பனிவரகு



சிறப்புமிக்க சிறுதானியங்கள்

சிறுதானியங்களை நாம் நமது உற்ற நண்பன் என்று அழைக்கலாம். இவை நமக்கு என்றும் நன்மையே செய்பவை என்பதால்! ஆங்கிலத்தில் பனிவரகு என்னும் சிறுதானியத்தை ‘ப்ரோசோ மில்லெட்’, ‘ஃப்ரெஞ்ச் மில்லெட்’ என்று அழைப்பார்கள்.

இந்திய நாட்டில் கன்னட தேசத்தவர் ‘பரகு’, காஷ்மீரத்தில் ‘பின்கு’, தெலுங்கு தேசத்தவர் ‘வரகலு’ என்றும் கூறுவர். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆசிய கண்டத்தில் பனிவரகு இருந்தது என்பதற்கான குறிப்புகள் உள்ளன. ஐரோப்பாவில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது. 1875ல் ஜெர்மனி மற்றும் ரஷ்ய நாட்டில் இருந்து வந்தவர்கள் வட அமெரிக்காவுக்கு கொண்டு வந்தார்கள்.

ரஷ்யா, ஜெர்மனி, சீன நாட்டினர் இந்த தானியத்தை கஞ்சியாக குடிக்கிறார்கள். ரஷ்யாவில் பாலும் சர்க்கரையும் சேர்த்து இனிப்பாக குடிப்பார்கள். சீனாவில் இனிப்பாக குடிக்காமல், அசைவ உணவோடு சேர்ப்பார்கள். காய்கறி சூப்பிலும் சேர்ப்பார்கள். பீன்ஸ், சர்க்கரைவள்ளி, சுரைக்காய் போன்றவற்றோடு சேர்த்துச் சமைத்து உண்பார்கள். ஜெர்மனியில் ஆப்பிள், பால், தேனுடன் சேர்த்து இனிப்பாக உட்கொள்வார்கள். பல நாடுகளில் சிறுதானியங்களைப் புளிக்க வைத்து பீர் போன்ற பானங்கள் செய்ய உபயோகிப்பார்கள். நேபாளம், இந்தியா, ரோமானியா, பல்கேரிய நாடுகளிலும் பானங்கள் செய்ய உபயோகப்படுத்துவார்கள்.

100 கிராம் பனிவரகில் இருக்கும் சத்துகள்...

புரதம் - 12.5 கிராம், கொழுப்பு - 1.1 கிராம், தாதுக்கள் - 1.9 கிராம், நார்ச்சத்து - 2.2 கிராம், மாவுச் சத்து - 70.4 கிராம், கலோரிகள் - 341, கால்சியம் - 14 மி.கிராம், பாஸ்பரஸ் - 206 மி.கிராம், இரும்புச்சத்து - 0.8 மி.கிராம். பி-காம்ப்ளக்ஸ்
தயாமின் - 0.20 மி.கிராம், ரிபோஃப்ளோவின் - 0.18 மி.கிராம், நயாசின் - 2.3 மி.கிராம், கோலின் - 748 மி.கிராம்.

இதில் மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீசு, துத்தநாகம், குரோமியம், சல்பர், குளோரைடு போன்ற பல தாதுக்கள் சிறந்த அளவில் இருக்கின்றன.
இதில் உள்ள புரதம் கிட்டத்தட்ட 10 முக்கிய அமினோ அமிலங்களின் சேர்க்கையாக இருக்கிறது. தினமும் பனிவரகை நாம் உட்கொள்ளும் போது ஆரோக்கியமாக இருக்க இயலும்.
ஆரோக்கியத்தில் பனிவரகின் பங்கு...

நரம்பு மண்டலம்: இதில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
சருமம்: சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் விழாமலும் மினுமினுப்புடன் இருக்கவும் உதவும். நரை-மூப்பை தள்ளிப் போடும் குணம் உடையது.

எலும்புகளின் அடர்த்தி: இதிலுள்ள கால்சியம், பாஸ்பரஸ் இரண்டுமே எலும்புகளின் அடர்த்திக்கு உதவி, சிறு வயதில் எலும்புகளின் வளர்ச்சிக்கும்  உதவக்கூடியவை.
இதயம்: பொதுவாக தானியங்களில் உள்ள மாவுச்சத்தானது, நாம் தேவைக்கு அதிகமாக உண்ணும் போது டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படும்.

அது இதய நோய்க்கு அடி கோலும். ஆனால், பனிவரகும் மற்ற சிறு தானியங்களும் டிரை கிளிசரைடு என்னும் கொழுப்பாக மாற்றப்படாது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமலிருக்க உதவும். இதிலுள்ள நார்ச்சத்தும் இதயத்துக்கு நல்லது செய்யும். அதிக கொழுப்பு உடலில் சேராது.

