கவிதைக்காரர்கள் வீதி



*சிவகாசியை
சிதிலப்படுத்தப் பார்க்கின்றன
தீபாவளிக்குள் ஊடுருவும்
சீன வெடிகள்!
*தீ சீண்டும் வரை
சீறாமல் இருந்தன
பட்டாசுகள்.

*எதற்காகவோ தெரியவில்லை
தீபாவளி தினத்தில்
பட்டாசு வெடிக்கிறார்கள்
நரகாசுரர்களும்!

*உயரமாய்ச் சென்று
கர்வமாய்ச் சிரித்து
வெடித்தன
பணக்காரர்களின்
பட்டாசுகள்!
*தீபாவளி துப்பாக்கிகளும்
அச்சுறுத்தின
விலையைக் காட்டி!

*தீபாவளி சிறப்புத் தள்ளுபடி
ஏதுமில்லை
ஆயினும் அமோக விற்பனை
டாஸ்மாக்கில்!

*குழந்தைகளை
மத்தாப்புகளாய் சிரிக்க வைக்க
பட்டாசுகளாலேயே
முடிகிறது!

வீ.விஷ்ணுகுமார்