சென்னையில் பெருகி வரும் பார்ட்டி டிரக்ஸ்!



விபரீதம்

இளைஞர்களை அடிமையாக்கும் இன்னொரு கொடுமை

‘போதை ஏறிப்போச்சு புத்தி மாறிப்போச்சு’ என்ற வைரமுத்துவின் புகழ்பெற்ற திரைப்பாடல் சொல்வதைப் போலத்தான்... போதைக்கு அடிமையானால் புத்தி மட்டுமல்ல... வாழ்க்கையே தடம் மாறிப்போகும் என்பதற்கு இன்னொரு உதாரணம் இது!

நகரங்களில் பார்ட்டி கலாசாரம் தீயாகப் பரவி வருகிறது. வாழ்வில் சிறு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் ‘சியர்ஸ்’ சொல்லி பார்ட்டி கொண்டாடுவது இன்று இளசுகளிடையே ஹாட். மது மட்டுமே புழங்கிக்கொண்டிருந்த கேளிக்கை விருந்துகளில், இப்போது எமனாக நுழைந்திருக்கிறது போதை வஸ்துகள். இவற்றுக்கு ‘பார்ட்டி டிரக்ஸ்’ என்று பெயர்.

ஆல்கஹால் பார்ட்டியே ஆபத்தானது என்கிற போது, போதை மருந்துகளும் சேர்ந்து கொண்டால்? பார்ட்டி கலாசாரத்துக்கும் போதைக்கும் இளைஞர்கள் எப்படி அடிமையாகிறார்கள்? போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதால் ஏற்படும் உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என்னென்ன? அவர்களை  மீட்பது எப்படி? போதை அடிமைகள் மறு வாழ்வு பெற பணியாற்றும் டி.டி.கே. மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அனிதா ராவிடம் பேசினோம்...

‘‘வீட்டில் வைக்கப்படும் விருந்துகளில் கூட இன்று மது பரிமாறப்படுகிறது. பார்ட்டி கலாசாரம் இன்று மேல்தட்டு மக்களைத் தாண்டி, எல்லாத் தரப்பு மக்களிடமும் பரவி இருக்கிறது. பெரும்பாலான பார்ட்டிகளில் போதை மருந்துகளின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. எக்ஸ்டசி, கேட்டமின் போன்றவை மாத்திரை வடிவிலும் தூள் வடிவிலும் கிடைக்கின்றன.

இவற்றை மதுவில் கலந்து குடிக்கிறார்கள். இதனால் அளவற்ற போதை ஏற்படுகிறது. ஒருமுறை பயன்படுத்திப் பார்த்து மறுபடியும் உபயோகிக்கத் துடிக்கின்றனர். பார்ட்டிக்கு போய் மது அருந்தி உடலைக் கெடுத்துக் கொள்வது போதாதென்று, போதைப் பழக்கத்துக்கும் அடிமையாகிவிடுவது வருத்தமான விஷயம்.

ஓபியம், பிரவுன் சுகர் போன்ற போதை மருந்துகள் நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு போகின்றன. போதைப் பொருட்களை சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடுகளுக்கு கடத்துகிறார்கள் என்ற செய்தியை படிக்கிறோம். இது எங்கே போகிறது? எப்படிப் போகிறது? அவை திரும்பவும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன.

இவ்வளவு போதை பொருட்களை பிடிக்கிறோம் என்கிறார்கள். பிடித்தது ஒரு பெட்டி என்றால், போய் சேர்ந்தது பல பெட்டிகளாக இருக்கும் என்பதே கசக்கும் உண்மை. வெறுமனே சட்டம் போட்டுப் பயனில்லை. அதை செயல்படுத்துவதிலும் கண்டிப்பு காட்ட வேண்டும்.

அப்போதுதான் சட்டத்தை மீறுபவர்களுக்கு பயம் இருக்கும்.வலிநிவாரணி மருந்துகளைக்கூட இன்று போதைப்பொருளாக பயன்படுத்தும் கொடுமையும் நடக்கிறது. இதய நோய்க்கு மருந்தாக கொடுக்கப்படும் மார்பினை தவறான முறையில் பயன்படுத்துகிறார்கள்.

