நடிக்க வருகிறார் கார்த்திக்கின் இளைய மகன்



‘சோலைக்குயில்' மூலம் இணைந்த காதல் ஜோடி கார்த்திக், ராகினி தம்பதிக்கு கவுதம், காயன் என இரண்டு மகன்கள். ‘கடல்' மூலம் ஹீரோவான கவுதம் கார்த்திக், இப்போது ‘என்னமோ ஏதோ', ‘வை ராஜா வை', ‘சிப்பாய்' படங்களில் நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து காயன் கார்த்திக் நடிக்க வருகிறாராம்.


இதுபற்றி கவுதம் கூறும்போது, ‘காயன் பி.ஏ படிக்கிறான். காலேஜில் அவன் பண்ற அலப்பறை தாங்க முடியாது. அவனும் நடிக்க வந்தா, ஒரேயடியா நான் வீட்டுக்கு போயிட வேண்டியதுதான். சார் ரொம்ப பிரமாதமா நடிப்பார். நான் நடிச்சி சம்பாதிச்சுக்கிறேன். அதுக்குப் பிறகு நீ நடிக்க வான்னு அவன்கிட்ட சொல்லியிருக்கேன். என் பேச்சை அவன் கேட்பானான்னு தெரியல' என்கிறார்.

‘அழகர்சாமியின் குதிரை', ‘மன்னாரு' படங்களில் ஹீரோவாக நடித்த அப்புக்குட்டி, இப்போது காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். ‘அஜீத்துடன் நடித்த ‘வீரம்' எனக்கு நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

 ஐதராபாத் ஷூட்டிங்கில் நான் நடித்த காட்சியை மானிட்டரில் பார்த்த அஜீத், ரமேஷ்கண்ணாவிடம் என்னைப்பற்றி விசாரித்தாராம். பிறகு என்னிடம், நான் நன்றாக நடித்ததாகப் பாராட்டினார்' என்ற அவர், மணிரத்னம் உதவியாளர் அருள் இயக்கத்தில், மூன்று ஹீரோக்களில் ஒருவராக ‘மேல்' படத்தில் நடிக்கிறார். ‘குள்ளநரிக் கூட்டம்' ஸ்ரீபாலாஜி டைரக்ஷனில் ‘எங்க காட்டுல மழை'யில் மிகப் பெரிய வேடமேற்று, ஜாங்கிரி மதுமிதாவின் ஜோடியாக நடிக்கிறார்.

‘ஒன்பது குழி சம்பத்', ‘நம்பர் பிளேட்', சேரன் உதவியாளர் முருகேஷ் இயக்கும் ஒரு படத்தில் மைனர் வேடம் என, பல படங்களில் நடிக்கிறார். சென்னையில் சொந்த வீடும், காரும் வாங்கியுள்ளார். என்றாலும், இன்னும் தனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறார். பாடகர்கள் டி.எம்.சவுந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ்.பி.பாலசுப்பிர மணியம் போன்றவர்கள் நடிப்பிலும் சாதித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போதுள்ள பல பாடகர்கள் இசையமைப்பிலும், நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரிலீசான ‘அரவான்' படத்துக்கு கார்த்திக் இசையமைத்தார். தயாராகி வரும் ‘கங்காரு' படத்துக்கு சீனிவாஸ் இசையமைக்கிறார். அந்த வரிசையில், பாடகர் பிரசன்னாவும் நடிகராகி விட்டார். நந்தா, அனன்யா நடிக்கும் ‘அதிதி' படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார். மலையாளத்தில் வந்த ‘காக்டெயில்' படத்தை தமிழுக்கு ஏற்ப மாற்றி, ‘அழகிய தமிழ் மகன்' பரதன் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

தமிழில் பெயர் வைக்கச் சொன்னார்கள் என்பதற்காக, சில படங்களுக்கு தூயதமிழில் பெயர் சூட்டியிருக்கிறார்கள். முதலில் அந்த தலைப்பை உச்சரிக்கும்போது, எதுவும் புரியாத மாதிரி இருக்கும். அதற்கான விளக்கத்தைக் கேட்ட பிறகுதான், ‘அடடா, இதுகூட தெரியாமல் இவ்வளவு நாட்கள் இருந்திருக்கிறோமே' என்று வெட்கப்படத் தோன்றும்.

ரஜினியின் ‘கோச்சடையான்', விக்ரமின் ‘ஐ', தனுஷின் ‘அனேகன்', ஆர்யாவின் ‘மீகாமன்', புது ஹீரோவின் ‘கடவன்', ஜீவாவின் ‘யான்', விதார்த்தின் ‘அருத்தாபத்தி', நகுலின் ‘வல்லினம்', விக்ரம் பிரபு வின் ‘அரிமா நம்பி', பிரபு சாலமனின் ‘கயல்' போன்ற படங்களின் தலைப்புகளுக்கு விளக்கம் கொடுத்த பிறகுதான் ரசிகர்களுக்கு அதன் உண்மையான அர்த்தம் புரிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஏற்கனவே ரிலீசான படங்களின் பெயர்களை மறுபடியும் சூட்டுவது வழக்கமாகி விட்டது. இப்போது உருவாகும் படங்களின் தலைப்புகள், ஏற்கனவே ரிலீசான படங்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன.

