இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் என்.எஸ்.டி.சி.



அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு.

இந்தியா முழுவதும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோரை உருவாக்கும் நடவடிக்கைகள் முழுமையற்று இருந்தன. இதற்கான அவசியத்தை உணர்ந்தும், இது தொடர்பான அனைத்து தரப்பினரின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் வகையிலும் ‘திறன்மிகு இந்தியா’வை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை 2014 ஜூலை 31ம் தேதி உருவாக்கப்பட்டது. பின்னர் இது முழு அளவிலான திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமாக 2014 நவம்பர் 9ம் தேதி மாற்றப்பட்டது.

தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC), தேசிய திறன் மேம்பாட்டு முகமை (NSDA), தேசிய திறன் மேம்பாட்டு நிதியம் (NSDF) மற்றும் துறைவாரியான 33 திறன் குழுக்கள் (SSC) இந்த அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

நாடு முழுவதும் திறன் மேம்பாடு தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைப்பது, திறனுள்ள பணியாளர்களுக்கான தேவை மற்றும் இருப்பு ஆகியவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியைப் போக்குவது, புதிய திறன்களை உருவாக்குவது, இருக்கும் திறனை மேம்படுத்துவது, தொழில்முனைவதை ஊக்கப்படுத்துவது ஆகியவை இந்த அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் ஆகும்.

மேலே கூறப்பட்ட நான்கு அமைப்புகளிலும் பிரதானமாகவும் முழு முனைப்போடும் செயல்பட்டு வருவது தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகும். இதன் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள், இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறித்து இனி பார்க்கலாம். 

படித்து முடித்துவிட்டு அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அதேபோல தகுதி வாய்ந்த பணியாளர்கள் கிடைக்காமல் பல நிறுவனங்களும் ஆட்களை தேடிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், படிக்கும் படிப்புக்கும் தொழில் திறமைக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதை முதலில் புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான்.

இளைஞர்கள் தங்களின் தனித்திறன் எது என்பதை உணர்ந்து அதை மேம்படுத்தி தொழில்துறையில் ஈடுபட்டு மேம்பாடடைய வழிகாட்டும் அமைப்பாக இது செயல்படுகிறது. அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களையும், சுயதொழிலில் ஈடுபட விரும்பும் நபர்களையும் தொழில்முனைவோராக்க இது செயல்பட்டு வருகிறது.NSDC-ன் நோக்கம்2022ம் ஆண்டுக்குள் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள 21 துறைகளில் 50 கோடி இளைஞர்களை தகுதி உள்ளவர்களாக உருவாக்கும் இலக்கோடு ஆரம்பிக்கப்பட்டதே தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்.

ஆட்டோமொபைல், வங்கி மற்றும் இன்சூரன்ஸ், கட்டுமானத் தொழில், ரசாயனம் மற்றும் மருந்தியல், கல்வி, அவுட்சோர்சிங், ரியல் எஸ்டேட், ஜவுளி, சுற்றுலா, உணவுத் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் ஹார்டுவேர், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 21 துறைகளில் அதிக வேலைவாய்ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கேற்பவும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டும் தகுதி, திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்க வேண்டும்.

இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் உரிய தகுதி மற்றும் திறமை வாய்ந்த இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது தவிர, இந்தத் துறைகளில் உள்ள பணியிடங்களுக்குத் தேவையான சிறப்புத் தகுதிகள் என்ன, பணியாற்றுபவர்கள் பெற்றிருக்க வேண்டிய திறமை மற்றும் பயிற்சிகள் என்ன என்று வரையறுக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் உரிய தகுதி, திறமை மற்றும் பயிற்சிகள் வரையறுக்கப்பட்ட பிறகு அந்தப் பணியிடங்களுக்கு தகுதியானவரை  தேர்வு செய்வது சுலபமாக இருக்கும்.

NSDC-ன் செயல்பாடுகள்திறன் மேம்பாடு பெற்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப் பரிசுகள் வழங்குவது. இலக்குடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளை ஏராளமான இளைஞர்களுக்கு வழங்கி அவர்களை திறன்மிக்கவர்களாக ஆக்குவது, வேலைவாய்ப்பு பெறத்தக்க, வருமானம் ஈட்டத்தக்க வகையில் அவர்களை உருவாக்குவது.   

நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 5 யூனியன் பிரதேசங்களில் உள்ள 471 மாவட்டங்களில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் அனுமதியுடன் 207 தொழில் கூட்டு நிறுவனங்கள், 676 நடமாடும் மையங்கள் உட்பட 2,904 தொழில் கூட்டு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், தேசிய திறன் மேம்பாட்டு நிதியம், மத்திய மின்கட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றினிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பொதுத் துறை நிறுவனங்கள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இத்தகைய ஒப்பந்தங்கள் செய்துகொள்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் இருந்து தொழிற்பயிற்சிக்கான தொழில்நுட்பங்களைப் பெறுவது, பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது, உயர் திறன் மையங்கள் அமைப்பது, சர்வதேச தரத்துக்கேற்ப பணிகளுக்கான தகுதியை நிர்ணயிப்பது, இதுதொடர்பான தரக்கட்டுப்பாட்டு விதிகளை உருவாக்குவது போன்ற பணிகளுக்காக இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளிலும் NSDC ஈடுபட்டுள்ளது.

தொகுப்பு: எம்.நாகமணி