கேட்டாம் பாரு ஒரு கேள்வி...
உருகி உருகி பிரார்த்திக்கும் முருகேசுக்கு, கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. முருகேசு: கடவுளே... நான் உங்ககிட்டே ஒரு விளக்கம் கேட்கலாமா..? கடவுள்: தாராளமாகக் கேள் மகனே...
 முருகேசு: பொறுமையாக, கோபப்படாமல் பதில் சொல்வீர்களா..? கடவுள்: கண்டிப்பாக... முருகேசு: இன்றைய தினம், ஏன் எனக்கு இப்படி ஒரு மோசமான நாளைக் கொடுத்தீங்க..? கடவுள்: என்னப்பா சொல்ற நீ..?
முருகேசு: எப்பவும் சரியா எழுந்திருக்கிற நான் இன்னைக்கு எழுந்திரிச்சதே லேட்... கடவுள்: ஆமாம்... அவசரத்துல என்னைக் கூட கும்பிடாம ஆபீஸுக்கு புறப்பட்டுட்ட. முருகேசு: கிளம்பினதே லேட். இதுல என் பைக் வேற பஞ்சர் ஆகியிருந்தது.கடவுள்: ஆமாம்... எனக்குத் தெரியும்.
முருகேசு: சரி, பஸ்ல போலாம்னு பஸ்ஸை பிடிச்சா வழியில ஏதோ ஆக்சிடெண்ட் போல. ஒரே டிராஃபிக் ஜாம். ஆபீஸுக்கு நான் ஒரு மணிநேரம் லேட்.
கடவுள்: ஆமாம்... தெரியுமே.
முருகேசு: மதியம் சாப்பிட கொஞ்சம் லேட் ஆயிருச்சு. அதுக்குள்ளே கேண்டீன்ல சாப்பாடு காலியாயிருச்சு. கடைசில பசிக்கு ஏதோ கிடைச்சதை அரைகுறையா சாப்பிட்டுட்டு வந்தேன்.
கடவுள்: ஆமாம், அதுவும் தெரியும்.
முருகேசு: வங்கியில் பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருந்தேன். அது விஷயமா ஒருத்தர்கிட்டே இருந்து நான் போனை எதிர்பார்த்திருந்தேன். சாயந்திரம் வீட்டுக்கு திரும்பும்போது அவர்கிட்டேயிருந்து எனக்கு கால் வந்தது. பேட்டரியில சார்ஜ் இல்லாம மொபைல் அந்த நேரம் பார்த்து ஆஃப் ஆயிடிச்சு. கடவுள்: ஆமாம், தெரியும்.
முருகேசு: அதைப் பிடிச்சி... இதைப் பிடிச்சி... முட்டி மோதி வீட்டுக்கு வந்து, கொஞ்ச நேரம் ரூம்ல ஏசியில உட்கார்ந்து டிவியை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்னா... ஏசி ரிப்பேர் போல. வேலையே செய்யல. இன்று எனக்கு எதுவுமே சரியில்லையே..! ஒரு நாள் உங்களைக் கும்பிட மறந்ததுக்கு இவ்ளோ கஷ்டங்களா கடவுளே..? (கடவுள் பலமாக சிரிக்கிறார்)
கடவுள்: இன்னைக்கு உன் கர்மாவின்படி மிகவும் மோசமான நாள். நீ காலை அசந்து தூங்கிகிட்டிருக்கும்போதே மரணதேவன் உன்னை நோக்கி வந்துவிட்டான். அவன் கூட வாக்குவாதம் பண்ணி உன்னை காப்பாற்ற வேண்டி உன்னை கொஞ்சம் அதிக நேரம் தூங்க வெச்சேன். முருகேசு: (அதிர்ச்சியுடன்) ஓ..!
கடவுள்: உன் பைக்கை பஞ்சராக்கினேன். ஏன்னா, நீ ஆபீஸ் போகும்போது, பிரேக் பிடிக்காம தாறுமாறா ஓடுற வேன் ஒண்ணு உன் மேல இடிக்கிறதா இருந்தது. அந்த வேன் ஆக்சிடென்ட்டாகிதான் டிராஃபிக் ஆச்சு. நீ பைக்ல போயிருந்தா அந்த வேன் மரணதேவன் கணக்குப்படி உன் மேல இடிச்சிருக்கும்.
முருகேசு: (அடக்கத்துடன்) ஓ... கடவுள்: மதியம் உனக்கு சாப்பாடு கிடைக்காம போனதுக்கு காரணம், கடைசியா மிச்சமிருந்த குழம்புல எலிக்கு வெச்சிருந்த எலி பாஷாணம் எப்படியோ தவறி விழுந்துடிச்சு. யாரும் அதைக் கவனிக்கல. அதை நீ சாப்பிட்டிருந்தா என்னாயிருக்கும்..? முருகேசு: (கண்கலங்கியபடி) ம்ம்...
கடவுள்: சாயந்திரம் உன் அலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆனதுக்குக் காரணம், அந்த நபர் உனக்கு தவறான வாக்குறுதிகள் கொடுத்து இக்கட்டில் மாட்டிவிட இருந்தார். எனவே அதிலிருந்து காப்பாற்ற வேண்டி, உன் போனை... முருகேசு: ம்ம்...
கடவுள்: அப்புறம், அந்த ஏசி மெஷின் எர்த் கோளாறு ஏற்பட்டு அதில் முறையற்ற முறையில் கரண்ட் வந்து கொண்டிருந்தது. ஒருவேளை முகம் கழுவிக்கொண்டு ஈரக் கைகளுடன் எப்போதும் போல நீ சுவிட்சை தொட்டிருந்தால், அந்தக் கணமே தூக்கி எறியப்பட்டிருப்பாய். ஆகையால் அதை செயலிழக்கச் செய்தேன்.
என்னை வணங்க மறந்ததால் அன்று முழுதும் நீ சோதனையை சந்தித்தாய் என்று என்னை தவறாக நினைத்துக் கொண்டாய். ஆனால், அனுதினமும் நீ என்னை வணங்கி வந்த காரணத்தால் நீ என்னை மறந்த அன்றும் கூட நான் உன்னைக் காக்க மறக்கவில்லை. முருகேசு: இத்தனை ஆபத்துலேர்ந்து என்னைக் காப்பாத்துனீங்களே..! ஆனா, என் கல்யாணத்தன்னிக்கு எங்க போயிருந்தீங்க? கடவுள்: மகனே... நீ சாமி கும்பிட ஆரம்பிச்சதே, கல்யாணத்துக்குப் பிறகுதானே..!
காம்ஸ் பாப்பா
|