தெளிவு பெறுஓம்



ரோஹிணி நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் மாமனுக்கு ஆகாது, கேட்டை மூத்தவருக்கு ஆகாது, பெண்மூலம் நிர்மூலம், பூராடம் கழுத்தில் நூல் ஆடாது, அமாவாசையில் குழந்தை பிறந்தால் திருடன் ஆவான் என்பது போன்ற வாக்கியங்களில் எவ்வளவு உண்மை உள்ளது?

அணுஅளவும் உண்மை இல்லை என்பதே சத்தியமான உண்மை. மேற்கண்ட நட்சத்திரங்களில் பிறந்து நன்றாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இந்த நட்சத்திரங்களில் பிறக்காமல் வேறு நட்சத்திரங்களில் பிறந்து கஷ்டப்படுபவர்களும் உள்ளார்கள். இது அவரவரின் விதிப்பயனின்படிதான் அமையுமே தவிர பிறக்கின்ற நட்சத்திரத்தையோ திதியையோ வைத்து அமையாது.

ரோஹிணி என்பது ரிஷப ராசிக்குள் அடங்கும் மிகச் சிறப்பு வாய்ந்த நட்சத்திரம். சந்திரனின் 27 மனைவியர்கள்தான் இந்த 27 நட்சத்திரங்கள் என்றும், இவர்களில் சந்திரனுக்கு மிகவும் பிரியமானவள் ரோகிணி என்றும் ஒரு கதை உண்டு. பெரும்பாலும் ரோஹிணியில் பிறந்தவர்கள் அழகாக இருப்பார்கள்.

அடுத்தவர்களின் மனம் கவரும் வண்ணம் அவர்களுடைய நடவடிக்கை இருக்கும். தன்னைச் சுற்றியுள்ள எல்லோருக்கும் பிரியமானவர்களாக இருப்பார்கள். கேட்டை என்பது விருச்சிக ராசியில் அமையும் முழுமை வாய்ந்த நட்சத்திரம். விருச்சிக ராசிக்கு அதிபதி செவ்வாய். இவர் செயல்களில் வேகத்தினைத் தருபவர். கேட்டை நட்சத்திரத்திற்கு உரிய கிரஹம் புதன். இவர் புத்தி கூர்மையைத் தருபவர்.

அதாவது கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேகத்தோடு விவேகத்தினையும் கலந்து செயல்பட்டு எளிதாக வெற்றி பெறுபவர்களாக இருப்பார்கள். மூலமும், பூராடமும் தனுசு ராசியில் இடம்பெறும் நட்சத்திரங்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். குருபகவானின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கும் இந்த இரு நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆத்மபலம் கொண்டவர்களாக இருப்பார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்து தீர்க்க சுமங்கலியாக எண்பது வயது வரை வாழ்ந்துகொண்டிருக்கும் எத்தனையோ பெண்களை இன்றைக்கும் உதாரணமாகச் சொல்ல முடியும்.

பூராடம் கழுத்தில் நூலாடாது என்று சொல்வது முட்டாள்தனம். இளம்வயதில் கணவனை இழக்கும் பெண்கள் எல்லோரும் பூராடத்தில் மட்டுமா பிறந்திருப்பார்கள்? அமாவாசையில் பிறந்தவர்களில் மிகச் சிறந்த உதாரணம் அனுமன். மார்கழி மாத அமாவாசையும், மூல நட்சத்திரமும் இணைந்த நாளில் பிறந்த ஹனுமனை விட வேறு சிறந்த உதாரணம் வேண்டுமா... எல்லா நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே. எல்லா திதிகளும் நல்ல திதிகள் தான். அவரவர் செய்த வினைப்பயனின் அடிப்படையில் இந்த ஜென்மாவில் பலனை அனுபவிப்பார்கள்.

அவரவர் பிறந்த நேரமும், ஜாதகத்தில் உள்ள கிரஹங்களின் சஞ்சார நிலையும்தான் அவரவர் வாழ்வினைத் தீர்மானிக்கும். ஒருவரது ஜாதகம் மற்றவரது ஆயுளை தீர்மானிக்கும் என்று சொல்வது முற்றிலும் மூடநம்பிக்கையே. உங்கள் வினாவில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களை நம்புபவர்கள் அறியாமையின் உச்சத்தில் வாழ்கிறார்கள் என்பதே உண்மை.

