கவிதைக்காரர்கள் வீதி



* வாழ்க்கை
எழுந்து நடந்தான்
எலும்பொடிந்த வித்தைக்காரன்
தட்டில் கைதட்டல் ஒலி!
- வே.பெருமாள், சென்னை-4.

* அர்த்தம்
வெந்ததும் வேகாததுமாய்
அவசர அவசரமாய் விழுங்கி
ரயில், பேருந்து துரத்தி
கொட்டடியில் அடைக்கப்பட்ட
ஏதோவொன்றாய்
இருந்து திரும்புகையில்
எதனால் அர்த்தப்படும்
என் பிறப்பு?
- பாலுவிஜயன், சென்னை-114.

* தீட்டு
பேருந்து நிலையத்துக்குள்
வராத பேருந்தை
பார்க்கும்போதெல்லாம்
சேரிக்குள் வராத
தேர் நினைவுக்கு வருகிறது
- ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.

* ஆச்சரியம்
விழித்த பின்பும்
நம்ப முடியவில்லை
அது கனவென்று.
- ப.மதியழகன், மன்னார்குடி.

* துணை
துணை தேடி
ஊரெல்லாம் சுற்றிய
சிட்டுக்குருவி
கடைசியாக
யாரோ பார்க்கில்
விட்டுச் சென்றிருந்த
ஸ்மார்ட்போனுக்குள் இருந்த
இன்னொரு குருவியுடன்
கொஞ்சிக் கொண்டிருந்தது!
- கனவு திறவோன், ரூர்க்கி.

* நினைவு
சேர்ந்து பருகியிருந்த
சந்தர்ப்பங்களில் ஒன்று
நினைவில் இடறுகிறது
மறுபடியும் வாய்க்கையிலாவது
சொல்லிவிட வேண்டும்
வேண்டுமென்றே எதுவும்
இல்லை என்று!
- சக்தி கிரி, சிந்தம்பாளையம்மேடு.