நேரம், காலம் வந்தால் எல்லாம் கூடி வரும். இது பலர் அடிக்கடி பேசும் வழக்குமொழி. அது என்ன நேரம், காலம், யோகம், அம்சம்? இது எங்கிருந்து வருகிறது? ஒரு சிலருக்கு குறைந்த அளவு யோகம் ஏற்படுகிறது. சிலருக்கு மிகப்பெரிய ராஜயோக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு யோகம், அதிர்ஷ்டம் வரும் என்று காத்திருந்து எட்டாத பழத்திற்கு கொட்டாவி விட்ட கதையாகப் போய்விடுகிறது.
எந்த சுகபோகமும் அனுபவிக்காமல், பிறந்தது முதல் கடைசிக் காலம் வரையிலும் வறுமையில் உழன்று நொடிந்து போவோர் ஏராளமானோர். சிலருக்கு பரம்பரையாக யோக வாழ்க்கை அமைந்து விடுகிறது. தந்தை கஷ்டப்பட்டாலும் மகன் நல்ல நிலையைத் தொட்டுவிடுகிறான். சிலருக்கு எவ்வித அடித்தளமும் இல்லாமல் விபரீத ராஜயோகம் ஏற்பட்டு விடுகிறது. தொழில் அனுபவம் இல்லாதவர்கள் எல்லாம் பெரும் தொழிலதிபர்களாகிவிடுகிறார்கள். எல்லாம் தெரிந்த பலர் எந்த ஏற்றமும் இல்லாமல் முடங்கி நொடிந்துப் போகிறார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம்?
உழைப்பு, முயற்சி, சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் என பல அம்சங்கள் இருந்தாலும், ஜாதக அமைப்பு, கிரகநிலைகள், ராஜயோக திசைகள்தான் நமக்கு பெரிய யோகத்தையும், அதிர்ஷ்டத்தையும் வாரி வாரி வழங்குகின்றன.
நமக்கு வியாபார, தொழில் யோகம் கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்றால் ஜாதக கட்டத்தில் முக்கியமான ஐந்து ஸ்தானங்கள் பலம் பெற வேண்டும். அத்துடன் யோக தசைகள் வர வேண்டும். அப்படி வந்தால்தான் அந்த தசைகள் மூலம் பிறந்த ஜாதகத்தில் உள்ள யோகங்கள் வேலை செய்ய ஆரம்பிக்கும். இதன்மூலம் தொழில் வளர்ச்சியும், புகழ், செல்வாக்கு, செல்வமும் குவியும்.
ஜாதகத்தில் லக்னம் என்பது பிரதானம். அதற்கடுத்து தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம், அதிர்ஷ்டத்தைத் தரும். ஐந்தாம் இடம், பாக்கியத்தை அருளும். ஒன்பதாம் இடம் மற்றும் தொழிற்ஸ்தானம் எனும் பத்தாம் இடம் ஆகிய இந்த ஐந்து இடங்களும் அந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெற வேண்டும். இவை லட்சுமி ஸ்தானங்கள் எனப்படுபவையாகும்.
லக்னப்படி பலம் பெற்றிருந்தால் ராஜயோகம், லக்னம், ராசி ஆகிய இரண்டின்படி பலம் பெற்றிருந்தால் மகா சக்ரவர்த்தியோகம், நவாம்சத்திலும் பலம் கூடினால் அஷ்டலட்சுமி கடாட்ச யோகம்.
இத்தகைய யோகம் உள்ள ஜாதகர்கள் சாதாரணமாக ஆரம்பிக்கும் தொழில் பல்கிப் பெருகி பெரிய தொழிலதிபர் என்ற பட்டத்தை ஏற்படுத்தி கோடீஸ்வர யோகத்தைத் தருகிறது. உழைப்பு ஊதியம் தரும், அதிர்ஷ்டம் உயர்வு தரும் என்பதை ஜோதிட சாஸ்திரம் அறுதியிட்டு விளக்குகிறது.
உங்களுக்கு யோகங்கள் எந்த வழியில் உண்டாகும்?
பூர்வீக சொத்துக்கள் மூலம் 1, 2, 9ம் அதிபதிகள் பலம் பெறுவதால் சொத்துக்கள் பன்மடங்கு பெருகி பயன் தருகிறது. இதன் மூலம் தொழில் யோகம் உண்டாகிறது.
2, 5ம் இடத்துக்கு உரியவர்கள் இணைந்து யோகத்தைத் தருவதால் பிள்ளைகள் பிறந்த பிறகு பெரும் செல்வம் சேர்கிறது.
2, 5, 10 ஆகிய ஸ்தானங்கள் பலம் பெறும்போது தசமதனலட்சுமி யோகம் உண்டாகி தொழில், வியாபாரம் மூலம் செல்வம் குவிகிறது.
1, 10 மற்றும் சுக்கிரன் ஏழாமிடத்துடன் சம்பந்தப்பட்டால் மனைவி வந்தவுடன் யோகம் ஏற்படுகிறது.
ஜாதகத்தில் பல யோக அம்சங்கள் இருந்தாலும் தசமதனலட்சுமி யோகம் எனப்படும் தர்மகர்மாதிபதி யோகம் மிகவும் சிறப்பானது. அதாவது லக்னத்திற்கு 9, 10 ஆகிய இரண்டு அதிபதிகள் சேர்க்கை பெறுவதால் இந்த யோகம் ஏற்படுகின்றது. ஆகையால் மேற்கூறிய அம்சங்கள் ஒன்றோ, பலவோ உங்கள் ஜாதகத்தில் இருந்தால் தொட்டது துலங்கும்; ராஜயோக பலன்கள் உங்களைத் தேடி வரும்.\
ஜோதிடமுரசு மிதுனம் செல்வம்
ரத்னகிரி முருகன்உற்சவர் ஷண்முகர் எனும் பெயரிலும், மூலவர் பால முருகன் எனும் பெயரிலும் முருகப்பெருமான் அருளும் தலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி. தல தீர்த்தமாக ஆறுமுக தெப்பம் உள்ளது.
அருணகிரிநாதரால் பாடப் பெற்ற தலம். ஆடிக் கிருத்திகையும், கந்தசஷ்டி விழாவும் சிறப்பாக இங்கே நடைபெறுகின்றன. இத்தல முருகப் பெருமானை அருணகிரியார், ஒப்பில்லாத மாமணி என பாடி மகிழ்ந்துள்ளார். இத்தலத்தில் முருகன் பால வடிவில் அருள்வதால் அர்த்தஜாம பூஜையில் இவருக்கு பால் நிவேதனம் நடைபெறுகிறது. கந்தசஷ்டியின் போது இங்கு சூரசம்ஹாரம் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தல உற்சவரான ஷண்முகர் சந்நதி, தேர் போன்ற அமைப்பில் உள்ளது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்த முருகப் பெருமானிடம் நேர்ந்து கொண்டு அந்த தோஷங்கள் நீங்கப் பெறுகிறார்கள். தங்கள் கோரிக்கை நிறைவேறியபின் பாலாபிஷேகம் செய்தும் காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுகின்றனர். பூஜையின் போது பூக்கள், நிவேதனம், தீபாராதனை என அனைத்தும் 6 என்ற எண்ணிக்கையில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ணமியில் இத்தல முருகப்பெருமானை அன்னாபிஷேக திருக்கோலத்தில் தரிசிக்கலாம். ஆடிக் கிருத்திகையில் ரத்னாங்கியில் முருகன் அருளும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்.
பரணிகுமார்