வாழை நார் சேலை தேங்காய் நார் சேலை மூங்கில் நார் சேலை



பெண்கள் தின ஸ்பெஷல்

அசத்தும் அனகாபுத்தூர் பெண்கள்!

பட்டுச் சேலை தெரியும். பருத்திச் சேலையும் ஓகே. வாழை நார் சேலை..? தேங்காய் நார் சேலை..? மூங்கில் நார் சேலை..? சோற்றுக் கற்றாழை சேலை..? அன்னாசிச் செடி சேலை..? கோங்குரா சேலை..? சென்னை, அனகாபுத்தூருக்குப் போனால் இந்தச் சேலைகளைப் பார்க்கலாம்; வாங்கலாம். கழிவாகக் கருதி ஒதுக்கும் பொருட்களில் நாரெடுத்து... காய்கறி, பழங்கள், பட்டைகளில் வண்ணமெடுத்து உருவாக்கப்படும் இந்தச் சேலைகளை நெய்த சூடு ஆறுவதற்குள் உலகெங்கும் இருந்து வந்து அள்ளிச் சென்று விடுகிறார்கள். 

உடலை உறுத்தாத, மென்மையான, குளிர்ச்சியான இந்தச் சேலைகளின் தயாரிப்பு நுட்பத்தை சுய உதவிக்குழுக்களுக்குக் கற்றுத் தந்து, பல நூறு பேருக்கு வாழ்க்கையும், முடங்கிக் கிடந்த கைத்தறித் தொழிலுக்கு புத்துயிரும் அளித்திருக்கிறார் பாரம்பரிய நெசவாளியான சேகர்.வாழைநாரில் கைவினைப் பொருட்கள் தயாரிப்போர் நிறைய உண்டு. ஆனால், அதிலிருந்து மிகவும் நுணுக்கமாக இழையைப் பிரித்தெடுத்து, வண்ணம் சேர்த்து, நெசவு செய்வது சவாலான வேலை.

 அதை சாதித்திருக்கிறார் சேகர். 'அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவு மற்றும் கைவினைப் பொருட்கள் உற்பத்திக் குழுமம்’ என்ற அமைப்பைத் தொடங்கி 150 நெசவாளர்களை அதில் அங்கப்படுத்தியிருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சியளித்து, நிரந்தர வேலைவாய்ப்பையும் உருவாக்கித் தந்திருக்கிறார்.

1500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை நார்ச்சேலைகள் விலை போகின்றன.அனகாபுத்தூரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கிறார்கள். காலப்போக்கில் போதிய வருமானம், ஆதரவு கிடைக்காத காரணத்தால் பெரும்பாலான நெசவாளர்கள் வேறு தொழில் நாடி விட்டார்கள். பாரம்பரியத் தொழிலை விட்டு விலக மனமில்லாமல் தவித்த சொற்ப நெசவாளர்களில் சேகரும் ஒருவர்.

‘‘நானும் லுங்கி, சேலைன்னு வழக்கமான நெசவைத்தான் செஞ்சுக்கிட்டிருந்தேன். ஆனா உழைப்புக்கேத்த கூலி கிடைக்கலே. ஏதாவது வித்தியாசமா செய்ய யோசிச்சேன். நிறைய புத்தகங்கள் படிப்பேன்.

ராவணன்கிட்ட சீதை சிக்கியிருந்தபோது, அனுமன் வாழைநார்ல சீதாப்பிராட்டிக்கு சேலை நெய்து கொடுத்தார்னு ராமாயணத்துல படிச்சேன். அதை ஏன் நாம முயற்சி செஞ்சு பாக்கக்கூடாதுன்னு தோணுச்சு. வாழைப்பட்டைகளை வெட்டி எடுத்து, அதுல இருந்த கூழ்ப்பகுதி களை எல்லாம் இழைச்சேன்.

