மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் ராகுவும் தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் 10

வீரதீர கிரகமான செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு சூடாக சாப்பிடப் பிடிக்கும். சுறுசுறுவென்று நாக்கில் ஏதேனும் பட்டால்தான் ஏதோ சாப்பிட்ட நிறைவு வரும். அப்புறம் பார்க்கலாம்... ஆகட்டும் பார்க்கலாம்... என்கிற அலட்சிய வார்த்தைகளுக்கெல்லாம் உங்கள் அகராதியில் இடமிருக்காது. மறைந்து நிற்பதோ, சூசகமாகப் பேசுவதோ பிடிக்காது.

ஆனால், மறுத்துப் பேசுவதும் தன் சிந்தனையை உரக்க வெளிப்படுத்தும் உத்வேகமும் உங்களுக்கு எப்போதும் உண்டு. முழுநேர செயல் வீரர்களாகிய உங்களையும் உங்களின் இயல்பான சுபாவங்களையும் அப்படியே புரட்டிப் போடும் சக்தி ராகுவிற்கு உண்டு.

களத்தில் குதிக்காமல், பட்டியலில் இடம் பிடிக்காமல், புகைப்படத்திலும் இல்லாமல், ஆனால் சங்கேத பரிபாஷை பேசி சகலத்தையும் முடிக்கும் ஆற்றலைப் பெற்றவரே ராகு. அப்படிப்பட்ட ராகு செவ்வாயோடு சேரும்போது உங்களின் நாடி நரம்புகளிலும் எண்ணம் செயல்பாடுகளிலும் வினோதமான மாற்றங்களும், விபரீதமான செயல்பாடுகளும், பேச்சிலும் மூச்சிலும் ரசாயன மாற்றங்களும் ஏற்படும். மடைமாற்றம் செய்யக்கூடிய கிரகம் ராகு. லக்னாதிபதியோடு ராகு சேரும்போது இயல்பு, இயற்கை எல்லாமே மாறும். ‘அற்ப சிநேகிதம் பிராண சங்கடம்’ என்பது போன்ற ஒரு அமைப்பைக் கொடுக்கும்.

லக்னத்திலேயே செவ்வாயோடு ராகு - குறிப்பாக பெண்களுக்கு அமர்ந்திருந்தால் பிரசவ அறுவை சிகிச்சையின்போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்து அதனால் பாதிப்புகள் ஏற்படக்கூடும். குழந்தையின் தலை அமைப்பு சற்றே மாறியிருக்கும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சேர்க்கை உள்ளவர்கள் தலையில் அதிக சுமைகளை ஏற்றி சுமக்கக் கூடாது. அதேபோல உயரத்திலிருந்து கீழே பார்க்கக் கூடாது.

தூக்கம் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தலையில் எப்போதும் அடிபடக்கூடும் என்பதால், இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கை தேவை. ஆனால் இவர்கள், மற்றவர்களால் முடியாததை முடித்துக் காட்டுவார்கள். எந்தவொரு விஷயத்தையும் உடனே புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பதும்,  மனதில் ரகசியங்களை வைத்துக்கொள்ளத் தெரியாமல் சங்கடப்படுவதும் உண்டு. இந்த சேர்க்கையை சனி பார்த்தால் மூளையில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்ய நேரலாம். இந்த காம்பினேஷன் உள்ள பிள்ளைகளை அழுத்தம் கொடுத்து படிக்க வைக்காதீர்கள். சிடுசிடுப்பும் சோம்பலும் மிக்கவர்களாக இருப்பார்கள். ஏதோ ஒன்றைப் பறிகொடுத்தாற்போல முகத்தை வைத்துக் கொள்வார்கள்.

அடுத்ததாக ரிஷபத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருக்கும் அமைப்பானது இருவேறு விதமான சிந்தனைகளை மனதில் உருவாக்கியபடி இருக்கும். இவர்களுக்கு மேடைப் பேச்சில் மிகவும் ஆர்வம் இருக்கும். வக்கீலாக இருந்தால் வெளுத்து வாங்குவார்கள். இடது கண் பாதிப்பு இருக்கும். மத்திம வயதில் குடும்பத்தில், கணவன் - மனைவிக்குள் விரிசல் ஏற்படும். இவர்கள் பல மொழி பேசும் திறன் பெற்றிருப்பார்கள்.

பால வயதில் கல்வித் தடை ஏற்பட்டு பின்னர் சரியாகும். மேலும் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கமும் இருக்கும். இவர்களுக்குத் திருமணம் செய்யும்போது சரியான ஜாதகத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும். மறந்துபோயும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடக் கூடாது. தவறான தொடர்புகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தவறான முறையில் சம்பாத்தியம் இருந்தால் திருத்திக்கொள்ள வேண்டும்.

