இந்த வலி வேற மாதிரி!



முதுமைப் பருவம், குழந்தைப் பருவத்துக்குச் சமம் என்பார்கள். உடல், மன வேதனைகளை குழந்தைகளுக்கு எப்படி சொல்லத் தெரியாதோ, அதே மாதிரிதான் முதியவர்களுக்கும்! 2020ல் உலகில் ஆயிரம் மில்லியன் முதியவர்கள் இருப்பார்கள், அதில் இந்தியாவில் மட்டுமே 142 மில்லியன் பேர் என்கிறது உலக சுகாதார நிறுவனம். வயதானவர்கள் அதிகமாக ஆக அவர்களின் உடல்நலப் பிரச்னைகளும் அதிகரிக்கவே செய்யும்.

‘‘65 வயசுக்குப் பிறகு ஆண்களும் பெண்களும் அதிக வலிகளால அவதிப்படறாங்க. அவங்களோட வலிகள், மத்தவங்களோட வலிகள்லேர்ந்து முற்றிலும் மாறுபட்டது. அதுக்கான அணுகுமுறை, சிகிச்சைனு எல்லாமே வேறு’’ என்கிறார் வலி நிர்வாக சிறப்பு மருத்துவர் குமார்.‘‘வயோதிகத்தால வரக்கூடிய வலி, திசுக்களோட தேய்மானம், பலவீனத்தால வரக்கூடியது,

ரத்த அழுத்தம், நீரிழிவு, எலும்பு, மூட்டுப் பிரச்னைனு வேற நோய்களோட விளைவால வரக்கூடியது, தனிமை, வாழ்க்கையைப் பத்தின பயம், வருமானம் இல்லாததுனு வேற காரணங்களால உணரப்படற வலி, புற்றுநோயால வரக்கூடிய வலி... இதெல்லாம் வயசானவங்களோட வலிகளுக்கான காரணங்கள். 65 வயசுக்குப் பிறகு புற்றுநோய் தாக்கற ஆபத்து அவங்களுக்கு அதிகம்.

வயசானவங்களோட வலிகளுக்கு சிகிச்சை கொடுக்கிறது அத்தனை சுலபம் இல்லை. சிகிச்சைக்கு ஒத்துழைக்க மாட்டாங்க. காது கேட்காதது, கவனமின்மை, மறதி, மன ரீதியான பிரச்னைகள்னு பல காரணங்களால சிகிச்சைகளைப் பத்திப் புரிஞ்சுக்கிற சக்தி அவங்களுக்கு இருக்காது. உடற்பயிற்சி, பிசியோதெரபி மாதிரியான விஷயங்களுக்கு ஒத்துழைக்க மாட்டாங்க. ரொம்ப பொறுமையோடத்தான் அவங்களை அணுகணும்’’ என்கிற டாக்டர் குமார், மூட்டு வலி, தோள்பட்டை வலி, முதுகு வலி, கழுத்து வலி, கால் எரிச்சல், புற்றுநோய் வலி ஆகியவையே முதியவர்களிடம் பரவலாகக் காணப்படுகிற வலிகள் என்கிறார்.

‘‘ஏற்கனவே அவங்களுக்கு ஏதாவது நோய் இருந்தா, வலிகளுக்கான மருந்துகளைக் கொடுக்கிறப்ப அதிகபட்ச கவனம் தேவை. எல்லா மருந்துகளும் அவங்களுக்கு ஒத்துக்காது. நோயோட தன்மை, அவங்களோட உடல் மற்றும் மனநிலையை தெரிஞ்சுக்கிட்டுத்தான் மருந்துகள் தரணும். 60 வயசுக்கு மேலானவங்க எக்காரணம் கொண்டும் எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

மருந்து கொடுத்து சரி செய்ய முடியாதுங்கிற வலிகளுக்கு கவுன்சலிங்கும் உளவியல் ரீதியான தெரபிகளும் தேவைப்படலாம். பிசியோதெரபி செய்யறது மூலமா வலியோட தீவிரம்
அதிகமாகிறதைத் தவிர்க்கலாம்.

சில வலிகளுக்கு அறுவை சிகிச்சைதான் தீர்வா இருக்கும். ஆனா, வயோதிகம் காரணமா அறுவை சிகிச்சை செய்ய முடியாது, மருந்து களும் தர முடியாதுங்கிற நிலைமைல உள்ளவங்களுக்கு, வலி நிர்வாக கிளினிக்கை அணுகி, சிறப்பு வலி நிவாரண சிகிச்சைகள் கொடுக்கிறது பலன் தரும்.’’ 60 வயசுக்கு மேலானவங்க எக்காரணம் கொண்டும்எந்த வலிக்கும் சுய மருத்துவம் செய்யவே கூடாது.

- அதிதி