கடைசியா கத்தையா நார் மட்டும் மிஞ்சுச்சு. பொறுமையா தனித்தனி இழையா பிரிச்சேன். பருத்தி நூலுக்கு இணையா இல்லாட்டியும் ஓரளவுக்கு உறுதியா இருந்துச்சு. கொஞ்சம் பக்குவப்படுத்தினா, நிச்சயம் இதை வச்சு நெசவு செய்ய முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. மூத்த நெசவாளிங்ககிட்ட பேசி அவங்க சொன்ன ஆலோசனைப்படி அந்த நாரைப் பதப்படுத்தி நெய்து பாத்தேன். ஒரு கைக்குட்டை அளவுக்கு செஞ்ச அந்த துணி, பருத்தித் துணியை விட வித்தியாசமா இருந்துச்சு.

அடுத்து பருத்தியோட வாழைநாரை மிக்ஸ் பண்ணி ஒரு சேலை நெஞ்சேன். அதைப் பாத்துட்டு நிறைய பேர் கேட்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகு முழுமையா வாழை நார் நெசவுல இறங்கிட்டேன். அப்படியே படிப்படியா சோத்துக்கற்றாழை, மூங்கில்நார்னு பல சோதனை முயற்சிகள் செஞ்சு பாத்தேன். எல்லாமே சக்சஸ். இப்போ நிறைய நெசவாளர்களை இதுக்குள்ள கொண்டு வந்துட்டேன்...’’ - பூரிப்பாகச் சொல்கிறார் சேகர்.

செவ்வாழை, நேந்திரம், பூவன் வாழை மரங்களில் கிடைக்கும் பட்டைகளே நாரெடுக்கத் தகுந்தவை. 3 அடி நீளத்தில் பட்டைகளை வெட்டிக் கொண்டு வருகிறார்கள். சிறு கத்தி மூலம் மேலேயிருக்கும் கூழை நீக்கி விட்டு நாரை மட்டும் தனித்துப் பிரிப்பதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஒரு ஆள் நாளொன்றுக்கு 200 கிராம் நாரை பிரிக்க முடியும். அதை சிறிதுநேரம் உலர விட்டு, தனித்தனி இழைகளாக எடுத்து முடிச்சிடுகிறது இன்னொரு குழு.

அடுத்து நாரை திடமாக்கும் பணி. கடுக்காய், படிகாரம், மாதுளம்பழத் தோல், உப்பு சேர்த்துக் காய்ச்சி, அதில் நாரை நன்கு நனைத்தெடுக்கிறார்கள். நூலைக் காட்டிலும் உறுதியாகி விடுகிறது நார். அடுத்து, வண்ணம் தோய்த்தல். வண்ணத்துக்காக எந்த ரசாயனத்தையும் சேர்ப்பதில்லை. முற்றிலும் இயற்கைதான்.

‘‘வேப்பிலை, வேப்பம்பட்டை, மஞ்சள், சுண்ணாம்புன்னு எல்லாமே இயற்கையான, உடம்பை பாதிக்காத பொருட்கள்தான். வேப்பிலை, மஞ்சள்ல கொஞ்சம் சுண்ணாம்பு சேத்தா லைட் கிரீன் கிடைச்சிடும். பிங்க் கலருக்கு பீட்ரூட், வயலெட்டுக்கு நாவல் பழம், ஆரஞ்சு கலருக்கு கேரட்டும் மரத்தூளும்... இதுமாதிரி 8 விதமான கலர்கள் எடுக்கிறோம்.

நாரில் சாயம் போட்டதும், கோன்ல சுத்தி நெசவுக்குக் கொண்டு போயிடுவோம்...’’ என்கிறார் அன்னிபெசன்ட் சுய உதவிக்குழுவின் தலைவி லைலா. எல்லா நார்களுக்குமே இதுதான் பிராசஸ். 100 சதவீதம் நாரில் மட்டுமே சேலை நெய்வது சிரமம். அப்படிச் செய்தால் விலை அதிகமாகும் என்கிறார் சேகர். பருத்தியோடு 40 முதல் 80 சதவீதம் வரை நார் சேர்க்கிறார்கள். பாவாக பருத்தியும், ஊடையாக நாரும் சேர்த்து நெய்கிறார்கள்.

