செல்லப் பிராணிகளுக்கும் உண்டு மன அழுத்தம்!



செல்லமே செல்லம்

இன்றைய எந்திரத்தனமான உலகில் மனிதர்களையும் மன அழுத்தத்தையும் பிரிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். வீட்டில் வளர்க்கப்படும் நாய், பசு, கிளி, பூனை போன்ற செல்லப்
பிராணிகளுக்கும் மன அழுத்தம் வரும் என்றால் நம்புவீர்களா?‘‘வளர்ப்புப் பிராணிகள் முதலில் இயற்கையான சூழலில் வளர்ந்து தனக்கு தேவையானவற்றை கற்றுக்கொள்ளும். அவற்றை வீட்டில் வளர்க்க ஆரம்பித்த பிறகு, தன் இயல்பான குணங்களில் இருந்து மெல்ல மெல்ல மாற ஆரம்பிக்கும்.

முக்கியமாக, வீட்டில் உள்ளவர் எத்தகைய குணநலன்கள் உடையவராக இருக்கிறாரோ, அந்த குணங்கள் எல்லாம் வளர்ப்புப் பிராணிகளுக்கும் ஏற்படும். அனைத்து வளர்ப்புப் பிராணிகளுக்கும் 30 சதவிகிதம் இயல்பான குணமும், 70 சதவிகிதம் வளர்ப்பவரின் குணமும் காணப்படும். அதனால்தான் ஆங்கிலத்தில் ‘Like The Owner; Like The Dog’ என்று கூறுவார்கள்’’ என்கிற கால்நடை மருத்துவர் சரவணன், செல்லப் பிராணிகளுக்கு மன அழுத்தம் வருவதன் பின்னணி பற்றிப் பேசுகிறார்.

‘‘வளர்ப்புப் பிராணிகளுக்கு மன அழுத்தம் வருவதற்கு எந்த அறிவியல் காரணமும் கிடையாது. மன அழுத்தத்துக்கு ஆளான வளர்ப்புப் பிராணிகள் சாப்பிடாது. ஒளிந்து கொள்ளும். உடல் நடுங்கும். அதிகமாக மூச்சு வாங்கும். துணி, ரிமோட் போன்றவற்றை கடித்து நாசப்படுத்துவதோடு, தன் உடலையும் கடிக்க ஆரம்பிக்கும். இடைவிடாமல் குரைக்க ஆரம்பிக்கும்.

சிலர் வெளியூர் போகும்போது, தங்களுடைய பிராணிகளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு போவார்கள். இது சரியான செயல் கிடையாது. பெரும்பாலான வளர்ப்புப் பிராணிகளுக்கு ஹாஸ்டல் வாசம் பிடிக்காது. இதனால் அவை மன உளைச்சலுக்கு ஆளாகும். அந்த விலங்கு கள் எதைக் கண்டாலும் பயப்பட ஆரம்பிக்கும். அல்லது முரட்டு குணம் மிகுந்த விலங்குகளாக மாறிவிடும்.

அதிக ஓசையும் வளர்ப்புப் பிராணிகளுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். அவற்றின் மூக்கு ஈரமாக இருப்பது மன உளைச்சலுக்கான அறிகுறி. 20க்கும் குறைவான அதிர்வெண் கொண்ட சத்தம் மனிதர்களுக்கு கேட்காது. நாய் உள்பட செல்லப்பிராணிகளால் இந்த ஓசையை நிச்சயம் கேட்க முடியும். பட்டாசு வெடிச்சத்தத்தைக் கேட்டு, வீட்டைவிட்டு ஓடிப்போன நாய்களும் உண்டு. உயிரிழந்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. குரைக்கிற நாய் கடிக்காது. பயந்த நாய் குரைக்காது... ஆனால் கடிக்கும்.   
     
மன அழுத்தத்துக்கு ஆளான செல்லப்பிராணிகளுக்கு - முக்கியமாக நாய்களுக்கு மருத்துவ சிகிச்சை தர தொடங்குவதற்கு முன், 6 அல்லது 7 மாதங்களுக்கு நாய் பயிற்சியாளர் மூலம் பயிற்சி அளிக்க வேண்டும். அவர் அளிக்கும் அடிப்படையான பயிற்சிகளுக்குப் பிறகு, 60ல் இருந்து 70 சதவிகிதம் வரை பயம் மறையும். செல்லப் பிராணிகளின் பருவ முதிர்ச்சிக்கு முன்பே பயிற்சி கொடுக்க வேண்டும். 15 மாதங்கள் அல்லது 2 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுக்கப்படும் பயிற்சி முறைகளால் செல்லப்பிராணிகள் பயிற்சியாளருக்கு மட்டுமே கட்டுப்படும்.

