தியாசஃபிகல் சொசைட்டி அறிந்த இடம் அறியாத விஷயம்
- பேராச்சி கண்ணன்
‘‘இந்தப் பக்கம் வந்தாலே ஜில்லுனு இருக்கும் பாஸ்...’’ அடையாறு பெசன்ட் அவென்யூ சாலைக்குள் நுழையும் போதே நம் புகைப்படக்காரர் பேச்சில் அத்தனை குளிரடிக்கிறது. அவருக்கு மட்டுமா? இந்த வழியாகச் செல்லும் எவருக்கும் இந்த ‘ஜில் ஜில்’ அனுபவம் வாய்த்திருக்கக் கூடும். காரணம், ‘தியாசஃபிகல் சொசைட்டி!’
 ‘பிரம்மஞான சங்கம்’ என்று அழைக்கப்படும் தியாசஃபிகல் சொசைட்டிக்கும் ஜில்ெலன்ற குளிர்காற்றுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அடையாறு திரு.வி.க. பாலத்திலிருந்து தொடங்கும் இந்தச் சங்கம், முகத்துவாரத்திலுள்ள ப்ரோக்கன் பிரிட்ஜ் வரை மரம், செடி, கொடிகளால் சூழப்பட்டு ஒரு காடு போல நீண்டு கிடக்கிறது. புகழ்பெற்ற அடையாறு ஆலமரமும் இதற்குள்தான் வீற்றிருக்கிறது. அதனாலேயே இந்தப் பகுதியில் இத்தனை குளுமை.
பெசன்ட் நகர், எலியட் பீச் செல்லும் அந்த சாலையின் இரண்டு புறங்களிலும் தியாசஃபிகல் சொசைட்டியின் இடம்தான். வலதுபுறம் சொசைட்டியின் பெசன்ட் தோட்டத்துடன் இணைந்தே பப்ளிஷிங் ஹவுஸ் வருகிறது. சங்கம் சார்ந்த புத்தகங்கள் பிரசுரமாகும் இடம். இதன் எதிர்ப்புறம் சொசைட்டியின் சர்வதேச தலைமையகம்.
 சுற்றிலும் அடர்ந்த மரங்கள். அதனுள் பாதைகள் மூன்றாகப் பிரிகின்றன. ‘‘விசிட்டிங் டைம் முடிஞ்சிடுச்சு. யாரைப் பார்க்கணும்?’’ காவலாளி கேட்கிறார். ‘‘ஹரிஹர ராகவன்...’’ ‘‘எதுக்காக?’’ அவர் கேட்டு முடிப்பதற்குள் ஹரிஹர ராகவனிடமிருந்து போன். ‘‘சரி, நேர போய் லெஃப்ட்ல திரும்புங்க. யானைத் தலை பில்டிங் வரும். அதுல இருப்பார்...’’ யானைத் தலையா? ஆக்ஸிலேட்டரை மெல்ல திருகுகிறோம்.
அவர் சொன்னது போலவே இடது பக்கமாகத் திரும்பியதும் மரங்களுக்கிடையே ஆங்காங்கே பழைய கட்டிடங்கள் வரவேற்றன. இருபுறங்களிலும் நூற்றுக்கணக்கான ெதன்னை மரங்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாய் சிலுசிலுவென அசைந்தாடுவதைப் பார்க்கும்போது நாம் இருப்பது சென்னைதானா என்ற சந்தேகம் வருகிறது. சொசைட்டியின் திறந்தவெளி அரங்கத்தைத் தாண்டிச் சென்றோம்.
எட்டு யானைத் தலைகளால் அலங்கரிக்கப்பட்ட பழைய கட்டிடம் பளிச்சிட்டது. முதன்முதலில் கட்டப்பட்ட சொசைட்டியின் தலைமையக பில்டிங். இதன் பின்னால் சலசலவென ஓடும் அடையாறு. பேரமைதி தவழும் அந்தக் கட்டிடத்தின் ஓர் அறையில் எண்பதில் வாழும் ஹரிஹர ராகவன் நம்மை வரவேற்றார். பிரம்மஞான சங்கத்தின் இப்போதைய தலைவர் டிம் பாய்டின் ஆலோசகர். கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக இந்தச் சங்கத்தில் வசித்து வருகிறார்.
