாக உதவப் போகிறார். ஐந்தாமிடமான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. உங்களின் எதிர்பார்ப்பிற்குத் தகுந்தாற்போல பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். அவர்களை எதிலும் நிர்ப்பந்தப்படுத்த மாட்டீர்கள். அவர்களுக்கு எதில் ஆர்வமிருக்கிறதோ அதிலேயே ஈடுபாடு காட்டச் சொல்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் எதையும் விற்காமல் வைத்திருப்பீர்கள். புரட்சிகரமான சிந்தனை உண்டு. அதேபோல மனிதநேயத்தை பாதிக்கும் பக்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்கள். கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான திரிகோணத்திற்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருந்தால் பாரம்பரியத்தை கட்டிக் காப்பாற்றிக் கொண்டு செல்வீர்கள். சொந்த ஊர், வந்த ஊர் என்று எல்லா இடங்களிலும் சொத்துக்களை வாங்கிக் குவிப்பீர்கள். அதேசமயம் உங்களின் ராசியாதிபதியான குருவும், சூரியனும், செவ்வாயும் அதிநட்பு கிரகமாக வருவதால், பெற்றோருக்கு கௌரவத்தைக் கொடுப்பீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெறச் செய்ய, செவ்வாய்க்கிழமையன்று விரதம் இருக்கலாம். மலையேற்றம் நல்லது. பவழத்தை அணியுங்கள். துவரை தானம் கொடுங்கள். உணவில் அவ்வப்போது பூண்டு, மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள். அன்னம் நீரில் நீந்துவதுபோல படம் வரைந்து பார்வையில் படும் இடத்தில் வைப்பது நல்லது. வீட்டில் செம்பருத்தி, செண்பகப் பூச்செடிகளை வளர்க்க முயற்சியுங்கள். மலை வாழைப்பழம் சாப்பிடுங்கள். சகோதரனை இழந்தவருக்கு உங்களாலான உதவி செய்யுங்கள். ரத்த தானம் செய்யுங்கள். மறியல், கண்டனம், ஆர்ப்பாட்டம் என்று எது வந்தாலும், அதிலுள்ள நியாயத்தை அனுசரித்து கலந்து கொள்ளுங்கள். தெருவை அகலப்படுத்தும்போது பிடிவாதம் பிடிக்காது கொஞ்சம் இடத்தை விட்டுக் கொடுங்கள். இவையெல்லாம் செய்தால் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் பலம் பெறும். செவ்வாய் தசை, அல்லது செவ்வாய் புக்தி, அந்தரம் நடக்கும்போதெல்லாம் உங்களுக்கு சாதகமான பலன்களே நடைபெறும். மேலும் மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திர நாட்கள், செவ்வாய்க்கிழமை, 9, 18, 27 போன்ற தேதிகளில் எல்லா நல்ல முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். செவ்வாய் நிறைய நற்பலன்களை அளிப்பார்.



இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பரம்பரைச் சொத்து உள்ளவர்களாகவே இருப்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் எங்கிருந்தாலும், அவரின் ஆசிகள் நிச்சயம் உண்டு. ஆனால், புதன் அல்லது சனியோடு சேர்ந்தால் போராட்டம்தான். செவ்வாய் தன்னுடைய முழுத்திறனையும் உபயோகப்படுத்தி உதவ முடியாத நிலையில்தான் இருப்பார். செவ்வாய் மிகமோசமாக பகைவர்களோடு இருந்தாலும், தன்னால் எந்த தீய பலனும் வராமல் பார்த்துக் கொள்வார். இதே செவ்வாய் சூரியனோடு இருந்து விட்டால் அதிகாரமுள்ள பதவிகளைத் தருவார். செல்வத்திலேயே திளைக்க வைப்பார். ஆயிரம் பேருக்கு வேலை தரும் அளவுக்கு உயர்த்துவார். தலைமை தாங்கி நடத்திச் செல்வதில் ஈடு இணையற்றவராக விளங்க வைப்பார். செவ்வாய் பூமிகாரகனாக இருப்பதால், மத்திம வயதிற்குள்ளாகவே வீடு யோகம் கிட்டிவிடும்.

உங்களின் சொந்த ஜாதகத்தில் கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் ஒன்றில் குரு அமர்ந்திருந்தாலோ, குரு சூரியனுடன் சேர்ந்திருந்தாலோ ஒரு குறையும் வராத ராஜபோகமான வாழ்க்கை அமையும். குருவும் செவ்வாயும் சொந்த ஜாதகத்தில் சேர்ந்திருந்தால், குரு மங்கள யோகம் கிடைக்கும். குரு செவ்வாயுடன் மேஷம், தனுசு வீடுகளில் சேர்ந்திருந்தால் ராணுவம் அல்லது விமானப் படையில் முதன்மை பதவி வகிப்பவராக இருப்பீர்கள். குரு தசை, குரு புக்தி, வியாழக்கிழமை, புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள், 3, 12, 21, 30 போன்ற தேதிகள் என்று குறிப்பிட்ட இந்த காலங்கள் உங்களுக்கு சாதகமாகவே இருக்கும்.

பொதுவாக இந்த மூன்று கிரகங்களுமே சனியை அதிபதியாகக் கொண்ட நட்சத்திரங்களில் அமரக் கூடாது. சனியின் பார்வையோ அல்லது சேர்க்கையோ பெற்றிருந்தால் எல்லா விஷயங்களிலும் காலதாமதமாக பலன்கள் கிடைக்கும். மேலும் சொந்த ஜாதகத்தில் இவை மூன்றும் பரஸ்பரம் மறையாமல் இருப்பது நல்லது. இந்த மூன்று கிரகங்களால் வரக்கூடிய யோகப் பலன்களை முழுமையாகப் பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய தலமே வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. நட்சத்திரங்கள் பூஜிக்கும் நாயகனாக விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேரக் காட்சி தருகின்றனர். இத்தலம் திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)  

மாற்றம் தரும் மந்திரம்

தனுசு லக்னத்தில் பிறந்த நீங்கள், வாழ்வில் எல்லா வளங்களும் பெறுவதற்கு,
இந்த திருப்புகழை தினமும் கூறுங்கள்...

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக அருள்வாயே
காரு லாவிய நீள்புன வேடர் மால்வரை மீதுறை
காவல் மாதினொ டாவல்செய் தணைவோனே
காண ஆகம வேதபு ராண நூல்பல வோதிய
கார ணாகரு ணாகர முருகோனே
போரு லாவிய சூரனை வாரி சேறெழ வேல்விடு
பூப சேவக மாமயில் மிசையோனே
போதன் மாதவன் மாதுமை பாதி யாதியு மேதொழு
போரி மாநகர் மேவிய பெருமாளே.