அபலைப் பெண்ணுக்காக சாட்சி சொன்ன சாவேஸ்வரன்



திருப்புறம்பியம்

கும்பகோணத்திலிருந்து வடமேற்கிலுள்ள திருப்புறம்பியம் தேவாரத் திருப்பதிகம் பெற்ற காவிரியின் வடகரைத் தலங்களில் 46வதாக இடம் பெறுகின்றது. மூவரால் பாடப் பெற்றதுடன், இத்தலத்து திருக்குமரன் மீது அருணகிரி நாதர் திருப்புகழும் பாடியுள்ளார். கிழக்கு நோக்கி, ஐந்துநிலை கோபுரத்துடன் அமைந்த இச்சிவாலயத்தின், தேரோடும் வீதியையும் சேர்த்தால் மூன்று பிராகாரச் சுற்றுகள் கொண்டதாக இக்கோயில் அமைகிறது. ராஜகோபுரத்தின் இடப்புறம் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தம் என்றழைக்கப்படும் பெரிய திருக்குளத்திற்கு முன்பாக தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது.

 தட்சிணாமூர்த்திக்கு உரிய 24 முக்கியத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். கோயிலுக்கு தினமும் விறகு சுமந்து வந்த ஏழைக்கு இறைவன், தட்சிணாமூர்த்தி வடிவில் திருக்காட்சியளித்ததால், அந்த பெருங்கருணையை போற்றி வழிபட என தனியாக அமைக்கப்பட்டது, இந்த திருக்கோயில்.

பொதுவாக திருக்கோயிலுக்குள் நுழைந்த உடன், நவகிரக சந்நதியில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டுள்ள குரு நம்மைப் பார்த்துவிடுவார். ‘‘குரு பார்க்க கோடி நன்மை வந்தடையும்” என்ற பழமொழிக்கு ஏற்ப திருப்புறம்பியத்தில், கோயிலுக்குள் நுழையும் முன்பே நாம் குருவை தரிசிக்கும் பெரும் பேற்றினைப் பெறுவது கோயிலின் மகத்துவத்துள் ஒன்றாகும். ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் இரண்டாவது பிராகாரத்தில் கோபுரத்தை ஒட்டியே வலது புறமாக குகாம்பிகை சந்நதி அமைந்துள்ளது. அம்மனின் அற்புதத் திருமேனி மெழுகால் ஆனதாகும். பௌர்ணமி தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலத்தால் அபிஷேகிக்கப்படுகிறாள். குழந்தைப் பேறு, மண முறிவினை சந்திக்கும் நிலையில் இருப்பவர்களை சேர்த்து வைத்தல் போன்ற வேண்டுதல்களை இந்த அம்பாள் நிறைவேற்றி வைக்கின்றாள்.

கோபுரவாயிலை ஒட்டியே பிராகாரச் சுற்றில் தீர்த்தக் கிணறு, தலமரங்களில் ஒன்றாகிய வன்னி மரம், மதுரைக்குச் சென்று சாட்சி சொன்ன சாட்சிநாதர் (இத்தலத்து இறைவன்) சந்நதி, கரும்பன்ன சொல்லம்மையின் சந்நதி, முன் மண்டபம், அம்மன் நந்தி மண்டபம், பலி பீடம், கொடி மரம் முதலியவை முறையே அமைந்துள்ளன.

கலைநயமிக்க அழகிய சிற்பங்களைத் தாங்கி நிற்கும் தூண்கள் நிறைந்த நீண்ட, பரந்த மண்டபத்தில் தெற்கு நோக்கி அம்பாள் கோயில் கொண்டிருக்கிறாள். அம்மனை தரிசித்து வழிபட்ட பின் உட்பிராகாரச் சுற்றுக்குள் நுழையலாம். மூன்று நிலைகளை உடைய கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்தால் நால்வர் சந்நதி, சோமாஸ்கந்தர் சந்நதி, கன்னி மூலை கணபதி, தட்சிணா மூர்த்தி சந்நதிகள் அமைந்துள்ளதை காணலாம். தென்முகக் கடவுளின் சந்நதிக்கு மேலே மாடத்தில் மீண்டும் ஒருமுறை சட்டநாதரை தரிசிக்கின்றோம். சாட்சிநாதரே இங்கு சட்டநாதராக திருக்கோலம் காட்டியருளுகின்றார்.