விஷால் நடிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்', அதர்வா நடிக்கும் ‘ஈட்டி', ஆர்.கே நடிக்கும் ‘என்வழி தனிவழி', விஷ்ணு விஷால் நடிக்கும் ‘சபாஷ் மாப்ளே', ஜெய் நடிக்கும் ‘அர்ஜுனன் காதலி', சுந்தர்.சி நடித்து இயக்கும் ‘அரண்மனை', ஜீவன் இயக்கும் ‘அமரா', விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமாகும் ‘சகாப்தம்', பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்', ராஜ்கிரண் இயக்கி நடிக்கும் ‘மலைக்கள்ளன்', சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்',

கரு.பழனியப்பன் இயக்கும் ‘அசோகமித்ரன்', கார்த்தி நடிக்கும் ‘காளி', கே.பாக்யராஜ் நடிக்கும் ‘துணை முதல்வர்', அஸ்வின் சேகர் நடிக்கும் ‘நினைவில் நின்றவள்', புதுமுகங்கள் நடிக்கும் ‘பகல்', வசந்தபாலன் இயக்கும் ‘காவியத்தலைவன்', கவுதம் கார்த்திக் நடிக்கும் ‘சிப்பாய்', சிம்பு நடிக்கும் ‘வேட்டை மன்னன்' போன்ற படங்களின் லிஸ்ட்டில், மேலும் சில படங்கள் சேர உள்ளன.

வெற்றிபெற்ற படத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது புதிய கதையுடனோ உருவாக்கப்படும் 2ம் பாகம் படங்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் அதிகரித்துள்ளன. கே.பாலசந்தர் இயக்கிய ‘நான் அவன் இல்லை'யை, அதே பெயரில் செல்வா ரீமேக் செய்து இயக்கினார். பிறகு அதே படத்தின் 2ம் பாகத்தையும் இயக்கினார். இரண்டிலும் ஜீவன் ஹீரோ. ரஜினி நடித்த ‘பில்லா'வை, அதே பெயரில் விஷ்ணுவர்தன் ரீமேக் செய்து இயக்கினார். பிறகு அப் படத்தின் 2ம் பாகத்தை சக்ரி டோலட்டி இயக்கினார்.

இரண்டிலும் அஜீத் ஹீரோ. ஹரி இயக்கத்தில் வந்த ‘சிங்கம்', பிறகு ‘சிங்கம் 2' ஆனது. இதையும் ஹரியே இயக்கினார். இரண்டிலும் சூர்யா ஹீரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘பீட்சா'வை, ‘பீட்சா 2 - வில்லா' ஆக தீபக் இயக்கினார். மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை', அதே காம்பினேஷனில் ‘நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ' பெயரில் ‘அமைதிப்படை 2'ம் பாகமாக உருவானது.

கமல்ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்', இப்போது ‘விஸ்வரூபம் 2' ஆக அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ளது. வின்சென்ட் செல்வா இயக்கிய ‘ஜித்தன்', ‘ஜித்தன் 2' என்ற பெயரில் உருவாகிறது. கோகுல் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனத்தை வின்சென்ட் செல்வா எழுதுகிறார். முதல் பாகத்தில் நடித்த பிறகு ‘ஜித்தன் ரமேஷ்' என்று பெயர் மாறிய ரமேஷ் இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

 ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘புலன் விசாரணை', பிரசாந்த் நடிப்பில் ‘புலன் விசாரணை 2' பெயரில் உருவானது. சில காரணங்களால் அப்படம் வரவில்லை. அர்ஜுன் இயக்கி நடித்த ‘ஜெய்ஹிந்த்', மீண்டும் அர்ஜுன் இயக்கம் மற்றும் நடிப்பில் ‘ஜெய்ஹிந்த் 2' ஆக உருவாகிறது.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் படம், ‘பாட்ஷா'. விரைவில் 2ம் பாகம் உருவாகிறது. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத் தயாரானாலும், ரஜினி தரப்பில் சம்மதம் கிடைக்கவில்லை. சிம்பு நடித்த ‘மன்மதன்', ‘மன்மதன் 2' பெயரில் சிம்பு இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்த ‘ஏய்', மீண்டும் அதே காம்பினேஷனில் ‘ஏய் 2' பெயரில் உருவாகிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன்' படத்தை, ‘இந்தியன் 2' பெயரில் உருவாக்க முயற்சிக்கின்றனர்.

ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த ‘ஜீன்ஸ்', ‘ஜீன்ஸ் 2' ஆக உருவாகும் என்று பிரசாந்த் தரப்பில் கூறப்படுகிறது. இயக்குநர் முடிவாகவில்லை. சுந்தர்.சி டைரக்ஷனில் ரிலீசான ‘கலகலப்பு', விரைவில் அவரது இயக்கத்தில் ‘கலகலப்பு 2' ஆக உருவாக்கப்படுகிறது. சிவா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சிறுத்தை', மீண்டும் இதே காம்பினேஷனில் ‘சிறுத்தை 2' ஆக உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

சோனியா அகர்வால் நடித்த ‘ஒரு நடிகையின் வாக்குமூலம்' படத்தை தயாரித்த ‘புன்னகை பூ' கீதா, அதில் ஒரு டி.வி சேனல் நிருபராக நடித்தார். இப்போது அவர் உடலைக் குறைத்து ஸ்லிம்மாகி, விமல் ஜோடியாக நடித்து வருகிறார். ‘நீயெல்லாம் நல்லா வருவடா' என்ற அப்படத்தை தயாரிக்கும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இந்தப் பக்கங்களில் வெளியாகியிருக்கும் நடிகைகளுக்கும் இந்தத் துணுக்குகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை!

- தேவராஜ்