மன அழுத்தம் காரணமாக துன்பப்படும் செல்லப் பிராணிகளுக்கு தரப்படும் மருந்து மாத்திரைகள் 50 சதவிகிதம்தான் மன அழுத்தத்தைப் போக்கும். இந்த மாத்திரைகளைத் தொடர்ந்து கொடுக்காமல் பாதியில் நிறுத்திவிட்டால், மீண்டும் மன அழுத்தம் உண்டாகும். மருந்து மாத்திரைகள் மூலம் வரும் தீர்வு தற்காலிகமானதுதான். வளர்ப்புப் பிராணிகளை கட்டி வைத்து வளர்ப்பது உதவாது. திறந்தவெளியில் விடுவதே நன்மை தரும். பிரிவு மன உளைச்சலை உண்டாக்கும்.

வீட்டில் தனியாக விட வேண்டிய சூழல் வந்தால், உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தயாராக வைத்து, சுதந்திரமாக உலவ விடுவது நல்லது. டி.வி. அல்லது ரேடியோவை ஒலிக்கச் செய்தால், தன்னுடன் யாரோ உள்ளார்கள் என்ற மனநிலை வளர்ப்புப் பிராணிகளுக்கு உண்டாகும். இந்த செயல்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும். வளர்ப்புப் பிராணிகளின் மன அழுத்தத்தை குறைக்க சுற்றுச்சூழலும் மிக உதவும். வீட்டில் உள்ளவர்கள் இந்தப் பிராணிகளிடம் அன்பு காட்ட வேண்டும்.

வாரத்துக்கு ஒருதடவை கண்டிப்பாக, காலை வேளைகளில் கடற்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அப்படி அழைத்துச்செல்லும்போது, கழுத்துப்பட்டை, கயிறு போன்றவை சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.  மன அழுத்தத்தைக் குறைக்க உணவுப்பழக்கமும் மிக முக்கியம். சைவ உணவுகளை கொடுத்து வளர்த்தால் 90 சதவிகிதம் மன அழுத்தம் இருக்காது. நாட்டுத் தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, சாக்லெட், காரசார உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால், கிட்னியில் கல் உண்டாகக்கூடும்.

மன உளைச்சலுக்கான மருத்துவப் பரிசோதனைகளைவிட, அவற்றின் உணர்வுகளையும் உடலில் தென்படும் அறிகுறி களையும் புரிந்து கொள்வது நல்லது. குட்டிகளை ஈன்றெடுக்கும் காலத்தில் வளர்ப்புப் பிராணிகளை தனியாக விடக்கூடாது. இணையோடு இருக்கச் செய்ய வேண்டும். உரிமையாளரும் 2-3 நாட்களுக்கு முன்பிருந்தே கூடுதல் கரிசனத்தோடு ஆதரவாக இருக்க வேண்டும்...’’ வளர்ப்புப் பிராணிகளின் மூக்கு ஈரமாக இருப்பது மன உளைச்சலுக்கான அறிகுறி!

கேப்ஸ்யூல்


சிலருக்கு உடல் எப்போதும் சூடாக இருப்பது ஏன்?
டாக்டர் தவப்பழனி .

‘‘உடலின் வெப்பநிலை ஆரோக்கியமான ஒருவருக்கு 37 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டும். இந்த வெப்பநிலை ஒவ்வொருவருக்கும் சிறிது மாறுபடும். அதனால்தான் சிலரது உடல் கொஞ்சம் குளுமையாக இருப்பதுபோலவும் சிலரது உடல் அதிக வெப்பத்துடன் இருப்பது போலவும் தோன்றுகிறது. மருத்துவ ரீதியாக இதுபோல ஒருவரது உடல் வெப்பநிலை சிறிது அதிகமாக இருப்பதாலோ, குறைவாக இருப்பதாலோ எந்த பிரச்னையும் இல்லை (காய்ச்சலின் போது உடலின் வெப்பம் உயர்வது வேறு பிரச்னை).

ஒருவேளை, தன்னுடைய உடல் அதிக வெப்பத்தோடு இருப்பதாக ஒருவர் உணர்ந்தால் பொதுமருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். தைராய்டு குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நாளமில்லாச் சுரப்பிகள் மருத்துவரிடம் தைராய்டு பரிசோதனையை செய்துகொண்டு, சந்தேகத்தைப் போக்கிக் கொள்ளலாம். உடற்சூட்டைக் குறைக்கும் தர்பூசணி, மாதுளை, எலுமிச்சைப்பழம், இளநீர் போன்றவற்றை அவ்வப்போது சேர்த்துக் கொள்வதும் பலன் தரும்!’’

- தேசிகன்

- விஜயகுமார்