செடிகள் அல்ல... ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!



சென்னையில் வாழும் மக்களில் 30 சதவிகித மக்களுக்கு ஆஸ்துமா, வீசிங் பிரச்னைகள் உள்ளன. ‘நச்சுப்புகை சூழும் எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கும்’ என்று ஓர் ஆய்வு கூறுகின்றது. ‘‘சுவாசிக்க சுத்தமான காற்று வேணும்னா கிராமத்துக்குத்தான் போகணும். நகரங்களில்தான் மரங்களை அழித்துவிட்டோமே!’’ என நாம் வருந்துவோம். ஆனால் மரங்களுக்கு இணையாக ஆக்ஸிஜனைத் தரும் செடி, கொடிகள் பல வகைகள் உள்ளன. எல்லா சீதோஷ்ண நிலையிலும் வாழும் இந்தச் செடிகள் கிட்டத்தட்ட, ‘வாழும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்’. நமது பெட்ரூம், சமையலறை, பால்கனி என்று எங்கு வேண்டுமானாலும் இவற்றை வளர்க்கலாம்...
ஆக்ஸிஜன் பெறலாம்!



கோல்டன் போதோஸ் (Golden Pothos):
நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும். வீடு, அலுவலகம், ரயில் நிலையம், கல்லூரி என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கலாம்.

ஸ்னேக் பிளான்ட் (Snake-plant):
இது நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைட் போன்ற நச்சு வாயுக்களை கிரகித்து ஆக்ஸிஜனை வெளிப்படுத்தும். நாம் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவற்றில் ஃபார்மால்டிஹைட் இருந்தாலும் பெயின்ட், நெயில் பாலிஷ் போன்றவற்றில் சற்று அதிகமாகவே உள்ளது. இது கண் பார்வைக் கோளாறு, தலைவலி போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆக, புதிதாக வண்ணம் பூசிய வீடுகளில் பெட் ரூமில் இந்தச் செடியை வளர்ப்பது நமது ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு.



வெள்ளால் (Weeping Fig):
காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தும். சிலிண்டரில் இருந்து லீக் ஆகும் கேஸ், கழிவுப் பொருளிலிருந்தும் அழுக்குத் துணிகளிலிருந்தும் வரும் கெட்ட வாயுக்களை இது கிரகித்துக் கொள்ளும். சமையலறை, குளியலறை, மற்றும் டாய்லெட் போன்ற இடங்களில் இந்தச் செடியை வைக்கலாம்.

சீமை ஆல் (Rubber plant):
வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மை கொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்ஸிஜனை வெளியிடும். கற்றாழையின் அருகில் இந்தச் செடியை வைப்பது சிறப்பு.

கற்றாழை (AloeVera):
மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, கிராமங்களில்அனைத்து வீடுகளிலும் நிச்சயம் இருக்கும். ‘ஸ்னேக் பிளான்ட்’ காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வழங்குகிறது என்றால், கற்றாழை ஃபார்மால்டிஹைடை முழுதாகக் கிரகித்துக் கொள்ளும். மற்றும் முடி உதிர்தல், தீப்புண் போன்ற பிரச்னைகளுக்கு மருந்தாகவும் பயன்படும்.



மலைப் பனை (Bamboo Palm):
காற்றில் கலந்துள்ள நச்சுக்களை நீக்கும். அழுகிய காய்கறிகளிலிருந்து வரும் துர்வாடையை மட்டுமல்ல, பிளாஸ்டிக்கை எரிப்பதால் வரும் நச்சுக்களையும் இது கிரகித்துக்கொள்ளும். அறையில் இயற்கையான ஈரப்பதத்தை எப்போதும் நிலவச் செய்யும். வீட்டுச் சமையலறை, அலுவலகம், பலர் ஒன்று கூடும் ஆடிட்டோரியம் போன்றவற்றில் இதை வைப்பது நல்லது.

- புகழ் திலீபன்