?மணமக்கள் தாய் - தந்தையர்க்கு பாதபூஜை செய்வதன் மகத்துவம் என்ன? அப்படி ஏன் செய்ய வேண்டும்?
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

தங்களைப் பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக பாதபூஜையைச் செய்கிறார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் கிரஹஸ்தாச்ரமம் என்பது மிகவும் முக்கியமானது. சாதாரண மனிதர்கள் தங்கள் பிறவிக்கான பொருளை இங்குதான் அறிந்து
கொள்ள இயலும். இந்த சம்சார பந்தத்திற்குள் நுழைவதற்கு முன்னால் இவ்வுலகில் தனது பிறப்பிற்குக் காரணமாக இருக்கும் பெற்றோருக்கு பாதபூஜை செய்து வணங்கி, அவர்களின் ஆசிர்வாதத்தினைப் பெற்றுக் கொள்கிறார்கள். அதுவரை பெற்றோரின் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவர்கள், திருமண நாள் முதல் தனித்துச் செயல்படத் துவங்குகிறார்கள்.

தனிப்பட்ட தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டி பெற்றோரின் ஆசியை வேண்டி நிற்கிறார்கள். மணவறையில் பாதபூஜை செய்து பெற்றோர்களை வணங்கும்போது பெற்றவர்களுக்கும் சரி, மணமக்களாக அமர்ந்திருக்கும் பிள்ளைகளுக்கும் சரி, இரு தரப்பினருக்கும் மனதிற்குள் உண்டாகும் உள்ளுணர்வினை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அற்புதமான அந்த தருணத்தின் மகிமையை அனுபவித்துத்தான் உணர இயலும். பெற்றவர்களின் ஆசிர்வாதத்தோடு இல்லற வாழ்வினில் நுழைய வேண்டும் என்பதற்காகத்தான் பாதபூஜை என்கிற வைபவம் திருமணத்தின்போது நடத்தப்படுகிறது.

?ஆண்டவன் ஏழைகளை மட்டும் சோதிப்பதன் காரணம் என்ன?
- கே. விஸ்வநாத், அல்சூர்.

ஆண்டவன் ஏழைகளை மட்டும்தான் சோதிக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்.? பணம் படைத்தவர்களை ஆண்டவன் சோதிப்பதில்லையா? உண்மையைச் சொன்னால் பணக்காரர்களைத்தான் ஆண்டவன் மிகவும் சோதிக்கிறான். காசு, பணம் இருந்தால் மட்டும் போதுமா? நிம்மதியான வாழ்வு வேண்டாமா? அடுத்த வேளை சாப்பாட்டிற்கு வழி இல்லை என்றாலும் ஏழை மனநிம்மதியோடு வாழ்கிறான். கை நிறைய காசு இருந்தாலும் சரியான நேரத்திற்கு தான் விரும்பியதை சாப்பிட இயலாமல் பணக்காரன் தவிக்கிறான். நிம்மதி என்பது அவரவர்
வாழுகின்ற முறையைப் பொறுத்தது.

புத்தர் சொன்னது போல் ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையைத் துறந்தவன் ஆண்டவனின் அருளினைப் பெற்றவன் ஆகிறான். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்பார்கள். தான் நன்றாகத்தான் வாழ்கிறோம், ஆண்டவன் நம்மை நல்லபடியாகத்தான் வைத்திருக்கிறான், எதுவாக இருந்தாலும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு வாழ்பவன் மட்டுமே இந்த உலகில் நிம்மதியாக வாழ்பவன். போதுமென்ற மனதோடு வாழ்பவனே இறைவனின் முழுமையான அருளினைப் பெற்றவன். ஏழை, பணக்காரன் என்ற பேதத்தினை ஆண்டவன் உருவாக்கவில்லை. அது அவரவர் மனநிலையைப் பொறுத்தே அமைகிறது. ஆண்டவன் ஏழைகளை மட்டும் சோதிக்கிறான் என்ற கருத்தினை
ஏற்றுக்கொள்ள இயலாது.

?சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்கு கனகாபிஷேகம் செய்யலாமா?
- மல்லிகா அன்பழகன், சென்னை.

சஷ்டி அப்த பூர்த்தி என்பது அறுபதாவது வயது முடிகின்ற நாளில் செய்ய வேண்டியது. கனகாபிஷேகம் என்பது ஆண்வாரிசு வழியில் கொள்ளுப்பேரன் பிறந்தவுடன் செய்வது. அதாவது மகன் வயிற்றுப் பேரனுக்கு மகன் பிறந்தால் செய்யப்படுகின்ற ‘ப்ரபௌத்ர சாந்தி’ அன்று கனகாபிஷேகம் செய்வது வழக்கம்.

