அடடே!



*பாரதிராஜா இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ படத்தில், முதலில் கங்கை அமரன் ஹீரோவாக நடிக்க தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஷூட்டிங் புறப்படுவதற்கு சில நாட்களுக்கு முன், தன்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய கே.பாக்யராஜைத் தேர்வு செய்த பாரதிராஜா, அவரை ரதிக்கு ஜோடியாக நடிக்க வைத்து ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். பிறகு பாக்யராஜுக்கு கங்கை அமரனை டப்பிங் பேச வைத்தார்.

*பாலா இயக்கத்தில் விக்னேஷ், கீர்த்தனா நடிப்பில் சில நாட்கள் மட்டுமே ‘அகிலன்’ பட ஷூட்டிங் நடந்தது. பணப் பற்றாக்குறையால் படம் கைவிடப்பட்டது. பிறகு அதே கதை பாலா இயக்கத்தில் விக்ரம், அபிதா நடிப்பில் ‘சேது’ படமாக உருவானது.

*சிம்ரன் முதலில் ஹீரோயினாக நடித்த படம், ‘சிறகுகள் முறிவதில்லை’. பாரதிராஜா இயக்கினார். நெப்போலியன் ஹீரோ. முக்கால் பாகம் வளர்ந்த நிலையில் படம் நின்றுவிட்டது. பிறகு ‘வி.ஐ.பி’ படத்தில் சிம்ரன் அறிமுகமானார்.

*மறைந்த ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி, மாதவி, சுலக்ஷனா நடித்த ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்துக்கு முதலில் சூட்டப்பட்டிருந்த பெயர், ‘நானே ராஜா நீயே ராணி’.

*கே.பாக்யராஜ் வசனத்தில் மோகன், விஜி, திலீப், மேனகா நடித்திருந்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ படம், 1985ல் தணிக்கை செய்யப்பட்டு,
இன்றுவரை ரிலீசாகவில்லை. ஆனால், 2007ல் டி.வியில் ஒளிபரப்பானது.

*விமல் ஹீரோவாக அறிமுகமாவதற்கு முன், விஜய்யின் ‘கில்லி’, ‘குருவி’ படங்களிலும், அஜீத்தின் ‘கிரீடம்’ படத்திலும் சின்ன வேடத்தில் நடித்துள்ளார்.

*சினிமாவில் நடிக்க வருவதற்கு முன், ‘அமராவதி’ அஜீத், ‘காதல் தேசம்’ அப்பாஸ், ‘காதலன்’ பிரபுதேவா ஆகியோருக்கு டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம்.

*நடிப்பு என்றால் வெறுக்கும் இயக்குனர் பாலா, பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியபோது, அவர் இயக்கிய ‘சந்தியா ராகம்’ படத்தில் போஸ்ட்மேன் வேடத்தில் நடித்திருக்கிறார்.

*மதுரையில் வைகை அணை கட்டப்படும்போது சித்தாளாக வேலை செய்திருக்கிறார் இளையராஜா.

*மலையாளத்தில் பிரேம் நசீர் ஜோடியாக 107 படங்களில் நடித்து, ‘செம்மீன்’ ஷீலா கின்னஸ் படைத்துள்ளார்.

*1988ல் ரிலீசான பாண்டியராஜனின் ‘ஜாடிக்கேத்த மூடி’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் விஷால்.

*பிரசாந்த், சிம்ரன் ஜோடியாக நடித்த ‘ஜோடி’ படத்தில், துணை நடிகையாக அறிமுகமான த்ரிஷாவுக்கு அப்போது கொடுக்கப்பட்ட சம்பளம், ஆயிரம் ரூபாய் மட்டுமே.

தொகுப்பு : தேவா