நீரிழிவு: இரண்டாம் வகை நீரிழிவை தடுக்கும் இன்சுலினை சரிவர சுரக்கச் செய்யும் தன்மை உண்டு.கல்லீரல் கற்கள்: அதிகப்படியாக பித்த நீர் சுரக்கும் போது கல்லீரலில் கற்கள் உருவாகும். இதில் உள்ள கரையும் தன்மை உள்ள நார்ச்சத்து அதிக பித்த நீர் சுரப்பதை தடுக்கும். அதனால் கல்லீரல் கற்கள் உருவாகாமல் இருக்க உதவும்.

மரபணுக் குறைபாடுகள்: ஒவ்வொரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறையினருக்கு மரபணுக்கள் மூலம் பலவித குறைபாடுகள் தொடர்ந்து வரும். பாஸ்பரஸ் குறைபாடு உள்ள உணவும் இதற்கு ஒரு காரணம். பனிவரகில் பாஸ்பரஸ் சிறந்து இருப்பதால் இதுபோன்ற குறைபாடுகளை தடுக்கும்.

அலர்ஜி: கோதுமையினால் சிலருக்கு ‘சிலியாக்’ எனப்படும் அலர்ஜி ஏற்படும். மாற்றாக பனிவரகு சேர்த்துக் கொள்ளலாம். அலர்ஜியை ஏற்படுத்தும் ‘க்ளூடன்’ இதில் அறவே இல்லை.
நோய் எதிர்ப்புத் திறன்: வைட்டமின் பி 6, துத்தநாகம் (Zinc) நமக்கு நோய் எதிர்ப்புத் திறனைத் தரும். உடல் சரிவர இயங்கவும் உதவும். உடல் இயக்கக் குறைபாடுகள் வராது.

ஆபரேஷன் செய்த பின் உடல் சீக்கிரம் தன் நிலைக்கு திரும்புவதற்கு இந்தச் சத்துகள் தேவை. அந்த நேரங்களில் இந்த சிறுதானியங்களை கஞ்சியாக செய்தும் உட்கொள்ள லாம். சத்துமாவாக செய்து சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கும் தரலாம். சுலபமாக ஜீரணமும் ஆகும்.

அதிக எடை: பனிவரகு மற்றும் பிற சிறுதானியங்களை தானியங்களுக்கு மாற்றாக உட்கொள்ளும்போது அதிக எடை போடாது. சீக்கிரம் பசி எடுக்காது. குறைவாக உண்டாலே போதும்.

ஜீரண மண்டலம்: பலவிதமான அமிலத்தன்மை உணவுகள் - முக்கியமாக தானியங்கள், பருப்பு, பயறு வகைகள் சாப்பிடும் பலருக்கும் புளித்த ஏப்பம், அஜீரணம் வர வாய்ப்புகள் உண்டு. பனிவரகு உட்கொள்ளும் போது சுலபமாக ஜீரணமாகும். புளிப்பு ஏப்பம் வராது. அமிலத் தன்மை அதிகரிக்காது.

மாதவிடாய் பிரச்னைகள்: மாதவிடாய் நிற்கும் காலங்களில் பெண்களுக்கு ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படும். அதனால் பலருக்கு உயர் ரத்த அழுத்தம், சிடுசிடுப்பான தன்மை போன்றவை ஏற்படாமல் தடுக்கும். நின்ற பின் தினமும் உட்கொள்ளும் போது சுலபமாக இதய நோய், சிறுநீரகக் கற்கள் போன்றவை வராமலிருக்க உதவும்.

கர்ப்பிணிகள்: இதில் உள்ள ‘கோலின்’ எனப்படும் பி வைட்டமின் கர்ப்பிணிகளுக்கு நன்மை செய்யும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இந்தச் சத்து முக்கிய தேவை. 100 கிராம் அளவில் ஒரு நாளைய தேவையை சுலபமாகப் பெற இயலும். மன உளைச்சலை குறைக்கும். மூன்றாவது டிரைமெஸ்டரில்  ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை வராமலும், தாய் - தந்தையரிடம் இருந்து தலைமுறையாக வரும் பலவித மரபணுக் குறைபாடுகளில் வரும் நோய்களையும் தடுக்கும்.

