மூத்த குடிமக்களுக்கான சட்டம்!



‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என கூட்டுக் குடும்பத்துக்குப் பெயர்  பெற்ற நம் நாட்டிலும், இன்று தனிக் குடும்பங்கள் பெருகி விட்டன. பண்டைய காலம் தொட்டு, விவசாயம், நெசவு போன்ற அனைத்துத் தொழில்களிலும் குடும்பத்தைச் சார்ந்த அனைவரும் பங்கெடுத்து கூட்டாகவே செய்து வாழ்ந்து வந்தார்கள்.

காலப்போக்கில் படிப்புக்குத் தகுந்த வேலையைத் தேடி, கிராமங்களை விட்டு நகரங்களுக்கு புலம் பெயர்வது அதிகரித்தது. இன்றோ, பொருள் ஈட்டுவதற்காக வெளிநாடுகளுக்கு செல்லக் கூடிய நிலையும் பெருகி விட்டது.

ஒரு வேளை அதே ஊரில் வசிக்கக்கூடிய நிலை இருந்தாலும், வயது முதிர்ந்தவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையே மனதளவில் ஒன்றிப்போகாத காரணத்தாலும் ஒரே குடும்பமாக வாழக்கூடிய சூழல் அரிதாகிவிட்டது. பெற்றெடுத்து, பாராட்டி, சீராட்டி, ஊர் மெச்ச வளர்த்த பெற்றோர் ஆதரவற்று விடப்பட்டது யாரால்? இந்நிலைக்கு யாரை குறை கூறுவது? 

1985ல் வெளிவந்த ‘பூவே பூச்சூடவா’ திரைப்படம் பார்ப்பவர் மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்தது நினைவிருக்கலாம். அப்படத்தில், பேத்தியின் வருகைக்காகக் காத்திருக்கும் பாட்டியின் நிலைதான் இன்று பல மூத்த குடிமக்களின் நிலை. நாம் சிறுவராக இருந்த போது, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என பல உறவுகளுடன் கூட்டுக் குடும்பமாக இணைந்து வாழ்ந்த அனுபவத்தை எண்ணி இன்றும் மகிழ்கிறோமே!

ஆனால், அவ்வாறான ஒரு மகிழ்ச்சியை நம் சந்ததிக்குக் கொடுக்க தவறி வருகிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. கூட்டுக் குடும்பங்களின் சிதைவினால் தான், கணவன் - மனைவியிடையே ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளுக்கும் கூட  நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து தாக்கல் செய்யக்கூடிய நிலை பெருகி வருகிறது.

 அதனால் ஒற்றைப் பெற்றோரால் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டிய சூழலும் அதிகரித்து வருகிறது. அதோடு, தனிக் குடும்பமாக வாழ்ந்துவரும் பெற்றோர் பெரும்பாலும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகளை சரிவர பராமரிக்க முடியாமலும் போகிறது. அதனால் சில குழந்தைகள் தவறான பாதையை தேர்ந்தெடுக்கும் நிலையும் உள்ளது. சோலைவனமாக பூத்துக் குலுங்க வேண்டிய குடும்ப வாழ்வு வறண்ட பாலைவனமாக மாறி வருகிறது என்பது வருந்தக்கூடிய ஒரு நிலை.

மூத்த குடிமக்களுக்கு சட்டப் பாதுகாப்பும் ஏட்டளவில் உள்ளதே தவிர, நடைமுறைப் படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. நம் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் பேர் மூத்தகுடிமக்களாக இருக்கிறார்கள். இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தின் ஷரத்து 41, ‘முத்த குடிமக்களின் நலன் பேணுவது அவசியம்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. ஐ.நா. அமைப்பு 1999 ஐ உலக மூத்த குடிமக்களின் ஆண்டாக அறிவித்தது. இந்தியாவும் முதன்முதலாக 1999ல், மூத்த குடிமக்களின் தேசிய கொள்கையை வெளியிட்டது.

மத்திய - மாநில அரசுகளும், அரசு சார்ந்த துறைகளும், வங்கிகளும், மருத்துவமனைகளும், போக்குவரத்துத் துறைகளும் - குறிப்பாக ரயில்வே - பல நிலைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இருப்பினும் இன்று ஏழை, பணக்காரர் பேதமில்லாமல் அனைத்து மூத்த குடிமக்களும் ஏதோ ஒரு வகையில் ஆதரவில்லாமல் விடப்பட்டிருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். 

இந்தியாவில், 2007ல், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 2009ல் அதற்கான விதிகள் இயற்றப்பட்டுள்ளன. இப்படி ஒரு சட்டம் நடைமுறையில் இருப்பது, மூத்த குடிமக்களின் நிலைமை சமுதாயத்தில் சரிவர இல்லை என்பதையே காட்டுகிறது. இச்சட்டத்தின் கீழ், பெற்ற தாய்-தந்தையர் அல்லது குடும்பத்தைச் சார்ந்த வயது முதிர்ந்த உறவினரை பாதுகாத்து, பராமரிப்பது அவர்களின் குழந்தைகள் மற்றும் வாரிசுகளின் தர்மப்படி மற்றும் சட்டப்படியான கடமை.

