கவிதைக்காரர்கள் வீதி




நாற்காலிகள்


நாற்காலிகளைப் பற்றி
சொல்ல என்ன இருக்கிறது?
அவை நாற்காலிகள் என்பதைத் தவிர.
 
முக்காலிகளின் இடத்தை அவை
முழுதாய் தேர்ந்துகொண்டாலும்
காலொன்று கூடுதலென்ற
கர்வமற்றவை நாற்காலிகள்
 
கால் உடைந்த நாற்காலிகளால்
விழுந்தெழுந்த ஒன்றிரண்டு
சம்பவங்களோடும்,
நாற்காலிகளுடனான
நம் பிணைப்புகள்
பெரிதும் நம்பிக்கை சார்ந்தவை
 
இரண்டு கால்களால்
இயங்கிக் கடக்கும்
நம் காலங்களுக்கு
எப்படியும் இணையானவை,
நாற்காலிகளுடனான
நம் பொழுதுகள்
 
ஒன்றுக்குள் ஒன்றாய்
பிம்பங்கள் காட்டும்
சலூன் நாற்காலிகள்
 
அமைதியைக் குலைத்து
ஒலியெழுப்பும்
ஆஸ்பத்திரி நாற்காலிகள்
 
ஆட்சி அதிகாரமென்று
அமர்க்களங்களில் அடிபட்டு
உடைபடும் நாற்காலிகள்
 
எவர் மனதிலும்
நிழலாய் நடைபோடும்
காதலியோடு அமர்ந்த
கடற்கரையோர
சிமென்ட் நாற்காலிகள்
 
உறவின் பிரிவுகளை
உறுத்தலின்றி பறைசாற்றும்
புகைவண்டி நிலையத்தின்
பிளாட்பார நாற்காலிகள்
 
எங்கும் நிறைந்து இதுபோல்
இயல்பாய் நம்மில் கலந்த
இன்னபிற நாற்காலிகள்
 
இருந்து இளைப்பாற
எதையெதையோ தேடி
இன்னலுறும் இவ்வாழ்வில்
 
இருக்கும் இடத்தினில்
இதம் தரும் இந்த
நாற்காலிகளைப் பற்றி
நாம் என்ன சொல்கிறோம்?
அவை
நாற்காலிகள் என்பதைத் தவிர.

செல்வராஜ் ஜெகதீசன்