கணவனே கண்கண்ட தெய்வமென்று வாழும் கண்ணிய நடிகை!



ஹீரோயினிஸம்

இணையத்தில் மேயும் ஒவ்வொரு ஆணுக்குமே சன்னி லியோன் ஒருமுறையாவது இரையாகி இருப்பார். இல்லையென்று சொல்பவர்களுக்கு சொர்க்கத்தில்கூட இடம் கிடையாது. கூகுளில் அதிகம் தேடப்படுபவர்களில் சன்னி லியோன் டாப்-3 லிஸ்ட்டில் எப்போதும் இடம்பெறுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு போர்ன் ஸ்டார் (porn star). பச்சையாக சொல்வதென்றால் நீலப்பட நடிகை. கொச்சையாக எப்படி எப்படியோ அவரை வர்ணிக்கிறார்கள்.

சன்னி லியோன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுக்காரர். அந்நாட்டில் நீலப்படம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகவே இருக்கிறது. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். அவர்களுடைய கலாச்சாரத்தில் செக்ஸ் என்பது ஜஸ்ட் சைட் டிஷ். எப்போதும் அதிலேயே கவனம் செலுத்துவதல்ல.

சன்னி லியோன், அந்நாட்டின் வழக்கப்படிதான் போர்ன்ஸ்டாராக பிரசித்தி பெற்றார். அயல்நாடுகளில் போர்ன்ஸ்டார்களை அந்நாட்டு அதிபரே காதலிப்பதெல்லாம் சகஜம். ஆகையால், சன்னி அங்கே தாராளமாக வலம் வந்தது என்பது அவர்களுக்கு கண்ணை உறுத்தாத சமாச்சாரம்தான்.

ஆனால்-கனடாவில் சன்னி செய்ததை இந்தியாவில் செய்தால், அவர் இருக்கவேண்டிய இடம் திகார் ஜெயில்தான். நம்முடைய சட்டதிட்டங்களும், பண்பாடும் அப்படி. எனவேதான் இந்திய திரையுலகத்துக்கு திக்விஜயம் செய்த சன்னி, இங்கே நீலப்படம் எதிலும் நடித்ததில்லை. அவர் நடித்த படங்களுக்கு குறைந்தபட்சம் ‘ஏ’ சான்றிதழ்தான் வழங்குகிறார்கள் என்றாலும், நம் நாட்டின் சட்டதிட்டங்களை அவர் மீறியதே இல்லை.

‘பிக் பாஸ்’, ‘ஸ்ப்ளிட் வில்லா’ என்கிற புகழ்பெற்ற இரண்டு ரியாலிட்டி ஷோக்களில் அவர் பிரபலமானார். ஏகப்பட்ட ஆல்பங்களில் பாடியிருக்கிறார். சன்னியின் குரல் ஏற்படுத்தும் கிறக்கம், சொர்க்கம். அபாரமான நடனக் கலைஞர். மிகச்சிறந்த டிவி ஆங்கர். லேட்டஸ்டாக ஒரு புத்தகம் எழுதி தன்னை எழுத்தாளராகவும் அழுத்தமாக அடையாளப்படுத்தி இருக்கிறார். கனடாவில் நீலப்படங்கள் நடித்தவர் என்கிற காரணத்தால், அவரது மற்ற திறமைகளைப் புறந்தள்ளுவது என்பது கண்ணிருந்தும் பார்வையற்றவராக இருப்பதற்கு ஒப்பானது.

சன்னியின் கடந்தகாலம் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அந்த இமேஜைப் பற்றி அவரே கவலைப்படாமல், இன்று பாலிவுட்டுக்கு வந்து தன்னை முன்னணி நடிகைகளில் ஒருவராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கும் துணிச்சல்தான் அவரை நிஜமான ஹீரோயின் ஆக்குகிறது.

அவரது இமேஜுக்கு அவருக்கு நிறைய காதலர்கள் இருப்பார்கள், வேறு வேறு தொடர்புகள் இருக்குமென்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், கணவர், குடும்பம் என்று சன்னியின் இனிமையான இல்வாழ்க்கை வேறு எவருக்கும் சளைத்ததல்ல.

அவர் இந்தியாவுக்கு வருகிறார் எனும்போது கலாச்சாரக் காவலர்கள் பலரும், “இந்தியாவுக்குள் வராதே!” என்று போர்க்கொடி தூக்கினார்கள். அவர்களுக்கு சன்னி கொடுத்திருக்கும் பதில் தன்னுடைய கண்ணியமான வாழ்க்கைதான்.
யார் கண்டார்?

தற்போது சமூகசேவைகளிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் சன்னி லியோன், நாளை ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்து, தேர்தலில் நின்று மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கலாம். அமைச்சர் ஆகலாம். நம்மை ஆளலாம். எதுவும் சொல்வதற்கில்லை. இந்தியா வித்தியாசமான நாடு. யாரை, எதற்காக, ஏன், எப்படி தேர்ந்தெடுக்கிறது என்பதெல்லாம் மில்லியன் டாலர் சஸ்பென்ஸ்தான்.

- மீரான்