அவகாசம்





மாலதியைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு பரம திருப்தி. மாப்பிள்ளையும் மாலதியைப் பார்த்து முழு சம்மதத்தோடு, ‘‘பெண்ணைப் பிடிச்சிருக்கு’’ என்றான்.

‘‘நிச்சயதார்த்தம் அடுத்த மாசம் வச்சுக்கலாம்... ஆனா கல்யாணத்தை ஆறு மாசம் கழிச்சுத்தான் நடத்த முடியும். எனக்குக் கொஞ்சம் அவகாசம் வேணும்’’ என்று தீர்மானமாகச் சொன்ன மாலதியின் தந்தை விஸ்வநாதனை எல்லோரும் குழப்பமாகப் பார்த்தார்கள்.

‘‘சரிங்க... உங்க இஷ்டம்! அப்படியே நடத்திடலாம்...’’ - என்று மாப்பிள்ளையின் தந்தை சொல்ல, அனைவரும் மகிழ்ச்சியோடு புறப்பட்டனர்.
‘‘ஏங்க... எல்லா ஏற்பாடும் ரெடியாத்தான் இருக்கு. சட்டு புட்டுன்னு கல்யாணத்த முடிக்காம எதுக்கு ஆறு மாசம் டைம் கேக்கறீங்க?’’ - மாலதியின் அம்மா மெல்லக் கேட்டாள்.
‘‘அதுக்கில்லை சுந்தரி! இந்தக் காலத்துல வயசுப் பிள்ளைங்க எல்லாருக்கும் ஒரு காதல் இருக்கத்தான் செய்யும். வெளியில சொல்லாம இருப்பாங்க. கல்யாணத்தன்னைக்குக் கூட ஓடிப் போற ஜோடி உண்டு. ‘இவன் என்னை ஏமாத்திட்டான்’னு கல்யாண மண்டபத்துல வந்து நிக்கற பொண்ணுங்களும் உண்டு. இப்படி ஒரு அவகாசம் கொடுத்தா, அதுக்குள்ள அவங்க மனசுல உள்ளதை வெளிப்படுத்தவும் ஒரு தைரியம் வருமில்லையா? அதான் அப்படிச் சொன்னேன். என்ன இருந்தாலும் நம்ம பொண்ணோட வாழ்க்கைப் பிரச்னை இல்லையா?’’ என்றார் விஸ்வநாதன்.
‘‘அதுவும் சரிதான்!’’ என்று புன்னகைத்தபடியே நகர்ந்தாள்
மாலதியின் அம்மா.