கொள்ளுப்பேரன் பிறக்கின்ற வயதினைக் கணக்கிட்டுப் பார்த்தால் சஷ்டி அப்த பூர்த்தி ஆனவர்களுக்குத்தானே கனகாபிஷேகம் செய்ய இயலும். இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்.? சஷ்டி அப்த பூர்த்தி என்றழைக்கப்படும் அறுபது வயது நிரம்பியிருந்தால் மட்டும் போதாது, ஆண் வாரிசு வழியில் கொள்ளுப்பேரனைக் காண்பவர்களுக்குத்தான் கனகாபிஷேகம் என்பதைச் செய்ய இயலும்.

?நாவலந்தீவு என பாரததேசம் வேதகாலம் முதல் போற்றப்படுகிறதே, இந்தியா தீபகற்பம் ஆயிற்றே  பின் தீவு என்று எதனால் அழைத்தார்கள்?
- தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

சங்கல்பம் சொல்லும்போது வைவஸ்வத மந்வந்தரே, அஷ்டாவி(கு)ம் சதிதமே, கலியுகே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே... என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதில் வருகின்ற ‘ஜம்பூத்வீபே’ என்ற வார்த்தைக்கு நாவலந்தீவு என்று நீங்கள் பொருள் கண்டிருக்கிறீர்கள். ஜம்பூ பலம் என்ற சமஸ்க்ருத வார்த்தைக்கு நாவல்பழம் என்று பொருள்.

த்வீபம் என்றால் தீவு என்பது பொருள் அல்ல. பரந்து விரிந்த நிலப்பரப்பு என்று பொருள் காண வேண்டும். நாவல்மரங்கள் நிறைந்த பரந்து விரிந்த நிலப்பரப்பான ஜம்பூத்வீபம் என்பது கிட்டத்தட்ட ஆசியக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கியது. ஜம்பூத்வீபத்தின் ஒரு பகுதிதான் நாம் வாழுகின்ற தற்போதைய இந்தியா என்கிற தீபகற்பம். நாவலந்தீவு என்று வேதம் சொல்லவில்லை. தமிழ் இலக்கியங்களில்தான் அந்த வார்த்தை காணப்படுகிறது. வேத காலத்திய ஜம்பூத்வீபம் என்பதும் தமிழ் இலக்கியம் சொல்லும் நாவலந்தீவு என்பதும் ஒன்றல்ல என்பதே அடியேனின் கருத்து.

?கடுமையான பாவங்கள் என்று சொல்லப்படும் பஞ்சமாபாதகங்கள் என்னென்ன? மக்கள் அதைச் செய்யாமல் தவிர்க்க தங்களின் அறிவுரை யாது?
- ப.த. தங்கவேலு, பண்ருட்டி.
ப்ரஹ்மஹத்யா, சிஷூஹத்யா,

சுராபானா, ஸ்வர்ணஸ்தேயா, குருதல்பகமனா இதி பஞ்சமஹாபாதகா: என்று சொல்வார்கள். ப்ரஹ்மஹத்யா என்றால் பிராமணனை வதைத்தல் அல்லது கொல்லுதல் என்று பொருள். சிஷூஹத்யா என்பது சிசுவதை அதாவது குழந்தையைக் கொல்லுதல். இதில் அபார்ஷன் என்றழைக்கப்படும் கருக்கலைப்பும் அடக்கம். அதோடு மட்டுமல்லாது ஒரு மிருகத்தை மாமிசத்திற்காகக் கொல்லும்போது அந்த மிருகம் கர்ப்பமாக இருந்தாலும் இந்த தோஷம் தாக்கும். கோழியைக் கொல்லும்போது, அதன் வயிற்றில் முட்டை இருந்தாலும் இந்த பாவம் வந்து சேரும்.