 ‘‘சாதி, மதம், இனம், பாலினம்னு எந்த வேறுபாடும் இல்லாமல் உலகளாவிய ஒரு சகோதரத்துவத்தை உருவாக்குவதுதான் இதன் முதல் குறிக்கோள். அதுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்தச் சங்கம்...’’ நாம் கேட்பதற்கு முன்பே சட்டென விளக்கம் தந்தவர், ‘‘ஆரம்பத்துல பிரம்மஞான இயக்கத்தை 1875ல் ரஷ்யாவைச் சேர்ந்த ஹெலனா பிளாவட்ஸ்கி மேடமும், அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஆல்காட்டும் சேர்ந்து நியூயார்க் நகர்ல தோற்றுவிச்சாங்க.
இவங்க ரெண்டு பேரும் அமெரிக்காவுல சந்திச்சப்ப உருவானதுதான் பிரம்மஞான சங்கம். அதன்பிறகு அன்னிபெசன்ட் அம்மையார் இதன் தலைவராக இருந்து வழிநடத்தினார்...’’ என பேசிக்கொண்டே அந்தப் பெரிய அறைக்குள் அழைத்துச் சென்றார். ‘T’ வடிவிலான ஓர் அறை. அதன் மையத்தில் மேடம் பிளாவட்ஸ்கி அமர்ந்த நிலையிலும், அவரின் தோளில் கைவைத்தபடி கர்னல் ஆல்காட் நின்ற நிலையிலுமான சிலை. இவர்களைச் சுற்றிலும் சுவர்களில் எல்லா மதத்தினரும் வணங்கும் சிலைகள்.
மேலே, ‘There is no Religion higher than truth’ என்ற வாசகம் பெரிய எழுத்துகளில் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே பேசுவதற்கு வசதியாக சேர்களும், நாற்காலிகளும் இருக்கின்றன. ‘‘இது மீட்டிங் ஹால். தியானமும் செய்யலாம்...’’ என்ற ஹரிஹர ராகவன் தொடர்ந்தார். ‘‘அமெரிக்காவுல சங்கத்தைத் தொடங்கினாலும் பல மதங்கள் கொண்ட இந்தியாதான் இந்த இயக்கத்துக்கு சிறந்த இடமா இருக்கும்னு நினைச்சாங்க.
அதனால, 1879ம் ஆண்டு பம்பாய் வந்து நல்ல இடமா தேடினாங்க. 1882ல சென்னைல ஹட்டில்ஸ்டன் கார்டன்னு அழைக்கப்பட்ட இந்தப் பகுதி அவங்களுக்கு பிடிச்சுப் போச்சு. இதுதான் தங்களோட எதிர்கால வீடுனு நினைச்சதோடு 28 ஏக்கர் வனப்பகுதியை ரூ.8,500 கொடுத்து வாங்கினாங்க. இந்தப் பணத்தை சொசைட்டி உறுப்பினர்கள்கிட்ட கடனா வாங்கி பிறகு ரெண்டு வருஷத்துல திரும்ப செலுத்தினாங்க...’’ கடந்த காலத்தை மெல்லிய குரலில் விவரிக்கிறார்.
 அவரிடம், சொசைட்டியைச் சுற்றிப் பார்க்க அனுமதி கேட்டோம். ஒரு பணியாளரை நம்முடன் அனுப்பி வைத்தார். ‘‘முதல்ல, நினைவுத்தோட்டத்துல இருந்து ஆரம்பிக்கலாம்...’’ என்றார் அந்தப் பணியாளர். அடையாறின் ஓரத்தில் சுமார் ஒரு கி.மீ. தொலைவிலிருக்கும் அந்த கார்டனுக்கு மண் வழிப் பாதையில் பயணித்தோம். வழிநெடுகிலும் பறவைகளின் ரீங்காரம். சில நொடிகளில் வெட்ட வெளியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டார் வடிவிலான தியாசஃபிகல் சொசைட்டியின் சின்னமும், அதைச் சுற்றிலும் செயற்கையான தாமரைக் குளமும் வருகிறது.
