சாக்லெட் வாழ்க்கை!



சுகர் ஸ்மார்ட்

1 .‘‘ரத்த சர்க்கரை எகிறியதன் விளைவாக நானும் நீரிழிவுக்குள் வந்து விட்டேன். இது என்னை கொல்லப் போவதில்லை. என்றாலும், நான் சரியாகச் சாப்பிட வேண்டும்... உடற்பயிற்சி செய்ய வேண்டும்... எடையைக் குறைக்க வேண்டும்... மீதி வாழ்க்கை முழுக்க நான் நலமாக இருக்க எனக்கு இது உதவி செய்யப்போகிறது!’’ என்கிறார் டாம் ஹேங்ஸ்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பது உண்மைதான். ஆனால், அந்தத் தெய்வம் பக்த னையே சோதிப்பது போல, தொழிலும் தன் வேடிக்கை விளையாட்டுகளை உழைப்பாளி யின் மீது நிகழ்த்துவதுண்டு. அப்படியொரு சுழலில் சிக்கியவர்தான் ஆஸ்கர் வென்ற ஹாலிவுட் நடிகர் டாம் ஹேங்ஸ். Big (1988), Philadelphia (1993), Forrest Gump (1994), Apollo 13 (1995), Saving Private Ryan, You‘ve Got Mail (1998), Cast Away (2000), The Da Vinci Code (2006), Captain Phillips, Saving Mr. Banks (2013) உள்பட 70க்கும் அதிகப் படங்களில் நடித்தவர். போலார் எக்ஸ்பிரஸ், டாய் ஸ்டோரி ஆகிய அனிமேஷன் படங்களிலும் இவரது குரல் பலருக்குப் பரிச்சயமே.

இந்தக் கடின உழைப்பாளியையும் டயாபடீஸ் விட்டுவிடவில்லை. காரணம் என்னவென அவரே சொல்கிறார்...‘‘36 வயதிலிருந்தே எனக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தது. 1992ல், முதன்முதலாக நீரிழிவுக்கான அறிகுறிகள் ஆரம்பமாகின. ‘League of  Their Own’ படத்தில் பேஸ்பால் கோச் ஆக நடித்த போது, பதிமூன்றரை கிலோ எடை அதிகரித்திருந்த நேரம் அது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘Cast away’ படத்தில் எங்கோ ஒற்றை மனிதனாகத் திரிந்த போது, 25 கிலோ இளைத்து, 77 கிலோ ஆகிவிட்டேன். அப்போது டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்... ‘இப்போது நீங்கள் ஹைஸ்கூல் பையன் எடைக்குக் கிட்டத்தட்ட வந்துவிட்டீர்கள்.

அதனால் உங்களுக்கு டைப் 2 டயாபடீஸ் வராது!’ஹைஸ்கூலில் என் எடை 44 கிலோதான் இருந்தது. அந்த எடையை வைத்துக்கொண்டு நான் எப்படி நடிப்பதாம்! அதனால் டாக்டரிடம் கூறினேன்... ‘டயாபடீஸ் வந்தாலும் பரவாயில்லை டாக்டர்... என்னால் சமாளிக்க முடியும். எடையை அதிகரிப்பதும் குறைப்பதும் என் தொழிலின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது!’ என்று...’’  டாம் விளையாட்டாகக் கூறியது, 2013ல், அவரது 57 வயதில் நிஜமாகிவிட்டது. டைப் 2 பட்டியலில் அவரும் இணைந்துவிட்டார்.

20 ஆண்டுகளையும் தாண்டி, ‘ப்ரீ டயாபடீஸ்’ எனும் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் இருந்தார் அவர். இவ்வளவு காலம் நீரிழிவுக்குள் அவர் மூழ்காமல் தப்பியதற்குக் காரணம் அவரது முறையான வாழ்க்கை முறை.

டயட், உடற்பயிற்சியில் அவர் எப்போதும் எந்தக் குறையும் வைப்பதில்லை.‘‘திடீரென எடையை அதிகரிக்கச் செய்வதும் எடையைக் குறைப்பதும் உடலின் சமநிலையை பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை விரைவுபடுத்துகிறது. டாம் ஹேங்ஸ் போன்ற நடிகர்கள் இந்த விஷயத்தில் மிக அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்...’’ என்கிறார் டாக்டர் ஹாலி பிலிப்ஸ்.

