நியூஸ் வே



வடசென்னையில் வசிக்கும் ஒரு டெய்லர், தாதாவாக மாறுவதுதான் தனுஷ் - காஜல் அகர்வால் நடிக்கும் ‘மாரி’ படத்தின் கதையாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷும், காஜலும் அடிக்கும் ஜாலி கலாட்டாக்கள் செம ரகளை என்கிறது யூனிட்.

80’ஸ் நடிகர்-நடிகையர் சந்திப்பு ரொம்பவே பிரபலமாகிவிட, அதேபோல 90களின் குரூப்பையும் மீட் பண்ண வைத்திருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், விஜய், சூர்யா, ஜோதிகா என பெரிய நட்சத்திரக் கூட்டத்தையே அசெம்பிள் செய்து கேக் வெட்டி, கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளிவரப் போகிறது. ஓவியர், குள்ளமனிதன், மாடர்ன் யூத் என 3 கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார் என தகவல்.

‘பிகே’ படத்தை தமிழில் செய்கிறார்கள். கமல் நடிக்கும் ‘பாபநாசம்’ படத்தை டைரக்ட் செய்யும் ஜீத்து ஜோசப்தான் டைரக்ட் செய்கிறார். தமிழ் படத்திற்காக சில களங்கள் மாற்றப்படுகின்றன. இதில் கமலை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

தனது 35வது திருமண நாளை போயஸ் கார்டனிலுள்ள வீட்டில் கொண்டாடி மகிழ்ந்தார் ரஜினி. சூப்பர் ஸ்டாரை வாழ்த்த அன்று காலையிலேயே ரசிகர்கள் கூட்டம் கூடிவிட, அவர்களைச் சந்தித்து மகிழ்ந்தார் ரஜினி. திரண்ட ரசிகர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்தார் சத்திய நாராயணா. ‘லிங்கா’ டென்ஷனிலும் ரஜினி புன்சிரிப்புடன் இருந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

கடந்த வாரம் தமிழ்த் திரையுலகிற்கு இரண்டு பெரிய இழப்புகள். ஒருவர், இயக்குநர் ஆர்.சி.சக்தி. இன்னொருவர் கேமராமேன் ஏ.வின்சென்ட். கமலின் நெருக்கமானவர்கள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருந்தார் ஆர்.சி.சக்தி. கமலை வைத்து ஒரு படம் இயக்கிவிடவேண்டும் என்பது அவரது கடைசி ஆசையாக இருந்தது. அது நிறைவேறவில்லை. இயக்குனர் ஸ்ரீதரின் ஆஸ்தான கேமராமேனாக புகழ்பெற்றவர் வின்சென்ட். அவரின் கடைசி நேர்காணல் நம் ‘குங்குமம்’ இதழுக்கானதுதான்.

‘‘ ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் பத்மினி புயல் வேகமாய் சுழல்வது போல டாப் ஆங்கிளில் ஒரு காட்சி வரும். கேமராவை கயிற்றில் கட்டி ஒரு பக்கமாய் சுற்றி விட்டால், மறுபக்கம் தானாய் சுழலும். அப்படி எடுத்த காட்சி அது’’ என்றார் வின்சென்ட். இப்படி பல பரீட்சார்த்த புதுமைகளால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டம் நகர்த்தியவரின் இழப்பு பெரியது.

இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து பிரபுதேவா இயக்கும் ‘சிங் இஸ் பிளிங்’ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார் எமி ஜாக்சன். உதயநிதியுடன் நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கிற்காக கொச்சி சென்றிருக்கும் எமி, அங்கே யானைகளுக்கு உணவு வழங்கி மகிழ்ந்திருக்கிறார்.