 தவறும் பட்சத்தில் இச்சட்டத்தின் கீழ், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள இயலும். இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ், தன்னை பராமரிக்கத் தவறிய மகனிடமிருந்து ஜீவனாம்சம் கோர பெற்றோருக்கு வழிவகை உள்ளது.

இருப்பினும், 2007ம் ஆண்டு சட்டத்தின் கீழ், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர், தங்கள் பிள்ளைகள் அல்லது அவர்களுக்குப் பிறகு அவர்களின் சொத்தினை அடையக்கூடிய வாரிசுகளிடம் ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு கோர வழி செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக மூத்த குடிமக்கள் என 60 வயது கடந்தவர்களையே குறிப்பிடுவோம். ஒரு நபரின்  வாழ்வாதாரத்துக்குத் தேவையான உண்ண உணவு, உடுத்தும் உடை, தங்கும் இடம் மற்றும் மருத்துவச் செலவுகளை தாங்களாகவே தேடிக்கொள்ள இயலாத நிலையில் இருப்பின் அவரை ஆதரவற்ற நிலையில் இருப்பவர் என்று கூறலாம். 

இச்சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்களின் மனுக்களை ஏற்று அதன் மீது துரித நடவடிக்கை எடுக்க தீர்ப்பு ஆணையங்கள் அமைக்க வழி செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல ஆணையத்தின் மூத்த அலுவலரே சமரச அலுவலராகவும் செயல்படுவார். தேவையிருப்பின், மாவட்ட ஆட்சியரே மேல்முறையீடை விசாரணை செய்யவும் சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த நடைமுறையில் பலன் கிடைக்காத நிலையில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறுவழியில்லை. ஒரு மூத்த குடிமகனோ அல்லது குழந்தைகளால் பராமரிக்க முடியாமல் விடப்படும் பெற்றோரோ, தன்னிச்சையாகவோ, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ தீர்ப்பு ஆணையத்தில் மனு செய்யலாம்.

மூத்த குடிமகன் வசிக்கும் இருப்பிடத்துக்கு உட்பட்ட அல்லது கடைசியாக வசித்து வந்த இடத்துக்கு உட்பட்ட அல்லது எங்கு அவர்களின் குழந்தைகள், வாரிசுகள் வசிக்கிறார்களோ அந்த இடத்துக்கு உட்பட்ட தீர்ப்பு ஆணையங்களில் மனு தாக்கல் செய்யலாம். அதோடு, தீர்ப்பு ஆணையமே தன்னிச்சையாக தன் செவிக்கு எட்டும் வழக்குகளை விசாரணை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு மனு கிடைக்கப் பெற்று, எதிர்தரப்பினருக்கு சம்மன் அனுப்பி, அவர்கள் ஆஜராகும் பட்சத்தில், குறைந்தபட்சம் 90 நாட்களுக்குள் விசாரணையை முடிப்பது அவசியம். அவ்வாறு இருதரப்பினரும் ஆஜராகும் பட்சத்தில் முதல் கட்டமாக சமரச முயற்சியின் மூலம் ஒரு முடிவு எட்டவில்லை எனில் விசாரணை மேற்கொள்ளலாம். விசாரணை அதிகாரிக்கு உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பினர் ஆஜராகாத நிலையில் ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கவும் அதிகாரம் உண்டு.

ஜீவனாம்ச தொகையினை அவர்கள் முன்னிலையில் வைப்பீடு (deposit)செய்யவும் ஆணை பிறப்பிக்கலாம். தீர்ப்பு ஆணையத்தின் ஆணையை எதிர்தரப்பினர் நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், அதனை நிறைவேற்றிக் கொள்ளவும் அதிகாரம் உள்ளது. தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத மூத்த குடிமக்களுக்கு, முதியோர் பாதுகாப்பு இல்லங்கள் அமைத்துப் பராமரிக்கவும் போதிய மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்யவும் அரசாங்கத்தை வலியுறுத்த இச்சட்டத்தின் கீழ் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒரு மூத்த குடிமகன் தானத்தின் வாயிலாகவோ, செட்டில்மென்ட் வாயிலாகவோ, தன் வாரிசுகளில் யாரேனும் ஒருவருக்கு சொத்தினை கொடுத்தபின் அவர்கள் அவரை பராமரிக்கவில்லையென்றால், அவர்களிடமிருந்து சொத்துகளை அந்த முத்த குடிமகனுக்கு பெற்றுத்தரவும் இந்த ஆணையத்துக்கு உரிமை உண்டு. 

