இல்லை
தெருமுனையில் தியாகராஜனின் தலை தெரிந்ததும், பால்கனியில் நின்றிருந்த பால்சாமி ‘சட்’டென தன் அறைக்குள் நுழைந்தார். மனைவியை அழைத்து, ‘‘இதோ பார்! தியாகு வர்றான். என்னைக் கேட்டால் ‘வெளியூர் போயிருக்கார். வர ஒரு வாரம் ஆகும்’னு சொல்லி அனுப்பிடு. எப்போ பார்த்தாலும் கடன் கேட்டு வந்து நிக்கறான்’’ என்று சொல்லிவிட்டுப் பதுங்கிக்கொண்டார். அவளும் அப்படியே செய்ய, தியாகராஜன் திரும்பிப் போய்விட்டார். ஒரு வாரத்துக்குப் பின் தியாகராஜன் போன் செய்து, ‘‘நீ வெளியூர் போயிருந்த நேரத்துல ஒரு நல்ல ஆஃபர். ஒரு பெரிய பார்ட்டி ஆயிரம் ஜோடி ஷூ ஆர்டர் கொடுத்தாங்க. நீ இல்லாததால வேறு ஆள் மூலமா சப்ளை செஞ்சேன்!’’ என்று சொல்ல, பால்சாமிக்கு பகீரென்றது.

போனை கட் செய்துவிட்டு தன் மனைவி பக்கம் திரும்பிய தியாகராஜன், ‘‘நண்பனா இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு ஆயிரம் ரூபா கூட கடன் தரமாட்டேங்கறான். கஞ்சப் பய. வீட்ல இருந்துக்கிட்டே இல்லைன்னு வேறே பொய் சொல்றான். அதான் வருத்தப்படட்டும்னு சும்மா புருடா விட்டேன்’’ என்றார்.
-மலர்மதி
|