சீட் நுனியில் ரசிகர்கள்!



முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிடுவதில் கோவை வேல் பிலிம்ஸ் முன்னணியில் இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு மற்றும் ஒரு வெற்றியைக் கொடுக்கவுள்ள படம் ‘முரட்டு கைதி’. கன்னடத்தில் வசூல் புரட்சி செய்த ‘பச்சன்’ படம்தான் தமிழில் ‘முரட்டு கைதி’ என்ற பெயரில் வெளியாகிறது.

சினிமாவில் வில்லனை ஹீரோ பழி வாங்குவதும், வில்லன் ஹீரோவை பழிவாங்கு வதும் சகஜம் என்றாலும் இதில் காட்சிக்கு காட்சி ட்விஸ்ட் இருக்கும்படி திரைக்கதை அமைத்திருக்கிறார்களாம். படம் பார்க்கும் ரசிகர்கள் கண்டிப்பாக சீட் நுனியில் தள்ளப்படுவது நிச்சயம் என்கிறது படத்தரப்பு. அந்தளவுக்கு காட்சிகள் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளதாம்.

‘நான் ஈ’ சுதீப் ஜோடியாக பாவனா நடிக்கிறார். குணச்சித்திர வேடத்தை நாசர் ஏற்றிருக்கிறார். வில்லன் வேடத்தை ‘கஜினி’ பிரதீப் ராவத் ஏற்றிருக்கிறார். தவிர ஜெகபதி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி ஆகியோரின் பங்களிப்பும் இருக்கிறது. ஷஷாங்க் எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஹரிகிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். வில்லனை சுதீப் பழிவாங்கும் ஒவ்வொரு சண்டைக் காட்சியும் படத்தின் ஹைலைட்டாக இருக்குமாம்.

“ ‘நான் ஈ’ படம் தமிழ் ரசிகர்களிடையே எந்தளவுக்கு பேர் வாங்கித் தந்ததோ அதைவிட இன்னும் கூடுதலாக இந்தப் படம் எனக்கு பேர் வாங்கித் தரும். ‘நான் ஈ’ எனக்கு தமிழில் நட்சத்திர அந்தஸ்து வாங்கிக் கொடுத்த படம். அதை தக்கவைத்துக் கொள்ளுமளவுக்கு இதில் என்னுடைய ரோல் அனைவராலும் பேசப்படும்” என்கிறார் சுதீப்.

- எஸ்