சென்னை மூழ்குகிறதா..?



ஆம் என எச்சரிக்கிறது சென்னை பெருநகரத்தின் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் செயல்திட்டம் குறித்த அறிக்கை. காலநிலை மாற்றம் காரணமாக பனிப்பாறைகள் உருகி ஒரு பக்கம் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதேபோல் கோடைக்காலத்தில் அதிக அளவிலான வெயில் அடிப்பதற்கும், மழைக்காலத்தில் மழையின் அளவு அதிகரித்து வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதற்கும் இந்த காலநிலை மாற்றமே முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சூழலில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது பற்றிய செயல்திட்ட அறிக்கையை சென்னை பெருநகர மாகராட்சி தயாரித்துள்ளது. சி40 அமைப்பு மற்றும் நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து பல்வேறு இடங்களில் ஆய்வுகளை நடத்தி இந்த அறிக்கையை சென்னைப் பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதிலுள்ள பல அம்சங்கள் அபாய மணியாக ஒலிக்கின்றன.

அடுத்த 5 ஆண்டுகளில் கடலின் நீர்மட்டம் 7 சென்டிமீட்டர் அளவுக்கு உயர வாய்ப்புள்ளதாம். அப்படி நடந்தால், வரும் 2027ம் ஆண்டுக்குள் சென்னை கடற்கரைப் பகுதிகளில் சுமார் 100 மீட்டர் தூரம் வரையிலான நிலப்பரப்பை சென்னை இழக்கும். இதே நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது 2100ம் ஆண்டுக்குள், சென்னை மாநகராட்சியின் 67 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு கடலில் மூழ்கிவிடும். இது சென்னை மாநகராட்சியின் மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதம். இப்படி நடந்தால் சுமார் 10 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழப்பார்கள்.

மழைக்காலங்களில் எதிர்பாராத அளவு மிக அதிக மழை பெய்தால் சென்னையில் உள்ள சுமார் 30 சதவீத இடம் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் இருக்கிறதாம். இதில் 500 குடிசைப் பகுதிகளாவது கடுமையாக பாதிக்கும் என இந்த அறிக்கை அலறுகிறது. 80 குடிசைப்பகுதிகளில் 5 அடி வரை தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பு உள்ளதாகவும், மாநகர போக்கு
வரத்துக் கழகத்தின் 28 பேருந்து நிறுத்தங்களும், 4 புறநகர் ரயில் நிலையங்களும், 18 மெட்ரோ ரயில் நிலையங்களும், 3 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் மழைநீரால் சூழப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது.

காலநிலை மாற்றத்துக்கான முக்கிய காரணி, கரியமில வாயுதான். சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2018ம் ஆண்டில் 14.38 மில்லியன் டன் கரியமில வாயு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் சராசரியாக 1.9 டன் கரியமில வாயு வெளியேற காரணமாக இருந்துள்ளார்கள்.வறட்சிக் காலங்களில் மெட்ரோ தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கும் 53 சதவீத குடும்பங்கள் தண்ணீருக்காக பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியிருக்குமாம்.

இப்படி அதிர்ச்சியான பல விஷயங்களை வெளியிட்டுள்ள சென்னைப் பெருநகர மாநகராட்சி, இந்த ஆபத்துகளை சமாளிப்பதற்கான ஆலோசனைகளையும் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.  
இந்நிலையில் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறது என்பது ஆறுதலான விஷயம். என்றாலும் அரசு நம்மைக் காப்பாற்றும் என இருந்துவிடாமல் தங்கள் பங்குக்கு ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதைச் செய்ய வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு முதல் காற்று மாசைத் தடுப்பது வரை காலநிலை மாற்றத்துக்குக் காரணமாக விளங்கும் சகல தீமைகளையும் அகற்ற ஒவ்வொரு சென்னைவாழ் குடி
மகனு(ளு)ம் முன்வர வேண்டும்.

ஜான்சி