எடையைக் குறைப்பதற்காக டாம் ஹேங்ஸ் பின்பற்றிய YoYo டயட் கூட, அவருக்கு நீரிழிவை அளித்திருக்கலாம் என்கிறார்கள் சில மருத்துவர்கள். எனினும் தன் தொழிலுக்காக எல்லா அசௌகரியங்களையும் டாம் சகித்துக்கொள்ள நேர்ந்தது. தொழில்முறைச் சிக்கல்களால் நீரிழிவை நோக்கி காந்தம் போல இழுக்கப்படும் சூழல் உருவானாலும், திட்டமிட்ட செயல்பாடுகள் மூலம், நீரிழிவைத் தள்ளிப் போட முடியும். இதற்கு டாம் ஹேங்ஸின் வாழ்க்கை பின்பற்ற வேண்டிய உதாரணம்!

‘‘என் வாழ்க்கை இப்போது ஒரு சாக்லெட் பாக்ஸ் போல மாறிவிட்டது. இனிப்பு எல்லோருக்கும் பிடிக்கும்தான். ஆனால், அளவும் மிக முக்கியம்’’ என்று ஒரு கவிதை போல டயாபடீஸ் தத்துவம் சொல்கிறார் டாம்! திடீரென எடையை அதிகரிக்கச் செய்வதும் எடையைக் குறைப்பதும் உடலின் சமநிலையைப் பாதிக்கும். இது டைப் 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பை விரைவுபடுத்துகிறது...

ஸ்வீட் டேட்டா

2035ம் ஆண்டுக்குள் உலக மக்களில் பத்தில் ஒருவரைக் கைப்பற்றுவதற்காக நீரிழிவு வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது!

2. பொதுவான சந்தேகங்கள்

‘‘என் முப்பதாண்டு அனுபவத்தில் சர்க்கரை நோயாளிகளில் பலர் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்விகள் சிலவற்றுக்கு இங்கே பதில் சொல்லியிருக்கிறேன். இந்த சந்தேகங்கள் உங்களுக்கும் வந்திருக்கலாம். படித்து, புரிந்து, பலன் பெறுங்கள்...’’ என்கிறார் டாக்டர் கு.கணேசன்.? ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளதாமே! நான் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாமா?! சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. ஓட்ஸ் என்பதும் ஒரு தானியம்தான். 100 கிராம் ஓட்ஸ் 340 கலோரி தருகிறது.

அரிசியும் கோதுமையும் இதே அளவு கலோரிகள்தான் தருகின்றன. ஆக, அரிசி சாதம் சாப்பிடுவதும் ஓட்ஸ் சாப்பிடுவதும் ஒன்றுதான். என்றாலும், ஓட்ஸை நீங்கள் சாப்பிட விரும்பினால், அதன் வடிவத்தைக் கொஞ்சம் மாற்றிக்கொள்ள வேண்டும். 30-40 கிராம் ஓட்ஸ் எடுத்து, பாலில் நனைத்து சாப்பிட்டால் சரி. அதையே கூழ் அல்லது கஞ்சிபோல சாப்பிட்டால், ரத்த சர்க்கரை உடனே எகிறிவிடும்!

? சிறு வயதிலிருந்தே அதிக இனிப்பு சாப்பிட்டுப் பழகிவிட்டேன். இப்போது திடீரென இனிப்பை நிறுத்த முடியவில்லை. இனிப்பையும் சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக மாத்திரை யையும் போட்டுக் கொள்ளலாமா?! உங்களுக்கு மட்டுமல்ல... பலருக்கும் இந்த சந்தேகம் வருவதுண்டு. அதனால், சிறிது விளக்கமாகவே பதில் சொல்கிறேன். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிகப்படியாக இருக்கிற ரத்த சர்க்கரையைக் குறைக்க இன்சுலின் மருந்தைச் செலுத்துகிறோம் அல்லது மாத்திரையைக் கொடுத்து இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிறோம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்கெனவே கணையம் சோர்வடைந்த நிலையில் இருக்கும் என்பதால், சர்க்கரை நோய் மாத்திரைகளால் ஓரளவுக்குத்தான் கணையத்தைத் தூண்டி இன்சுலினைச் சுரக்கச் செய்யமுடியும். கூடுதலாக இனிப்புப் பொருட்களை சாப்பிட்டுக்கொண்டு, கூடுதலாக சர்க்கரை நோய் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டாலும், கணையத்தில் இன்சுலின் சுரப்பது அதிகரிக்காது. வண்டியின் பாரம் தாங்காமல் படுத்துவிட்ட மாட்டை அடித்துத் துன்புறுத்தினால் அது எழுந்து நடக்க சண்டித்தனம் செய்யும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதுபோலத்தான் இதுவும். ரொம்பவும் களைத்துப்போன கணையத்தை அதிக மாத்திரைகளால் தூண்டினாலும் இன்சுலின் சுரக்காது. ஆகவே, நீங்கள் இனிப்பை அதிகமாக சாப்பிட்டால், அதில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் தங்கி நோயை அதிகப்படுத்தவே செய்யும். குறையாது. வேண்டாம், வீண்வம்பு!