மிதுனத்தில் செவ்வாயும் ராகுவும் சேர்ந்திருந்தால் மிதமிஞ்சிய போகமும் ஆடம்பரமும் இருக்கும். அதேசமயம் எல்லா விஷயத்திலும் மிக நுட்பமான பார்வை இருக்கும். சைபர் க்ரைம் போன்ற காவல் துறையைச் சார்ந்த சில துறைகளில் இவர்கள் ஈடுபட்டால் பெரிய அளவிலான விஷயங்களை வெளிக் கொணர்வார்கள்.

இவர்களுக்குப் பிறகு பிறக்கும் உடனடிச் சகோதரரோ அல்லது சகோதரியோ மிகப் பெரிய அளவில் சாதிப்பார்கள். தன்னைத் தானே மிகைப்படுத்திப் பேசும் சுபாவம் இருக்கும். கொஞ்சம் இரட்டை வேடம் போடுபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் இன்னொரு பக்கத்தை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது.

கடகத்தில் செவ்வாயும் ராகுவும் இருந்தால் வாகன வசதி பெருகும். டிராவல்ஸ், டூரிஸ்ட் வாகனங்களை வைத்து நடத்தி முன்னேறுவார்கள். மிகப் பழமையான பொருட்களைக் கண்டுபிடித்து பத்திரப்படுத்துவார்கள். தான் எது செய்தாலும் அது சரியே என்று வாக்குவாதம் செய்வார்கள். தாய்வழிப் பாட்டனின் பெருமையைப் பேசுதல் பிடிக்கும். தாயாருக்கு அவ்வப்போது ஆரோக்யத்தில் பிரச்னை வந்தபடி இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்கள் மறந்துபோயும் புகை பிடிக்கக்கூடாது. புற்றுநோய் தாக்கும் அபாயம் உண்டு. 

சிம்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் இருக்கும்போது மிக ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை அறியும் திறனைப் பெற்றிருப்பார்கள். ஐசக் நியூட்டன் எப்படி ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் உதிர்வதைப் பார்த்து புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்தாரோ அதுபோல இவர்கள் தேடல் இருக்கும். அந்தத் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவர்கள் எப்போதும் எதையாவது வித்தியாசமாக யோசித்தபடி இருப்பார்கள்.

போகப்போக புதுப்பாதையில் பயணிப்பார்கள். இவர்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளால் நல்லது நடக்கும். ஆண்வாரிசு இருந்தால் கருத்து மோதல் மற்றும் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் பிரச்னைகள் வந்து நீங்கும். அதனால், பூர்வீகத்திற்கு பக்கத்து நகரத்தில் ஏதாவது தொழிலைத் தொடங்குவார்கள். ரத்தக் குழாய் அடைப்பு பிரச்னை வந்து சரியாகும். ஆன்மிகத்தில் சக்தி உபாசகர்களாக விளங்குவார்கள்.

அடுத்ததாக வரும் கன்னியில் ராகு அமர்வது என்பது மிக மிக விசேஷமான ஒன்றாகும். திடீர் யோகங்கள், பண வரவு, பங்குச் சந்தையில் ஈடுபட்டு பெரியதாக சம்பாதித்தல் என்றிருப்பார்கள். ஆறு, மலைப் பகுதிகளில் வசிப்பதற்கு பெரிதும் விரும்புவார்கள். கிரானைட், மார்பிள், சிமென்ட், ஜல்லி போன்ற தொழிலில் நிறைய சம்பாதிப்பார்கள்.

ராசிநாதனான செவ்வாயும் அங்கிருப்பதால் முகத்தில் ஆங்காங்கு வெட்டுக் காயங்கள் இருக்கும். புது எதிரிகள் எங்கிருந்தாலும் தங்களின் புத்தித் திறமையால் வீழ்த்தி முன்னுக்கு வருவார்கள். திடீரென்று பெரும்பதவிகள் கிடைத்து அதில் அமர்வார்கள். வேற்று மதத்தவரால் அனுகூலமான விஷயங்கள் நடைபெறும். இவர்களில் சிலர் உயிரியல் பூங்காக்களில் விலங்குகள் காப்பாளர்களாக, பயிற்றுவிப்பவர்களாக இருப்பார்கள்.

துலாம் ராசியில் செவ்வாயும் ராகுவும் அமர்ந்தால் அது கடுமையான தோஷத்தைக் கொடுக்கும்.  துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிரன் இருப்பதால் இரண்டாவது திருமணம் செய்யக் கூடிய நெருக்கடி உருவாகலாம். அல்லது ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தான அல்லது வாழ்க்கைத் துணைவரை இழந்தவர்களாகப் பார்த்து திருமணம் செய்ய நேரலாம்.

இவர்கள் டெக்ஸ்டைல் தொழிலைத் தொடங்கி தனி முத்திரை பதிப்பார்கள். அதிலும் நவீனமான உடைகளைத் தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்வார்கள். ஆணோ, பெண்ணோ, உள்ளாடைகள் உற்பத்தியில் ஈடுபட்டால் மாநில அளவில் தங்களுக்கென்று தனித்துவத்தை உருவாக்கலாம். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறு, அதிக ரத்தப்போக்கு போன்ற தொந்தரவுகளை இந்த அமைப்பு கொடுக்கும்.