வயதான பின் வரும் மறதி: இதில் உள்ள பல சத்துகள் முக்கியமாக ‘கோலின்’ எனப்படும் பி வைட்டமின் மற்றும் பலவித அமினோ அமிலங்கள் வயதான பின் வரும் ஞாபக மறதி வராமலிருக்க உதவும்.பனிவரகை நாம் பலவிதமாக நமது சமையலில் சேர்க்கலாம்.சத்துமாவாக, கஞ்சியாக தயாரித்து பாலும் தேனும் கலந்தும் குடிக்கலாம் அல்லது சாலட், காய்கறி வதக்கல், சூப் போன்ற வற்றில் சேர்க்கலாம்.இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் என்று விதவிதமான டிபன் செய்யலாம்.

மதிய உணவுக்கு அரிசிக்கு மாற்றாக சமைத்து உண்ணலாம்.கோதுமை அலர்ஜி உள்ளவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் ரொட்டி போன்ற உணவாகவும் செய்யலாம்.குழந்தைகளுக்கு கேக், பிஸ்கெட் போன்றவை மட்டுமின்றி அல்வா, லட்டு, பாயசம் போன்ற பலவிதமான இனிப்புகளையும் செய்யலாம்.

பனிவரகு முளை வெந்தயக் கஞ்சிஎப்படிச் செய்வது? பனிவரகை வெறும் கடாயில் சிவக்க வறுக்கவும். நல்ல மணம் வந்ததும் இறக்கி அதோடு உரித்த பூண்டு சேர்த்து பிரஷர் குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். கொதி வந்ததும் முளை கட்டிய வெந்தயத்தை சேர்த்து மூடி வெயிட் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும். மூடியைத் திறந்த பின் கெட்டியான தேங்காய்ப் பால், சிறிதே உப்பு சேர்த்து கலந்து சூடாக்கி கொதி வருவதற்கு முன்பு இறக்கிப் பரிமாறவும்.

பனிவரகு பேரீச்சம்பழம் அக்ரோட் பொங்கல்

என்னென்ன தேவை?

பனிவரகு - 1/4 கப், பால் - 1/2 லிட்டர், பனங்கல்கண்டு பொடித்தது - 1/2 கப், நறுக்கிய பேரீச்சம்பழம் மற்றும் அக்ரோட் - தலா 1/4 கப், நெய் - 1 டீஸ்பூன், சுக்குத் தூள் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன், சோம்புத் தூள் - 1/4 டீஸ்பூன், வேகவைத்த பயத்தம் பருப்பு - 1/4 கப்.

எப்படிச் செய்வது?

பாலுடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். கொதிக்கும் போது கழுவிய பனிவரகு சேர்த்து அவ்வப்போது கலந்து விட்டுக் கொண்டே நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். வெந்து பாலும் வற்றியதும் வேகவைத்த பயத்தம் பருப்பு, பொடித்த பனங்கல்கண்டு, பேரீச்சம் பழம், அக்ரோட் சேர்த்து சில நிமிடங்கள் வைக்கவும். சுக்குத் தூள், ஏலக்காய், சோம்புத் தூள் சேர்த்து சிறிது நெய்விட்டு கலந்து இறக்கவும். பனிவரகு வாங்கிபாத்

என்னென்ன தேவை?

பனிவரகு - 1/2 கப், தண்ணீர் 2 1/2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கப், பூண்டு - 3 பற்கள், தக்காளி - 2, கத்தரிக்காய் - 200 கிராம்(பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும்), இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், கரம் மசாலாத் தூள் - 1/4 டீஸ்பூன், வாங்கிபாத் தூள் - 3/4 டீஸ்பூன், எண்ணெய் - வதக்க தேவையான அளவு, தாளிக்க - கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு.

எப்படிச் செய்வது?

தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். கொதிக்கும் போது கழுவிய பனிவரகு சேர்க்கவும். மறு கொதி வந்ததும் தீயை குறைத்து மூடி வைக்கவும். வெந்து ஈரம் வற்றியதும் இறக்கி ஆறவிட்டு உதிர்த்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி தாளிக்கும் பொருட்களை சேர்த்து வறுபட்டதும் வெங்காயம் சேர்க்கவும்.

பாதி வதக்கிய போதே இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். வெங்காயம் சிவந்ததும் அரிந்த தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும். அரிந்த கத்தரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, வாங்கிபாத் மசாலா, மிளகாய் தூள், கரம் மசாலாத் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். வேக வைத்த பனிவரகு சேர்த்து நன்கு சூடாகும் வரை கலந்து விடவும். மதிய உணவுக்குப் பரிமாறலாம்.

பலவித மரபணுக் குறைபாடு நோய்களையும் பனிவரகு தடுக்கும்!

(சத்துகள் பெறுவோம்!)

எஸ்.மல்லிகா பத்ரிநாத்