அதனால்தான் பொதுவாக மாமிசம் உண்ணாதே என்று சொன்னார்கள். இங்கே ‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற சொற்றொடரைப் பொருத்திப் பார்க்க இயலாது. ஒருவன் தனது உணவிற்காக ஒரு மிருகத்தைக் கொல்லும்போது அந்த பாவம் அவனை வந்தடையாது என்பது அந்த சொற்றொடருக்கான பொருள் என்று நாம் ஏற்கெனவே தெளிவு பெறுஓம் பகுதியில் பார்த்திருக்கிறோம். உணவிற்காக ஒரு மிருகத்தைக் கொல்லும்போது அது கர்ப்பமாக இருக்கக் கூடாது அல்லது ஆண் வர்க்கத்தைச் சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

 அப்பொழுதுதான் அந்த பாவம் வந்து சேராது. உணவிற்காகக் கொல்லப்படுகின்ற மிருகமானது கர்ப்பமாக இருந்தால் அல்லது அதன் வயிற்றில் முட்டை என்பது இருந்தால்கூட சிஷூஹத்யா என்ற மஹாபாதகம் கண்டிப்பாக வந்து சேரும். மூன்றாவதாக வருவது சுராபானம். மது அருந்துதல் என்பது சொல்லாமலேயே புரிந்திருக்கும். மூளையை செயல்படவிடாமல் தடுமாறச் செய்யும் மதுபானத்தினை அருந்துதலும் மஹாபாதகத்தில் ஒன்று. நான்காவதாக வருவது ஸ்வர்ணஸ்தேயம் - அதாவது தங்கத்தினைத் திருடுதல். களவு என்பதே குற்றம்.

அதிலும் தங்கத்தினைத் திருடுதல் பெரிய குற்றம். அதிலும் ஒரு சுமங்கலிப்பெண்ணின் கழுத்தில் இருக்கும் தங்கத்தினைப் பறித்தல் என்பது மிகப்பெரிய பாவச்செயல் ஆகும். இறுதியாக வருவது குருதல்பகமனம். இறுதியாகச் சொல்லப்பட்டிருந்தாலும் இதுவே பஞ்சமஹாபாதகங்களில் மிகக் கடுமையான பாவம் ஆகும். தனக்கு பாடம் சொல்லித் தந்த குருவின் மனைவியைச் சேருதல் என்பதே இதன் பொருள்.

தனக்குப் பாடம் சொல்லித் தரும் குருவின் மனைவி தாய்க்கும் மேலானவள். அவரைத் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே இந்த பாவம் ஆனது வந்து சேர்ந்துவிடும். பஞ்சமஹா பாதகங்கள் என்றழைக்கப்படுகின்ற இந்த ஐந்து பாவச் செயல்களுக்கும் விமோசனம் என்பதே கிடையாது. இதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும். இந்தப் பாவங்களை போக்க எந்தவிதமான தானமும், தர்மமும் துணை புரியாது. சுருங்கச் சொன்னால் மேற்சொன்ன இந்த ஐந்து விதமான பாவச் செயல்களைச் செய்பவர்களுக்கு பரிகாரம் என்பதே கிடையாது.

எத்தனை கடுமையான சோதனைகள் வந்தாலும் இந்த ஐந்து தவறுகளையும் செய்யவே கூடாது. இந்த பாவம் ஆனது செய்பவனை மட்டுமல்லாது அவனது பரம்பரையையே பாதிக்கும். எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் தீரவே தீராத பாவச் செயல்கள் என்பதைப் புரிந்துகொண்டாலே மக்கள் இந்தத் தவறுகளைச் செய்யமாட்டார்கள்.

?ஸ்லோகங்கள் எழுதினாலும், சொன்னாலும் 108 தடவை அதுவும் 48 நாட்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார் எனது நண்பர். இது ஏன் என்று தெளிவுபெறச் செய்யுமாறு கோருகிறேன்.
- வேம்புநாதன், பட்டாபிராம்.

அப்படியெல்லாம் எந்தவிதமான விதிமுறையும் கிடையாது. எந்த ஸ்லோகமாக இருந்தாலும் அதை நன்றாக மனதில் பதியவைத்துச் சொன்னால் அதற்குரிய பலன் நிச்சயம் கிடைத்துவிடும். அவ்வாறு அந்த ஸ்லோகமானது மனதில் நன்றாக பதிவதற்கும், அதற்கான பொருளைப் புரிந்துகொள்வதற்கும் உங்கள் நண்பர் சொன்ன நடைமுறை துணைபுரியும்.

ஓரிரு முறை படிக்கும்போதே அதனை மனதில் நன்றாக உள்வாங்கிக் கொள்வோரும் உண்டு. எந்த ஸ்லோகம் ஆக இருந்தாலும் அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்வதோடு தெளிவாக உச்சரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். தெளிவான உச்சரிப்போடும், பொருள் புரிதலோடும் சொல்லப்படுகின்ற ஸ்லோகங்களுக்குத்தான் முழுமையான பலன் என்பது வந்து சேரும்.