‘‘செருப்ப இங்கயே கழற்றிடுங்க...’’ பிரம்மஞானிகளின் நினைவிடத்திற்குள் நுழைந்தோம். ஸ்டாரின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆல்காட், பிளாவட்ஸ்கி தொடங்கி கடைசியாக மறைந்த சொசைட்டியின் தலைவர் ராதா பர்னியர் வரை அனைவரின் சாம்பலும் புதைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார் பணியாளர். அங்கிருந்து 1937ல் கட்டப்பட்ட மசூதியை அடைந்தோம். ஆக்ராவில் உள்ள ‘பேர்ல் மசூதி’ மாடலை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து 450 ஆண்டுகள் பழமையான ஆலமர நிழலுக்குள் தஞ்சம் புகுந்தோம். நூற்றுக்கணக்கான விழுதுகளுடன் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 670 சதுர அடி பரப்பளவு கொண்டது இந்த ஆலமரம். மகாத்மா காந்தி, ஜே.கிருஷ்ணமூர்த்தி, தலாய் லாமா போன்ற புகழ்வாய்ந்தவர்கள் இந்த ஆலமரத்தின் அடியில் சொற்பொழிவு ஆற்றியுள்ளனர். பெருமைக்குரிய இந்த மரம் 1989ல் ஏற்பட்ட புயலில் சிதைந்து போனது. இப்போது, தல மரத்தை அகற்றிவிட்டார்கள்.
 ஆனாலும், விழுதுகள் மரங்களாக வளைந்து நெளிந்து பழைய கதைகளைப் பேசியபடியே இருக்கின்றன. ‘‘அந்தப் பக்கம் கர்னல் ஆல்காட் சமாதி இருக்கு. அதைப் பார்த்திட்டு மற்ற கோயில்கள பார்க்கலாம்...’’ அவரின் சொல் கேட்டு நடந்தோம். ஆல்காட்டின் சிைல வடிக்கப்பட்ட சிறிய நினைவுச் சின்னம் அது. அதைச் சுற்றிலும் அமர்ந்து பிரார்த்தனை செய்ய கல் பென்ச் அமைத்திருக்கிறார்கள். அப்படியே போதி மரத்தின் அடியில் ஒதுங்கினோம்.
இது புத்தருக்கு ஞானம் கிடைத்த இடத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அரச மரமாம். இந்த மரத்தின் பின்னால் அல்லிக்குளமும், புத்தர் கோயிலும் அமைத்திருக்கிறார்கள். அருகிலேயே புத்த மணி ஒன்று இருக்கிறது. இதன்பிறகு, பாரத சமாஜ கோயிலைப் பார்த்தோம். ‘டெம்பிள் ஆஃப் லைட்’ என்கிறார்கள். அதாவது ஒளிக்கோயில். இங்கிருந்து செயின்ட் மைக்கேல் அண்ட் ஆல் ஏஞ்சல்ஸ் சர்ச், ஸோராஸ்ட்ரியன் கோயில், சீக்கிய கோயில் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அடையாறு லைப்ரரிக்குள் நுழைந்தோம்.
1888ம் ஆண்டில் கர்னல் ஆல்காட் சிறிய புத்தக சேகரிப்புகளோடு இந்த நூலகத்தை தொடங்கியிருக்கிறார். இன்று 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. தவிர, இந்தியா, சீனா, லங்கா மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பெறப்பட்ட 20 ஆயிரம் ஓலைச் சுவடிகளும் உள்ளன. கிழக்கத்திய நாகரிகம், தத்துவம், மதம் சார்ந்த நூல்களும், ஆய்வு ஏடுகளும் அடங்கியிருப்பதால் முக்கிய நூலகமாகக் கருதப்படுகிறது.
 கீழ்த்தளத்தில் கண்காட்சிக் கூடமும், மேல்தளத்தில் நூலகமும் அமைத்திருக்கிறார்கள். ஒரு பெரிய அறையில் நான்கைந்து அடுக்குகளில் வாரம், மாதம் என பல மொழி பத்திரிகைகள் இருக்கின்றன. வெவ்வேறு நாடுகளிலிருந்து வரும் 225 பத்திரிகைகளும் இதில் அடக்கம். ‘‘புத்தகங்கள் இல்லையா?’’ அங்கிருந்த நூலகப் பணியாளரிடம் கேட்டோம். ‘‘இந்த ரேக்ல புத்தகங்களின் பெயர்கள் இருக்கு. உங்களுக்கு என்ன புத்தகம் தேவையோ அதைப் பார்த்துச் சொல்லுங்க. உள்ளிருந்து எடுத்துத் தருவோம்...’’ என்றார்.