கஞ்சா செடியை வீடுகளில் வளர்த்து இடித்து தூளாக்கி விற்பனை செய்கிறார்கள். சென்னையில் நடத்தப்படும் பல பார்ட்டிகளில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. இதை இளம்பெண்கள் கூட  எடுத்துக் கொள்கிறார்கள்.

எபிடிரின்(Ephedrine) உணர்வூக்கி மருந்தை நிறைய போதைப்பொருட்களுக்கு மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். கோகைன் எனப்படும் போதைப் பொருள் விலை அதிகமாக உள்ளதால், வசதியான சிலரே பயன்படுத்துகிறார்கள்.  கேட்டமின், எக்ஸ்டசி போன்றவற்றை பெண்களுக்கு குளிர்பானங்களில் கலந்து கொடுத்து பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்குவதும் நடக்கிறது.

14-15 வயதினர் இதுபோன்ற போதைப் பொருட்களை உட்கொள்வதால் உடலின் வளர்சிதை மாற்றங்கள் பெருமளவு பாதிப்படையும். தமிழ்நாட்டில் எய்ட்ஸ் விழிப்புணர்வு அதிகம் இருப்பதால் ஊசி மூலம் போதை மருந்துகளை ஏற்றிக்கொள்பவர்கள் பெருமளவு குறைந்துள்ளனர். நுகர்ந்து பார்த்து போதை ஏற்றிக்கொள்வது அதிகரித்திருக்கிறது. பிரவுன் சுகர், கோகைன் போன்றவற்றை மட்டும்தான் முன்னர் முகர்ந்து பார்த்து போதை பிடித்தனர்.

இப்போது சில வகை பசைகள், ஒயிட்னர்(எழுத்துகளை அழிக்க பயன்படுவது), பெட்ரோல் போன்றவற்றை கைக்குட்டையில் ஊற்றி முகர்ந்து பார்த்து போதை ஏற்றுகிறார்கள். இதனால் மூளை சேதமடையும். இது மிகுந்த அபாயகரமான பழக்கம். சிலர் இருமல் மருந்துகளை பாட்டில் பாட்டிலாக போதைக்கு குடிப்பார்கள். வலிக்காக போடப்படும் ஊசி மருந்தான ஸ்பாஸ்மோ ப்ரோக்சிவானை (Spasmo Proxyvon) கூட போதை மருந்தாக  பயன்படுத்துகிறார்கள்.

இன்று போதை மருந்துகளின் விநியோகம் சூப்பர் மார்க்கெட் போல நடைபெறுகிறது. எவ்வளவு பணம் செலவு செய்கிறீர்களோ அதற்கு ஏற்றாற்போல போதையும் கிடைக்கும் என்பதுதான் கலவர நிலவரம். போதை மருந்துகளை பயன்படுத்துவதால் உடல்ரீதியாக நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கல்லீரல், இதயம், சிறுநீரகங்கள்  பாதிப்படையும்.

மன ரீதியாக சைகோசிஸ் (Psychosis) எனும் ஆளுமை மாற்றம், ஹாலுசினேஷன் (Hallucination) எனும் பல குரல்கள் காதுக்குள் கேட்க ஆரம்பிப்பது, பேனிக் அட்டாக் போன்றவை ஏற்படும். பயம், கோபம், படப்படப்பு, எரிச்சல் எல்லாமே கலந்த ஓர் உணர்வு பேனிக் அட்டாக்கில் இருக்கும். நினைவாற்றல் இழப்பு ஏற்படும். வேலையில் கவனம் செலுத்த முடியாது. இதெல்லாம் போக குடும்ப உறுப்பினர்களின் மன அமைதி
நிரந்தரமாக பறிபோகும்.

போதை என்பது பாதிக்கப்பட்ட நபருக்கு மட்டுமல்ல... அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். போதைக்கு அடிமையானவர்களை ஆரம்ப நிலையிலேயே அழைத்து வந்தால் சிகிச்சை அளிப்பது எளிதாகும். பலர் மகனுக்கோ, மகளுக்கோ போதைப் பழக்கம் இருந்தால் கல்லூரியை மாற்றிப் பார்ப்பார்கள். அப்படியும் பழக்கத்தை விடவில்லையெனில் வேறு ஊருக்கு அனுப்பி படிக்க வைப்பார்கள். இப்படியெல்லாம் செய்வதால் போதைப் பழக்கம் போய்விடாது.

