கவிதைக்காரர்கள் வீதி



சாதிக் கலவரத்தால் நின்றது
ஊர்த் திருவிழா
தண்டனை கடவுளுக்கு...
சிலந்தி வலையால் சிறை!
- ச.மாரிமுத்து, கழனிவாசல்.

யாசகம் கேட்கும்
கைகள்
கொடுக்க மனமில்லாமல்
கையேந்துகிறார்கள்
கடவுளிடம்.
- நூர்தீன், வலங்கைமான்.



பள்ளிக்கூட
விடுமுறை நாட்களில்
பட்டினி கிடக்கின்றன
பிள்ளைகளின்
சோற்று டப்பாக்கள்!
- ந.கன்னியக்குமார், நல்லரசன்பேட்டை.

எனக்கு அந்தத் தெருவில்
வீடு இருக்கிறது
அவர்களுக்கு
அந்தத் தெருவே
வீடாக இருக்கிறது,
நடைபாதைவாசிகள்
- நா.கோகிலன், ஜோலார்பேட்டை.

யாருமற்ற நேரங்களில்
ஊஞ்சலாடிக்கொள்கிறது
காற்று
முற்றத்து ஊஞ்சலில்
- மகிவனி, கோவை.

யாரேனும் வரலாமென
திறந்திருக்கிறது
கோயில் கதவு
யாராவது வரமாட்டார்களாவென
ஏங்கிக்கொண்டிருக்கிறது
குருக்கள் மனது
- சுப்ரா, திருநெல்வேலி.