இத்திருக்கோயில் ஒரு நீதிமன்றம் போலவே செயல்படுகின்றது. காரணம், தலபுராணத்தின்படி இறைவன் ஒரு பெண்ணுக்காக சாட்சி சொல்ல, அதனால் அவர் சாட்சிநாதர் என்று பெயரும் பெற்றதால்!
பரஞ்சோதியார் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் 64வதான சாட்சி பகர்ந்த படலத்தின் நாயகரே இத்தலத்து இறைவன் ஆவார். பூம்புகாரினைச் சேர்ந்த சிவபக்தியில் சிறந்த ரத்தினவல்லி என்ற வணிகப் பெண்ணுக்கு அவளது பெற்றோர், மதுரையைச் சேர்ந்த வணிகன் ஒருவனுக்கு மணமுடிக்க நிச்சயத்திருந்தனர். மணநாள் நெருங்கும் முன்பு ரத்தினவல்லியின் பெற்றோர் காலமாகிவிட, வணிகன், அவளை அழைத்துக் கொண்டு மதுரையிலுள்ள தன் உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்து பூம்புகாரிலிருந்து புறப்பட்டான்.

போகும் வழியில் திருப்புறம்பியம் இறைவன், இறைவியைத் தரிசித்துவிட்டு, அன்றிரவு கோயில் வளாகத்தில் தங்கியிருந்தபோது, வாலிபனை பாம்பு கடித்து விட, அவன் இறந்துவிட்டான். இருந்த ஒரு உறவும் அறுந்துவிட்ட நிலையை எண்ணி ரத்தினவல்லி அந்தத்தலத்து இறைவனிடம் தனது கையறு நிலையைச் சொல்லி அழுதாள். கன்னியின் கண்ணீருக்கு மனமுருகி, அவள் கணவனை உயிர்ப்பிக்குமாறு அங்கு வந்து தங்கியிருந்த திருஞானசம்பந்தர் பதிகம் பாட இளைஞன் உயிர் பெற்றான். தனக்கு மாங்கல்ய பிச்சை அருளிய இறைவன் திருமுன்னே திருமணம் செய்து கொண்டாள், ரத்தினவல்லி.

வருடங்கள் உருண்டோட மதுரையில் வாழ்ந்து வந்த ரத்தினவல்லிக்கு ஒரு மகனும் பிறந்தான். வணிகனின் முதல் மனைவியின் குழந்தைகள் ஒருநாள் தன் குழந்தையை அடிப்பது கண்டு, ரத்தினவல்லி அந்தக் குழந்தைகளை கடிந்து பேசினாள். அப்பொழுது முதல் மனைவி ‘‘உற்றார், உறவினர் யாரும் அறியாமல் நடந்த உனது திருமணம் திருட்டுக் கல்யாணம்.  அதனை ஒப்புக் கொள்ள முடியாது. யாரோ ஒருத்தியான நீ என் மக்களை ஏசுவதா?” என்று ரத்தினவல்லியை திட்டித் தீர்த்தாள்.

ரத்தினவல்லி, மதுரை சொக்கநாதரிடம் சென்று ‘‘என் திருமணத்தை, உன் முன் நடந்ததை ஒருத்தி பழிப்பதா? அதை நீ பார்த்திருப்பதா?” என்று முறையிட்டு அழுதாள். அப்பொழுது எல்லோரும் பார்க்கும்படியாக மதுரை திருக்கோயிலில், திருப்புறம்பியம் இறைவன், சாட்சிக்கு தன்னுடன் அழைத்துச் சென்ற திருப்புறம்பியம் மடப்பள்ளி, வன்னி மரம், கிணறு சகிதமாக அவளுக்கு சாட்சி சொன்னார்கள்.