முறையான சிகிச்சை கொடுத்தால் மட்டுமே அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதல் ஒரு மாதம் அவர்களுக்கு  டீடாக்ஸ் (Detox) சிகிச்சை செய்து உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவோம். மன நல ஆலோசனை வழங்கப்படும். Cognitive Behavioural Therapy எனப்படும் ஆளுமை மாற்றும் பயிற்சியும் வழங்கப்படும்.

குடும்ப உறுப்பினர்களும் இந்தப் பயிற்சிகளில் பங்குபெறுவது அவசியம். போதைக்கு அடிமையானவர்களை கையாளும் பயிற்சியும் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். 3 மாதங்கள் முழுமையான சிகிச்சை எடுத்த பின், போதைப் பழக்கத்தை விட்டாலும், 5 ஆண்டுகள் அவர்களைக் கண்காணிப்பது அவசியம்...’’ என்கிறார் டாக்டர் அனிதா ராவ்.

பெற்றோருக்கு சிலவார்த்தைகள்...

* போதைப் பழக்கம் உடைய பிள்ளைகளின் மனநிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.

* மகிழ்ச்சியோ, துக்கமோ எதையும் அதீதமாக வெளிப்படுத்துவார்கள்.

* படிப்பிலோ, வேலையிலோ ஆர்வம் குறையும்.

* தேவையற்ற நண்பர்கள் சேர்வார்கள். வயதுக்கு சம்பந்தம் இல்லாத புதிய நண்பர்களுடன் பழக்கம் அதிகரிக்கும்.

* பணத்தேவை இருந்து கொண்டே இருக்கும். பணம் கிடைக்காத போது வீட்டிலேயே திருட ஆரம்பிப்பார்கள்.

* நிறைய பொய் சொல்வார்கள்.

* வீட்டில் இருக்கும் நேரம் குறையும். வெளியில் போய் சுற்றிவிட்டு நள்ளிரவில் வருவார்கள்.

* அடிக்கடி கோபம், படபடப்பு, பதற்றம் வரும்.

* வீட்டில் அடிக்கடி அவர்களின் அறையை பூட்டிக்கொள்வார்கள். பாத்ரூமுக்குள் போனால் வெளிவர பல மணி நேரம் ஆகும்.

* உணவு எடுத்துக்கொள்வது பெருமளவு குறையும். காலையில் எழ முடியாமல், மதியம் வரை கூட அடித்துப் போட்ட மாதிரி தூங்குவார்கள்.

இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்களை கண்காணித்து, முறையான சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுதல் அவசியம்.

மியாவ்... மியாவ்...

 மாதம் ஒரு புதிய போதை மருந்து மார்க்கெட்டில் கிடைக்கிறது. லேட்டஸ்ட்டாக ‘மியாவ் மியாவ்!’போன் செய்து ‘மியாவ் மியாவ்’ என்று சொன்னால் மெபிட்ரான் (Mephedrone) என்ற போதை மருந்தை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்களாம். கோகைன் போல பவுடராக கிடைக்கிற இதன் விலை கிராம் 150 ரூபாய். விலை மலிவாக உள்ளதாலும் கோகைன், எக்ஸ்டசிக்கு இணையான போதையைக் கொடுப்பதாலும் பலத்த ஆதரவைப் பெற்றுவிட்டது. இணையத்தில் கூட ஆர்டர் செய்கிறார்கள்.

இது மிக மோசமான விளைவுகளை மூளைக்கும் உடலுக்கும் ஏற்படுத்தக் கூடியது. மும்பையில் ஒரு பார்ட்டியில் இதைப் பயன்படுத்தி சில இளம்பெண்கள் போலீசாரிடம் பிடிபட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு போதை மருந்தை வாங்கும் போதும் இப்படி பல சங்கேத வார்த்தைகள் புழங்குகின்றன. கஞ்சாவுக்கு பொட்டலம், டோப்பு, இலை, பைப்பு என்று பல சங்கேத வார்த்தைகள் உள்ளன.

-விஜய் மகேந்திரன்
படம்: ஆர்.கோபால்