நேர்மையை யார் சாகடிக்கிறார்கள்?



ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது. எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை. ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது.

டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான். ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ. காரணம், அவரது நேர்மை.

நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் கலெக்டரின் பெயர் தெரியாது. தமிழ்நாட்டில் இருக்கும் எத்தனையோ ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர் பலருக்கும் தெரியாது. ஆனால் சகாயத்தை எல்லோருக்கும் தெரியும்.

காரணம், அவரது நேர்மை.முத்துக்குமாரசாமி என்ற வேளாண்மைத் துறை அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது. அவரது முகம் தெரியாத பலரும்கூட அவருக்காகப் போராடினார்கள். காரணம், அதிகார நெருக்கடிகளுக்குப் பணிந்துகொடுக்காத அவரது நேர்மை.

பீகாரில் தங்க நாற்கர சாலை அமைப்பதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்த முயன்ற சத்யேந்திர துபே என்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டபோது இப்படித்தான் போராட்டம் வெடித்தது. அதன்பின் உத்தரப் பிரதேசத்தில் கலப்பட எண்ணெய் விற்கும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுத்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மஞ்சுநாத்துக்கும் இப்படித்தான் மரணம் நேர்ந்தது. அவரைக் கொன்றவர்களுக்கு கடந்த வாரம்தான் ஆயுள் தண்டனை வழங்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் சுரங்கக் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் 3 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார்.

டி.கே.ரவி இறந்த இதே கர்நாடகாவில் கூட்டுறவு சங்க நில ஒதுக்கீடு முறைகேட்டை அம்பலப்படுத்திய மகந்தேஷ் என்ற அதிகாரியை இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக சாகடித்தார்கள். இன்னும் பலர் டிரான்ஸ்பர் என்ற அஸ்திரத்தால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள். அசோக் கெம்கா, சஞ்சீவ் சதுர்வேதி, துர்கா சக்தி நாக்பால் என பலர் இந்தப் பட்டியலில் உண்டு.

சகாயமும் இப்படி பலமுறை பந்தாடப்பட்டிருக்கிறார். 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 டிரான்ஸ்பர்கள். என்ன ஒரு நாடோடி வாழ்க்கை! ஒரு பதவி யில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருப்பதற்கு எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் நியாயமான உரிமை உண்டு. ஆனால் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்துக்காக எப்போதும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருப்பது எவ்வளவு நிம்மதியற்ற குடும்பச் சூழலை ஒருவருக்குக் கொடுக்கும்! 

பொது வாழ்வில் நேர்மை என்ற குணம் அரிதாகிவிட்ட காலத்தில், நேர்மையாக இருப்பது என்பது அபாயகரமான விஷயமாக ஆகிவிட்டது. எப்போது என்ன வலை விரித்து நம்மை சிக்க வைப்பார்களோ என 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டும். முதுகின் பின்னால் குத்த சக ஊழியர்களே க்யூவில் நிற்பார்கள். எல்லாம் சாக்கடையாகிப் போன ஒரு சிஸ்டத்தில் ஒரே ஒரு நேர்மையான அதிகாரி வந்து நின்றால், ‘சம்பாதிக்க’ நினைக்கும் அத்தனை பேருக்கும் அவர்தானே முதல் எதிரி!

நேர்மையாகப் பணியாற்றியதற்காக ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டும் என்றால், அவரைக் காப்பாற்றத் தவறியதற்கு இந்த தேசம் வெட்கப்பட வேண்டும். தன் பணியை நேர்மையாகச் செய்வது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கும் ஒரு அதிகாரியை மக்கள்தான் கொண்டாட வேண்டும்; பாதுகாக்க வேண்டும். ‘இவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் மக்கள் பொங்கி எழுவார்கள்’ என்ற பயம்தான் அவருக்கான பாதுகாப்புக் கவசம்.

முன்பெல்லாம் நேர்மையாக ஒரு அதிகாரி இருந்தால், தப்பு செய்யும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவரிடம் பயந்து ஒதுங்குவார்கள். ஆனால் இப்போது நேர்மை மனிதர்கள்தான் தப்பான ஆசாமிகளிடமிருந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது. ரவி மீது விரைவில் அவதூறு சேறுகள் அள்ளி வீசப்படலாம். நேர்மையாளர்களை நாம் கொண்டாடா விட்டால், அதையும் தாங்கியாக வேண்டும்!

- அகஸ்டஸ்