? சர்க்கரை நோயாளிகள் பூமிக்கு அடியில் விளையும் உணவுகளைச் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள். நான் கேரட் சாப்பிடலாமா?

! பூமிக்கு அடியில் விளைபவை எல்லாமே கிழங்குகள் இல்லை. உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவை மாவுச்சத்து அதிகமுள்ள கிழங்குகள். கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவை வேர்கள்.

இவற்றில் நார்ச்சத்து அதிகம். பூண்டு, வெங்காயம் போன்றவை தண்டுகள். இவற்றில் கிழங்குகளைத்தான் சர்க்கரை நோயாளிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள கேரட், வெங்காயம், பூண்டு போன்றவற்றை வேண்டிய அளவுக்கு சாப்பிடலாம். கிழங்குகளைவிட கேரட் குறைந்த கலோரிகளைத்தான் தருகிறது.

? சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடலாமா?

! பரோட்டா மைதாவில் செய்யப்படுகிறது. மைதாவில் மாவுச்சத்து அதிகம். இதில் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. ஒரு நடுத்தரமான பரோட்டா 400 கலோரி தருகிறது. இது உடனே ரத்த சர்க்கரையை அதிகரித்துவிடும்.

? சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேறு ஏதேனும் நோய் வரும்போது சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளைத் தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளலாமா?
! கூடாது. சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளை அவசியம் சாப்பிட வேண்டும். வேறு நோயின் காரணமாக நோயாளியின் உணவுமுறை மாறினால், அதற்கேற்ப டாக்டரிடம் ஆலோசித்து மாத்திரையை அல்லது இன்சுலின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

நோயாளிக்கு ரத்த சர்க்கரை மிகவும் குறைந்தாலொழிய அதாவது, சர்க்கரைத் தாழ்நிலை வந்தால் ஒழிய  சர்க்கரை நோய் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. ரத்தத்தில் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அந்த நோயாளிக்கு ஏற்படுகின்ற எந்த நோயும் குணமாகும்.

? டாக்டர் கொடுத்த மாத்திரையை சரியாகச் சாப்பிடுகிறேன். தினமும் வாக்கிங் போகிறேன். என்றாலும் என் ரத்தத்தில் சர்க்கரை உணவுக்குப்பின் 220 மி.கி. உள்ளது. இது ஏன்?
! பின்வரும் காரணங்கள் இருக்கலாம். உங்கள் டாக்டரிடம் ஆலோசித்து சிகிச்சையில் சில மாற்றங்களை செய்துகொள்ளுங்கள்...

* உணவுமுறை சரியில்லை.
* உணவு சாப்பிடும் நேரம் சரியில்லை.
* உடற்பயிற்சி போதுமானதாக இல்லை.
* பொருத்தமில்லாத மாத்திரை.
* மாத்திரையின் அளவு போதுமானதாக இல்லை.
* இன்சுலின் தேவைப்படலாம்.
* மன அழுத்தம்.

? எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கமும் உள்ளது. இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
! சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் பல ஆபத்துகள் அணிவகுக்கும். முதலில் தொண்டையிலும் நுரையீரலிலும் அடிக்கடி அழற்சி ஏற்படும். புண் உண்டாகும். சளி பிடிக்கும். புகையிலையில் உள்ள ‘நிகோட்டின்’ நச்சு ரத்தக்குழாய்களை சுருக்கி உயர் ரத்த அழுத்தம் சின்ன வயதிலேயே வருவதற்கு ஏற்பாடு செய்யும்.

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை இவர்களுக்கு சீக்கிரத்தில் வரக் காத்திருக்கும். கால்களுக்கு செல்லும் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இதனால் கால்களுக்கு ரத்தம் குறைந்து கால்விரல் அழுகிவிட வாய்ப்புண்டு. வாய்ப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவையும் வரலாம்.

? சர்க்கரை நோய் உள்ளவர்கள் வைட்டமின் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டியது அவசியமா?
!சர்க்கரை நோயாளிகளுக்கு உடலில் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்த பாதிப்புகளுக்குத் துணைபோவது வைட்டமின் குறைபாடும் ‘ஃப்ரீ ரேடிகல்ஸ்’  (Free Radicles) எனப்படும் வேதிப்பொருட்களும்தான். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இந்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.     
? எனக்கு 20 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. எனக்கு அடிக்கடி உடல் குளிர்கிறது. இது ஏன்?

! ‘தைராய்டு சுரப்பு’ குறைவாக இருக்க (Hypothyroidism) வாய்ப்புள்ளது. தைராய்டு ரத்தப் பரிசோதனை (T3, T4, TSH) செய்து பார்த்துக்கொண்டால் அது தெரிந்துவிடும்.
? 3 ஆண்டுகளாக என் கணவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. அவருக்கு அடிக்கடி உடல்வலி வருகிறது. இது ஏன்?