இந்தப் புராண நிகழ்வு மதுரை திருக்கோயிலின் ஈசான மூலையிலே கற்பலகையில், மடப்பள்ளி, வன்னிமரம், கிணறு, திருப்புறம்பயம் இறைவன் சாட்சிநாதரின் லிங்கத் திருமேனி உருவங்களாக பொறிக்கப்பட்டுள்ளன.

காட்சிக்கு எளியவராய், ஏழைப்பங்காளனாய் இத்தலத்து இறைவன் உதவும் எண்ணத்தோடு நமக்காகக் காத்திருக்கிறார். சிலப்பதிகார உரையாசிரியர் இளங்கோ அடிகளும் இப்பெண்ணை சிலாகித்து வன்னிமரம், மடப்பள்ளி சான்றாக முன்னிறுத்திக் காட்டிய மொய்குழலாள்” என்று தனது சிலப்பதிகாரத்தில் வர்ணித்துள்ளார்.

இத்தலத்து இறைவன் நியாயம் கிட்டாதவர்களுக்கு சரியான தீர்ப்பினை வழங்குகின்றார். மிகவும் நொந்து போய், நீதி கிடைக்காமல் தவிப்போர் மனதாலே நினைத்து இத்தலத்து இறைவனை சாட்சி கூற வருமாறு வேண்டிக்கொள்ள கண்டிப்பாக ஏதோ ஒருவிதத்தில் அவர் அருளுவார்.

அடுத்ததாக திருக்குமரன் சந்நதி. மற்றோர் தலமரமாகிய புன்னை மரம், மகாலட்சுமி, பிரத்யக்ஷநாதர் (நீதிபதி), சண்டிகேஸ்வரர், நடராஜர், நவக்கிரக சந்நதி, பைரவர், சனிபகவான் சந்நதிகள் அமையப் பெற்றுள்ளன.

மீண்டும் நீண்டதொரு மண்டபத்திற்குள் பிரவேசிக்கின்றோம். இந்த நீண்ட மண்டபங்கள் நாம் இறைவனை அடைய கடக்க வேண்டிய காலகட்டங்கள் போல் தோற்றமளிக்கிறது. வெளிப் பிராகாரச் சுற்றுச் சுவரும், உட்பிராகார சுற்றுச் சுவரும் 30 அடி உயரம் உள்ளவை. கோட்டை போன்ற இக்கோயிலினுள் ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்ற ‘தேனபிஷேகப் பிள்ளையார்’ அருள்கிறார். எவ்வளவு தேன் ஊற்றினாலும் இவர் உறிஞ்சி விடுவதாக இன்றும் ஐதீகம் உள்ளது.

ஒவ்வொரு யுக முடிவிலும் வெள்ளம் ஏற்பட்டு முற்றாக அழிக்கப்பட்டு புதிய சிருஷ்டிகள் ஏற்படுவது மரபாகவே அமைந்துள்ளது. அவ்வாறு கிருதயுக முடிவில் சப்த சாகரங்களும் (ஏழு கடல்களும்) பொங்கிப் பெருக்கெடுத்து உலகத்தையே அழிக்க பாய்ந்து வந்தன. வெகுபுண்ணியத் தலமாகிய இந்த புன்னாகவனம் மட்டும் அழிந்து விடாமல் காத்தருள திருவுளம் கொண்ட சிவபெருமான், விநாயகப் பெருமானை அழைத்து, ஊழிப் பெருவெள்ளத்திலிருந்து இத்தலத்தைக் காத்திடுமாறு பணித்தார்.