‘‘வாழை நார், சோற்றுக் கற்றாழை நார், தேங்காய் நார், அன்னாசி நார், புளிச்சக்கீரை நாரெல்லாம் நாங்களே ரெடி பண்ணிடுவோம். மூங்கில் நாரை வெளியில இருந்து வாங்குறோம். இதுதவிர, பட்டுப்போன காட்டு மரங்களைக் கூழாக்கி நூலெடுத்து சிலபேர் தர்றாங்க. பீச்வுட்னு சொல்லப்படுற கடற்புல்லை இழையாக்கியும் நெய்யுறோம். வெட்டிவேர், வைக்கோல்ல கூட சேலை நெய்ய முடியும். 25 வகையான நார்களை வச்சு நாங்க நெஞ்ச சேலை லிம்கா ரெக்கார்டா பதிவாகி யிருக்கு. இப்போதைக்கு சின்ன அளவுலதான் செஞ்சுக்கிட்டிருக்கோம்.

இதை விரிவுபடுத்த அரசாங்கத்தோட உதவி தேவை. தயாநிதி மாறன் மத்திய ஜவுளித்துறை அமைச்சரா இருந்தபோது, ‘நேச்சர் ஃபைபர் பாலிஸி’ன்னு ஒரு திட்டம் கொண்டு வந்தார். மாற்றுப்பொருட்கள் மூலமா துணி தயாரிக்கிற அந்தத் திட்டத்துல, தமிழ்நாட்டுல வாழைநார் மூலமா துணி தயாரிக்கிற திட்டத்தை தேர்வு செஞ்சாங்க. அவருக்குப் பிறகு அந்தத் திட்டத்தைக் கிடப்புல போட்டுட்டாங்க. நல்ல இடவசதி, இயந்திரங்களுக்கான தொழில்நுட்ப வசதிகள் செஞ்சு தந்தா இந்தத் தொழிலை பெரிய அளவுல கொண்டு போக முடியும்.

எந்த ரசாயனமும் சேர்க்கப்படாததால இது உடம்புக்கு ரொம்ப நல்லது. குளிர்ச்சி. சோற்றுக்கற்றாழை நார்ல நெய்கிற உடைகள், தோல் நோய்களையே குணப்படுத்தும். டெல்லி ஐ.ஐ.டி, பாரிஸ் எக்கோ கிரீன் கண்காட்சின்னு பல இடங்கள்ல இந்த உடைகளை காட்சிப்படுத்தியதோடு ஆய்வுக்கும் உட்படுத்தி சான்றிதழ் வாங்கியிருக்கோம். நார்கள்லயே ஃபேப்ரிக் நெசவும் செய்யறோம். அதை மும்பை வியாபாரிங்க மொத்தமா வாங்கிட்டுப் போயிடுறாங்க.

இந்தத் தொழிலை உற்சாகப்படுத்தினா கிராமப் பொருளாதாரத்தை பெரிய அளவுக்குக் கொண்டுபோக முடியும்...’’ என்கிறார் சேகர். இதுபோன்ற இயற்கைக்குக் குந்தகமில்லாத, ஆரோக்கியமான தயாரிப்புகளையும் தயாரிப்பாளர்களையும் அங்கீகரித்து உற்சாகப்படுத்த வேண்டிய கடமையில் இருந்து அரசு நழுவக்கூடாது.  ‘‘எந்த ரசாயனமும் சேர்க்கப்படாததால இது உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி. சோற்றுக்கற்றாழை நார்ல நெய்கிற உடைகள், தோல் நோய்களையே குணப்படுத்தும்.’’
 
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்