விருச்சிகத்தில் இவ்விரு கிரகங்கள் இணைந்திருந்தால் மர்மமாக இருப்பார்கள். இவர்களைப் புரிந்துகொள்வதே கொஞ்சம் கஷ்டமான விஷயமாகும். தீவிர இயக்கங்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்கள் மீது இவர்களுக்கு அபிமானம் இருக்கும். நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள். தாங்கள் கொண்ட கொள்கைகளை நியாயப்படுத்துவார்கள்.

இவர்கள் குடிப்பழக்கத்திற்கு அருகே செல்லவே கூடாது. குடல் சம்பந்தமான பிரச்னை வந்தால் அசிரத்தையாக இருக்கக் கூடாது. திருமணமானவர்களின் வாழ்வில் மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிர்க்க வேண்டும். சிலசமயம் கள்ளத் தொடர்பில் கொண்டு போய் விட்டுவிடும். ஆண்களுக்கு மர்ம ஸ்தானத்தில் நோய்வந்து நீங்கும்.

தனுசு என்கிற கோதண்ட ராசியில் ராகுவும் செவ்வாயும் அமர்ந்தால் அது பெரும் யோகமாகும். ஞானவானாகத் திகழ வைக்கும் அமைப்பைக் கொடுக்கும். தன்னைத் தானே நெறிப்படுத்திக் கொண்டு முன்னேறுவார்கள்.

குப்பையில் கோமேதகம் போல, இவர்கள் எப்படிப்பட்ட வாழ்வியல் சூழ்நிலையில் இருந்தாலும் நன்கு ஒளிர்ந்து முன்னுக்கு வருவார்கள். ஒரு சமூகத்தையே மாற்றும் அளவிற்கு சிந்தனை வளத்தோடு இருப்பார்கள். தன் தந்தையாரின் தவறைக்கூட தட்டிக் கேட்டு மாற்றுவார்கள். நிறைய புத்தகங்கள் படித்தபடி இருப்பார்கள். நண்பர்களைவிட புத்தகங்களுக்கு அதிக மரியாதை கொடுக்கும் அளவிற்கு இருப்பார்கள்.

மகர ராசியில் ராகுவும் செவ்வாயும் இருப்பது மாபெரும் செல்வந்த யோகத்தைத் தரும். கும்பம், ‘டபுள் நெகட்டிவ் மேக்ஸ் ஒன் பாஸிட்டிவ்’ என்பார்களே... அதுபோல பாதக ஸ்தானமான பதினோராமிடத் திலே பாவ கிரகமான ராகு அமர்வது திடீர் யோகமாக மாறும். வர்மக்கலையில் இவர்கள் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த இரண்டு ராசிகளில் இவ்விரு கிரகங்கள் சேர்ந்து நின்றால் ஒருமித்த நல்ல பலன்களையே தருவார்கள்.

 மீனத்தில் செவ்வாய் - ராகு இணைந்து இருந்தால் எதிலும் ஒரு பயம் இருந்தபடி இருக்கும். தாழ்வு மனப்பான்மை, சகோதரனிடம் குற்றங்குறைகளை அடிக்கடி காணல், எதிலும் திருப்தியற்ற மனநிலை என்றெல்லாம் இருப்பார்கள். நிறையப் பேர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். மற்றபடிக்கு வேறெந்த பிரச்னைகளையும் தரமாட்டார்.  

இந்த செவ்வாய் - ராகு சேர்க்கையானது கொஞ்சம் விசித்திரமான நல்ல மற்றும் தீய பலன்களைக் கொடுக்கக் கூடியதாகும். எனவே, இந்த சேர்க்கையின் எதிர்மறை கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து விடுபட நீங்கள் செல்ல வேண்டிய தலமே குக்கி சுப்ரமண்யா ஆகும். இங்கு முருகன், தன் தலைமீது நாகம் கவிழ்ந்து காட்சியளிக்கிறார். நாகங்களின் தலைவியான வாசுகிக்கு இத்தல முருகன் அபயம் அளித்ததால் ராகு - கேது தோஷங்கள் நீங்குகின்றன.

மேலும், செவ்வாய்க்கு அதிபதியான முருகனுக்கும், ராகு - கேதுக்களுக்கு அதிபதியான நாகங்களின் அரசிக்கும் தொடர்புடைய தலமாக இது இருப்பதால் ஜோதிட ரீதியாகவே மிகவும் விசேஷம் பெற்ற தலமாகும்.

ராகு - கேது தோஷமுள்ளோர்கள் தவிர, செவ்வாய் தோஷமுள்ளோர்களும் இத்தலத்திற்குச் சென்று வரலாம். கர்நாடக மாநிலம் மங்களூருவிலிருந்து 105 கி.மீ., பெங்களூருவிலிருந்து 290. கி.மீ. தொலைவிலுள்ள குக்கி சுப்ரமண்யா ஆலயத்துக்கு பஸ் அல்லது ரயிலில் செல்லலாம்.

 (கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா
கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்