விநாயகப் பெருமானும், ஓங்காரத்தைப் பிரயோகித்து ஏழுகடல்களையும் ஒரு கிணற்றினுள் அடக்கி ஈசன் திருவுளப்படி இத்தலத்தைக் காத்தருளினார். மூன்று பனை மர உயரத்திற்குப் பாய்ந்து வந்த வெள்ளம், கிணற்றில் அடைபட்டது போக, பிறவற்றை அழிக்க முயன்று ஆனால் விநாயகப் பெருமானுக்குப் பயந்து, இத்தலத்திற்கு புறம்பாகப் பாய்ந்து ஓடி விட்டதால் அன்று முதல் இப்பகுதி புறம்பயம் என்று பெயர் பெற்றது.

அதுவே திருப்புறம்பயம் என்றானது. இன்று பேச்சு வழக்கில் திருப்புறம்பியம் என்றாகி விட்டது. பிரளய வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய விநாயகப் பெருமானின் பெருஞ்செயலை வியந்து மகிழ்ந்து கடலரசனான வருண பகவான், கடல் பொருட்களான நத்தை ஓடு, மணல், கிளிஞ்சல், கடல்நுரையினைக் கொண்டு விநாயகர் திரு உருவை உருவாக்கி, ‘பிரளயம் காத்த விநாயகர்’ என்ற திருநாமம் இட்டுப் போற்றி அழைத்து இங்கு பிரதிஷ்டை செய்தான். விநாயகர், பொங்கிப் பெருகி வந்த ஏழுகடல்களையும் அடைந்த கிணறு ‘சப்த சாகர கூடம்’ என்ற பெயரில் ஆலயத்தின் திருக்குளத்தின் அருகே இன்றும் உள்ளது.

பிரளயம் காத்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும், விடிய, விடிய தேனபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாட்களில் எந்தப் பொருட்களைக் கொண்டும், திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெறுவதில்லை. தேன் முழுக்கின்போது விநாயகர் செம்பவள மேனியராய் அற்புதமாகக் காட்சியளிப்பதுடன் ஒரு சொட்டு தேன் கூட கீழே சிந்தாமல் அத்தனையையும் தன் திருமேனியில் உறிஞ்சிக் கொள்ளும் பேரதிசயமும் நடக்கின்றது. இத்திருக்காட்சியைக் காண்போர் கொடுத்து வைத்தவர்கள்.

அவர்களுடைய வேண்டுதல்களை அடுத்த தேனாபிஷேகத்திற்குள் பிள்ளையார் நிறைவேற்றி வைக்கின்றார். இப்படியாக, இத்தலத்தை அழியாமல் காத்தருளிய பிரளயம் காத்த விநாயகரை மக்கள் செல்லமாக தேனபிஷேகப் பிள்ளையார் என்று தித்திப்பாக அழைத்து மகிழ்கின்றனர். அருள்மிகு சாட்சிநாதரை கருவறைக்குள் தரிசிக்கின்றோம். பிரம்மன், அகத்தியர், சனகாதி நால்வர், விஸ்வாமித்திரர் போன்றோரால் வழிபடப்பட்டவர். எல்லா நிலையிலும், எல்லாவிதத்திலும், கைவிடப்பட்ட சொத்துத் தகராறு, குடும்பத் தகராறு, தடைபட்ட திருமணம் போன்ற பிரச்னைகள் இருந்தால் பகலவனைக் கண்ட பனித்துளிகள் போல் அவை உடனே மறைந்து போகும். 

அறத்திறத்திற்கு பேர்போன இவ்விறைவன், மறத்திறத்திற்கும் பெயர் பெற்ற போர்கள் நடக்கத் துணை இருந்துள்ளார். ‘திருப்போர்புறம்’ என்ற பெயரையும் இவ்வூர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக வரலாற்றில் பெரும் திருப்புமுனைகளாக அமைந்த மூன்று பெரும்போர் நடந்த களமாகத் திகழ்ந்த வீரமிகு பூமி இது. இத்திருக்கோயில் மதுரை திருஞானசம்பந்தர் மடத்திற்குச் சொந்தமானது. தினமும் 4 கால பூஜையும், மாசியில் பத்து நாட்கள் திருவிழாவும் கொண்டாடப்படுகின்றது. கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பியம்.

- இறைவி