பார்த்தோம். ஏ முதல் இசட் வரையில் புத்தகங்கள் குறிப்புகளாக எழுதி வைக்கப்பட்டிருந்தன. ‘‘இங்க நூல்களும், பத்திரிகைகளும் படிக்க ரூ.250 கட்டணம். இதுல, இருநூறு ரூபாய் திரும்பப் பெறத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஐம்பது ரூபாய் செலுத்தினா போதும். ஒரு வருஷம் வாசகர்களாக இருப்பவர்கள் மட்டுமே புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் படிக்கலாம். இதுக்கு ரூ.800 கட்டணம். இதுல ரூ.700 திரும்பப் பெறத்தக்கது. வருஷம் நூறு ரூபாய் கட்டணம்.
1938க்குப் பிறகான புத்தகம் மட்டும்தான் கொடுக்கறோம். அதுக்கு முன்னாடி உள்ள நூல்கள் தேவைன்னா இங்கேயே படிச்சிட்டு கொடுத்திடணும்...’’ என நூலக விதிகளை நம்மிடம் தெரிவித்தார் அங்கிருந்த பணியாளர். தொடர்ந்து கீழ்த்தளத்திலிருந்த அரிய சேகரிப்பு நூல்களைப் பார்வையிட்டோம்.
 1785ல் சார்லஸ் வில்கென்ஸ் என்பவரால் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத்கீதை, சரோஜினி நாயுடுவின் ‘The Soul of India’, அறுநூறு ஆண்டுகள் பழமையான குரான், ஹீப்ரு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பைபிள், வால்மீகி ராமாயணம், இசைக்கருவிகள் பற்றிய தனித்தன்மையான புத்தகம் என ஆச்சரியப்படுத்துகின்றன.
இதன் மற்றொரு புறத்திலுள்ள அறையில் சந்திரசேகரன் என்பவரால் எடுக்கப்பட்ட சொசைட்டியின் மரங்களில் வாழும் பறவைகள், மிருகங்கள், பூச்சிகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் ஹரிஹர ராகவனைச் சந்தித்தோம். ‘‘சொசைட்டியைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டீங்களா?’’ எனக் கேட்டார். ஓரளவு என்றபடி தலையாட்டினோம். ‘‘எங்களின் லட்சிய வாசகமே, ‘உண்மையினும் உயர்சமயம் ஒன்றுமில்லை’ என்பதுதான்’’ எனப் புன்னகைத்தார்.
 படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
பிரம்மஞான சங்கம் - ஒரு பார்வை...
* சுமார் 260 ஏக்கர் பரப்பளவில் இந்தச் சங்கம் அமைந்திருக்கிறது. * இதன் இரண்டாவது தலைவர் அன்னிபெசன்ட். அவருக்குப் பிறகு, ஜார்ஜ் சிட்னி அருண்டேல், ஜினராஜ தாஸா, என்.ராம், ஜான் கோட்ஸ், ராதா பர்னியர் என ஏழு தலைவர்கள் இருந்துள்ளனர். * இங்குதான் முதன்முதலில் கலாக்ஷேத்ராவைத் தொடங்கினார் புகழ்பெற்ற நடனக் கலைஞர் ருக்மணி தேவி. இவரது தந்தை நீலகண்ட சாஸ்திரி தியாசஃபிகல் சொசைட்டியில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னாளில் தியாசஃபிகல் சொசைட்டியின் தலைவராக இருந்த ஜார்ஜ் சிட்னி அருண்டேலை மணம்புரிந்தார் ருக்மணி. * பார்வையாளர்கள் அடையாறு ஆலமரம் உள்ளிட்ட இடங்களை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8.30 மணி முதல் 10 வரையும், மதியம் 2 மணி முதல் 4 வரையும் பார்வையிடலாம். * நூலகம் காலை 9 முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். திங்கள் விடுமுறை. * உள்ளே தங்குவதற்கு மூன்று பங்களாக்களில் அறைகள் இருக்கின்றன. இதில், தங்குவதற்கான சரியான காரணத்தைச் சொல்ல வேண்டியது அவசியம். உறுப்பினர்களுக்கும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கட்டணம் வேறுபடும். * ஏழை மாணவ - மாணவிகளுக்காக கட்டணமில்லா ஆல்காட் மெமோரியல் மேல்நிைலப் பள்ளியை இந்தச் சங்கம் நடத்தி வருகிறது. இதில், 440 மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். 42 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். தவிர, சிறிய மருத்துவமனையையும் நடத்தி வருகிறார்கள்.
|