இதில் 108 முறை, 48 நாட்கள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. ஒரு நாளுக்கு 108 முறை வீதம் 48 நாட்களுக்கு சொல்லியும், எழுதியும் வருபவர்களுக்குக் கூட அந்த ஸ்லோகத்திற்கான பொருள் புரியாமல் இருந்தாலும், அது மனதில் பதியவில்லை என்றாலும் அவர்களுடைய முயற்சிக்கான பலன் கிடைக்காது. எத்தனை முறை சொல்கிறோம் என்பது முக்கியமல்ல, அதனை எப்படிச் சொல்கிறோம் என்பதே முக்கியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக இறைவன் நம்மை நிச்சயம் காப்பான் என்ற நம்பிக்கை உள்ளவனுக்கும், செய்கின்ற வழிபாட்டில் சிரத்தை உள்ளவனுக்கும் மட்டுமே அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

?சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், சாமியார்கள் நால்வருக்கும் என்ன வேறுபாடு?
- அயன்புரம். த. சத்தியநாராயணன்.

சித்தர்கள் என்பவர்கள் இறைவனுக்கு அடுத்த நிலையில் உள்ளவர்கள். அவர்கள் இறைவனோடு ஒட்டி உறவாடுபவர்கள். கூடு விட்டு கூடு பாய்தல், மண்ணை பொன்னாக்குதல் போன்ற சித்து விளையாட்டுகளைக் கற்றவர்கள். மரணத்தை வென்றவர்கள். இவர்களைக் காண்பது அரிது. அகத்தியர், சிவவாக்கியர், போகர், திருவெண்காடர், பாம்பாட்டி சித்தர் முதலான பதினெட்டு சித்தர்களை உதாரணமாகக் கொள்ளலாம்.

லட்சத்தில் ஒருவர் கண்ணுக்கு மட்டுமே தெரிவார்கள் என்று சித்தர்களைப் பற்றிச் சொல்வார்கள். முனிவர்கள் காட்டில் வாழ்ந்தவர்கள். காட்டில் வாழ்ந்தாலும் நாட்டின் நலம் கருதி யாகங்களைச் செய்துகொண்டும், மன்னனுக்கு உரிய அறிவுரைகளைச் சொல்லி அவர்களின் குலகுருவாகவும், வழிகாட்டியாகவும் வாழ்ந்தவர்கள்.

மனைவி, மக்களுடன் இல்லறத்தை நடத்திக் கொண்டே தவம் இயற்றி தங்கள் வலிமையைப் பெருக்கிக் கொண்டவர்கள். பரத்வாஜர், கௌதமர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர், துர்வாசர், ஜமதக்னி என்று முனிவர்களைப் பற்றி புராணங்களிலும், கதைகளிலும் படித்திருப்போம். மகான்கள் என்பவர்கள் சாதாரண மனிதர்களைப் போலவே நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் வாழ்வினை பொதுமக்களுக்காக அர்ப்பணித்தவர்கள். பொன்னையும், பொருளையும் விரும்பாமல் பொதுநலத்திற்காக மட்டுமே வாழ்ந்தவர்கள்.

காந்தி மகான் மிகச் சிறந்த உதாரணம். சாமியார்கள் இறைவனைப்பற்றி பொது மக்களிடம் பிரச்சாரம் செய்வதோடு ஆன்மிகத்தை வளரச் செய்பவர்கள். சாமியார்கள் வேறு, சந்யாசிகள் வேறு என்பதையும் புரிந்துகொள்வது நல்லது. ஊருக்கு ஊர் பல சாமியார்களை நாம் இன்று காண்கிறோம். இவர்களில் உண்மையானவர்கள் யார் என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

சித்தர்கள், முனிவர்கள், மகான்கள், சாமியார்கள் என்று நீங்கள் பட்டியலிட்ட அனைவருமே தன்னலம் கருதாது பொது நலத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்தப் பட்டியலில் முதலில் உள்ள இரு பிரிவினர் தற்காலத்தில் இல்லை. கடைசியாக வரும் இரு பிரிவினர்களை தற்காலத்திலும் காண முடியும்.

திருக்கோவிலூர் KB ஹரிபிரசாத் சர்மா