! உங்கள் கணவருக்கு சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லையென்றால், உடல்வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருந்தும் உடல்வலி இருந்தால் மூட்டு நோய்கள், தசை நோய்கள், வைட்டமின் குறைபாடு, வைரஸ் தொற்று, ரத்தசோகை என்று பல காரணங்கள் இதற்கு உள்ளன. ? சர்க்கரை நோயாளிகள் ‘நட்ஸ்’ என்கிற கொட்டை வகைகளை சாப்பிடலாமா?

! பொதுவாக முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டை வகைகளில் கலோரி அதிகம் என்பதால் இவற்றை சாப்பிட யோசிப்பார்கள். இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள், தாதுச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடண்ட் சத்துகள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இவற்றை சாப்பிட வேண்டியதும் அவசியம். அதாவது, கொழுப்பு உணவுகளைத் தவிர்த்துவிட்டு, தினமும் 15-20 கிராம் அளவுக்கு ஏதாவது ஒரு கொட்டை வகையை சாப்பிடலாம்.

? 2 வருடங்களாக சர்க்கரை நோய் உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். என்றாலும் உடல் அசதியாகவும் சோர்வாகவும் உள்ளது. என்ன காரணம்?
! உங்கள் உடலின் முறையான செயல்பாட்டுக்குத் தேவையான எரிபொருள், குளுக்கோஸ். சர்க்கரை நோய் நல்ல கட்டுப்பாட்டில் இருந்தால், அந்த  குளுக்கோஸ் சரியான அளவில் செல்களுக்குள் நுழைந்து, சக்தியைத் தரும். உடலில் சோர்வு இருக்காது.

உங்களைப் பொறுத்த அளவில் சர்க்கரை நோய் சரியான கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிகிறது. அதனால்தான் உங்கள் உடல் செல்களுக்குத் தேவையான சத்து கிடைக்காமல், சோர்வைத் தருகிறது. சத்து இல்லாவிட்டால் சக்தியில்லை. அப்போது உடலில் களைப்பும், சோர்வும், பலவீனமும் ஏற்படுவது நியாயம்தானே!

முதலில் நீங்கள் ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த சரியான அளவில் மாத்திரை அல்லது இன்சுலின் பயன்படுத்துங்கள். வைட்டமின் மற்றும் தாதுக்கள் அடங்கிய சத்து மாத்திரையையும் சாப்பிடுங்கள். இவற்றோடு உடற்பயிற்சியும் செய்யுங்கள். புத்துணர்வு பெறுவீர்கள்.

? எனக்கு சர்க்கரை நோயும் ரத்தசோகையும் உள்ளது. இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம் பழத்தை சாப்பிடலாமா?
! பேரீச்சம்பழம் சாப்பிடக்கூடாது. பதிலாக, முருங்கைக்கீரை சாப்பிடலாம்.
? நீரிழிவு நோய் நுரையீரல்களை பாதிக்குமா?

! கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய் நுரையீரல்களை நிச்சயம் பாதிக்கும். காச நோய், நிமோனியா போன்ற நோய்கள் தாக்கும்.? நான் ஒரு சுகர் பேஷன்ட். நன்றாகத்தான் இருக்கிறேன். நான் எதற்கு வருடா வருடம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்துகொள்ள வேண்டும்? என்ன அவசியம்?! ‘வருமுன் காப்பது நல்லது’ என்பதை சர்க்கரை நோயாளி ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு பல சிக்கல்கள் உடலில் இருந்தாலும் வெளியில் தெரிவதற்கு நாளாகும்.

உதாரணத்துக்கு, இதயத்தமனி ரத்தக் குழாய்களில் 90 சதவிகிதம் அடைத்த பிறகுதான் நெஞ்சுவலியே வரும். இந்த நெஞ்சுவலிகூட சிலருக்கு வெளிக்காட்டாது. திடீரென்று மயக்கம் வந்து உயிருக்கு ஆபத்து வந்துசேரும். அப்போது டாக்டர்களால் அவர்களைக் காப்பாற்ற முடியாது.

இந்த மாதிரி நிலைமைகளைத் தவிர்க்கத்தான் வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறோம். இப்படிப் பரிசோதனை செய்யும்போது 100 பேரில் 10 பேருக்கு வெளியில் தெரியாமல் இருந்த பல நோய்கள் உடலுக்குள் உள்ளதைக் கண்டுபிடித்து சிகிச்சை கொடுத்திருக்கிறோம். உயிருக்கு வரக் காத்திருந்த ஆபத்துகளைத் தடுத்திருக்கிறோம்.

(கட்டுப்படுவோம்... கட்டுப்படுத்துவோம்!)

தாஸ்