மாற்றுங்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை..!



இரத்தின புகழேந்தி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான அடித்தளங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனால் பள்ளிகளில் அதற்கு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது. அரசும் இத்தேர்வில் அதிக கவனம் செலுத்துகிறது. அண்மையில் நடைபெற்ற காலாண்டுத்
தேர்வில் 80 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரே நேரில் சந்தித்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100% தேர்ச்சி என்பதுதான் அரசின் இலக்கு என்று வலியுறுத்துகிறார்.

நல்ல விஷயம்தான். ஆனால், அரசின் இந்த இலக்கை அடைய அலுவலர்கள் மேலிருந்து திட்டங்களைத் தீட்டுகிற போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். களத்திலுள்ள ஆசிரியர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட வேண்டும். ஆய்வுக்கூட்டங்கள் என்பது முடிவுகளை ஆசிரியர்கள் மீது திணிப்பதாக இல்லாமல் அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதிலுள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து திட்டங்களை உருவாக்க வேண்டும். மாணவர்களின் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க வேண்டுமெனில் நடைமுறையிலுள்ள தேர்வு முறையில் மாற்றம் தேவை என்பது ஆசிரியர்களின் கருத்து. ஓராண்டு முழுவதும் கற்றதை மூன்று மணி நேரத்தில் மதிப்பிடுவதுதான் பொதுத்தேர்வு நடைமுறையாக  உள்ளது. இது முழுமையான மதிப்பீடாக இருக்க முடியாது என்பது கல்வியாளர்களின் கருத்து. அவர்களின் கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் தொடர் மற்றும் முழுமையான   மதிப்பீட்டு முறை. இதை CCE Method (Continuous and Comprehensive Evaluation) என்பார்கள்.



தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இந்த மதிப்பீட்டு முறையே பின்பற்றப்படுகிறது. மாணவர்களிடம் புதைந்து கிடக்கும் பல்வேறு வகையான திறமைகளை வெளிக்கொணர்வதற்கு இது பெரிதும் பயன்படுகிறது. நன்கு படம் வரையும் ஒரு மாணவர் தன் ஓவியத் திறமையைக்கொண்டு மதிப்பெண் பெறுகிறார். மரபுக் கலைகளில் ஆர்வமுடையவர்கள் தம் கலைத்திறனால் மதிப்பெண் பெறுகிறார்கள். கைவினைக்கலை, சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, சாரணர் இயக்கம், இளம் செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம் என அவரவர் ஆர்வத்திற்கேற்ப பாட இணைச்செயல்பாடுகளில் மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையோடு கல்வி கற்கின்றனர்.

இந்த மதிப்பீடு முறை மாணவர்களின்  தேர்வு பயத்தைப் போக்கியிருக்கிறது. எல்லா மாணவர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்களிடையே தனியாள் வேற்றுமைகள் உண்டு. இந்த புதிய மதிப்பீடுமுறை தனியாள் வேற்றுமைகளை கவனத்தில் கொள்வதாக இருப்பதால் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது. கல்வி சுமையாக இல்லாமல் சுகமான ஒன்றாக மாறியுள்ளது. இந்த மதிப்பீட்டு முறையில் வளரறி மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண், தொகுத்தறி மதிப்பீட்டிற்கு 60 மதிப்பெண் என்று இரண்டாகப் பிரித்து வழங்கப்படுகிறது. வளரறி மதிப்பீட்டின் ஒரு பகுதி செயல்பாடுகள் மூலமும் மற்றொரு பகுதி சிறு தேர்வுகள் மூலமும் மதிப்பிடப்படுகிறது. ஒரு பருவத்தில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு செயல்பாடுகளும் நான்கு சிறு தேர்வுகளும் முடிக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்கள் ஆக மொத்தம் 40 மதிப்பெண்கள். பருவம் முடிவில் 60 மதிப்பெண்ணுக்கான தொகுத்தறி தேர்வு நடைபெறும்.

இதில் மாணவர்களின் பிற திறமைகள் பாட இணைச்செயல்பாடுகள் கணக்கில் கொள்ளப்படுவதால் அனைவரும் சிறந்த மதிப்பெண் பெறுகின்றனர். அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளர்கிறது. இந்த மன நிலையோடு 9 ஆண்டுகள் கல்வி கற்று 10ம் வகுப்புக்கு வருகிறான் ஒரு மாணவன். 10ம் வகுப்பில் அவனது மற்ற திறமைகளை கவனத்தில் கொள்ளாத வெறும் ஏட்டுக்கல்விக்கு மட்டுமே மதிப்பெண் அளிக்கப்படுகிறது. இந்த தேர்வுமுறை அவனிடமிருந்த தன்னம்பிக்கையை குலைத்து தேர்வு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தேர்ச்சி விழுக்காடு குறைகிறது. தேர்வில் தேர்ச்சியடையாத பலர் அத்துடன் தங்கள் படிப்பை முடித்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கல்வியில் 9 ஆண்டுகள் ஒருவிதமான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றிவிட்டு திடீரென 10ஆம் வகுப்பில் வேறு ஒரு மதிப்பீட்டு முறைக்கு மாறுவது என்பது மாணவர்களுக்கு சுமையாக உள்ளது. அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர்.

எனவே பள்ளிக்கல்வித்துறை, மற்ற வகுப்புகளுக்கு உள்ளது போல, 10ம் வகுப்பிற்கும் மதிப்பீட்டு முறையை மாற்றவேண்டும். அல்லது அறிவியல் பாடத்திற்கு செய்முறைத்தேர்வுக்கு 25 மதிப்பெண்களும் எழுத்துத்தேர்வுக்கு 75 மதிப்பெண்களும் வழங்குவது போல்  மற்ற பாடங்களுக்கும் செயல்படுத்தலாம். செய்முறைத் தேர்வு இருப்பதால் அறிவியல் பாடத்தில் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள். அதே முறையைப் பின்பற்றி, மொழிப்பாடங்களுக்கு வாய்மொழித்தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், எழுத்துதேர்வுக்கு 75 மதிப்பெண்கள் எனவும், கணக்கு, சமூக அறிவியல் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுக்கு 25 மதிப்பெண்கள், எழுத்துதேர்வுக்கு 75 மதிப்பெண்கள் எனவும் நிர்ணயம் செய்து தேர்வு முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். தகவல் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில் பாடநூல்களிலும் கற்பித்தல் முறைகளிலும் இந்த நூற்றாண்டுக்கேற்ற மாற்றங்களை கொண்டு வருவது எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு தேர்வுமுறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதும் அவசியம்.