இச்சட்டத்தின் விதிமுறைகளில், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் காவல் துறை அதிகாரி ஆகியோர் மூத்த குடிமக்களின் உயிருக்கும் உடமைக்கும் எவ்வாறு பாதுகாப்பும் பராமரிப்பும் அளிக்க வேண்டுமென்று விரிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு தேவையான பாதுகாப்பு இல்லங்கள் அமைத்தல், பராமரிப்பு ஆகியவை மாவட்ட ஆட்சியரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு காவல் நிலையமும் அவர்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எந்தவித ஆதரவும் இன்றி தனியே வசிக்கும் மூத்த குடிமக்கள் விவரங்களை சேகரித்து வைப்பது,

ஒரு சமூக சேவகருடன் மாதம் ஒரு முறையேனும் அவர்களின் இல்லம் சென்று குறை கேட்பது, அவ்வாறு அவர்கள் எடுக்கும் கணிப்பினை உயர் காவல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டியது ஆகியவையும் இந்த விதியின் கீழ் அவசியம். மூத்த குடிமக்கள் அமர்த்தும் வேலையாட்கள், வாகன ஓட்டிகள் போன்றோர் பற்றிய தகவல்களை சரி பார்த்து கொடுப்பது காவல் துறையினரின் கடமையே.  

தனித்து விடப்பட்டிருக்கும் மூத்த குடிமக்கள் மீது ஏற்படுத்தப்படும் தாக்குதல், அதனால் அவர்கள் ஈட்டிய பொருளை இழப்பது,  அவர்கள் உயிர்கள் பறிக்கப்படுவது போன்ற துர்சம்பவங்கள் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டன. குறிப்பாக, தனியாக இருக்கும் முதிர்ந்த பெண்களே இவ்வாறான தாக்குதல்களுக்கு இலக்காகிறார்கள். யாரிடம் சொல்வது, எவ்வாறு தங்களை பராமரித்துக் கொள்வது என்று புரியாத நிலை அவர்களுக்கு.

ஏனோ, இன்றைய இளைய தலைமுறையினர் தாங்கள் ஏறி வந்த ஏணிகளை எட்டி உதைத்துவிடுகிறார்கள். ‘நாளை நாமும் அந்த நிலையை எட்டுவது திண்ணம்’ என்பதை மறந்துவிடுகிறார்கள். ஒரு சட்டம் இயற்றி நம் பெற்றோரை பராமரிக்க வலியுறுத்த வேண்டிய நிலையில் நம் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது மிகவும் வேதனைக்குரிய விஷயம். ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்பது நிறைய நிலைகளில் உண்மையாக இருப்பதை என்னால் கண் கூடாக காண முடிகிறது.

தான் எவ்வாறு துன்பப்பட்டாலும், தான் பெற்ற மகனை சட்டத்தின் முன் நிறுத்த எந்த பெற்றோரும் பெரும்பாலும் சம்மதிப்பதில்லை. ஒரு வேளை இன்று துன்பத்தில் துவளும் அனைத்துப் பெற்றோரும் முதியோரும் சட்டத்தின் உதவியை நாடுவார்கள் எனில், அவர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுக்களோ, வழக்குகளோ நீதிமன்றங்கள் கையாளக்கூடிய எண்ணிக்கையை விட பெருகியிருக்கும்!

இலையுதிர் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பெற்றோர், தங்களுடைய வசந்த காலம் முழுவதையும் தான் ஈன்ற குழந்தைகளுக்காகவே செலவழித்ததின் பலனாகவே, ஆதரவற்று நிற்கும் ஒரு நிலை... இந்த முதியோரின் அனுபவ அறிவு நம்மை வழிநடத்த பெரிதும் உதவும் என்பதனை அறவே மறந்து விட்டு, நாம் அமைத்த தனிப்பாதையில் பயணம் செய்வது சமுதாய வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.

இன்றைய இளைய தலைமுறை சற்றே தங்களின் நேரத்தை ஒதுக்கி முதியோரிடம் அன்பு செலுத்தி, அவர்களின் சொல்லுக்கு செவிமடுத்தாலே சமுதாயத்திலிருக்கும் பல துன்பங்கள் மறைந்துவிடும். மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும் முன்னர் கசக்கும்... பின்னர் இனிக்கும்!

2007ம் ஆண்டு சட்டத்தின் கீழ், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ள இயலாத பெற்றோர், தங்கள் பிள்ளைகள் அல்லது அவர்களுக்குப் பிறகு சொத்தினை அடையக்கூடிய வாரிசுகளிடம் ஜீவனாம்சம் மற்றும் பராமரிப்பு கோர வழி செய்யப்பட்டுள்ளது.

எழுத்து வடிவம்: சாஹா