எப்போதும் பத்து பெண்களோடு இருக்கும் கன்னிராசி இயக்குநர்!



‘களவாணி-2’ ஹிட்டுக்குப் பிறகு விமல் நடிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதன் நாயகி வரலட்சுமி சரத்குமார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி ஆகியோர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்துள்ள இந்தப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.இந்தப் படத்தில் பணியாற்றிய படக்குழு தங்கள் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.
பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, ‘‘இந்தப் படத்தை ஒரு தயாரிப்பாளர் தயாரித்த படம் என்பதைவிட ஒரு பத்திரிகையாளர் தயாரித்த படம் என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் நிறைய பத்திரிகைகளில் வேலை செய்துள்ளார். இதுபோன்ற கமர்ஷியல் படங்கள் நிறைய வரவேண்டும். விருது வாங்கும் அளவிற்கு படங்கள் எல்லாம் தேவையில்லை. ஏன் என்றால் நாம் எப்படி எடுத்தாலும் விருது கிடைக்காது. 5 வருடம் இதுதான் நிலைமை. இந்தப் படத்தில் ஒரு அற்புதமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். அதாவது காதலித்துத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற கருத்தைச் சொல்லி யிருக்கிறார்கள்’’ என்றார்.

ரோபோ சங்கர் பேசும்போது, ‘‘இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. எங்களுக்கு மிகவும் பிடித்த இடத்தில் படப்பிடிப்பு வைத்து வாராவாரம் பிரியாணி போட்டார்கள். இயக்குநர் எதற்கும் டென்ஷன் ஆகமாட்டார். காலையில்  11 மணிக்குத்தான் எங்களை படப்பிடிப்புக்கு கூப்பிடுவார். வரலட்சுமி இந்தப்படத்தில் ஒரு பொண்ணாக நடித்துள்ளார். அது எப்பவாவதுதான் அமையும். விமலுக்கு இந்தப்படம் பெரிய வெற்றிகரமாக அமையும்’’ என்றார்.இயக்குநர் முத்துக்குமரன் பேசும்போது, ‘‘இந்தப்படம்தான் எனக்கு முதல் படம். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பராக வொர்க் பண்ணிக் கொடுத்தார். அடுத்த படத்திலும் அவரோடு இணைந்து வேலை செய்வேன். எடிட்ர் ராஜா முகம்மது, ஒளிப்பதிவாளர் செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி என்று அனைவரும் சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

பெரிய போராட்டத்திற்குப் பிறகுதான் இந்தப்படம் வெளிவர இருக்கிறது. யோகிபாபு, ரோபோ சங்கர் அண்ணன் இருவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வரலட்சுமி இந்தப்படத்திற்கு என்ன தேவையோ அதை நடித்துக் கொடுத்தார். எந்த சிரமம் இருந்தாலும் அனுசரித்து நடித்துக் கொடுத்தார். நாம் என்ன சொன்னாலும் அதை அப்படியே செய்யக்கூடியவர் விமல். அதுபோல் நான் இயக்குநராக ஆனதற்கு முக்கிய காரணம் அவர்தான். விமல் இல்லையென்றால் இந்தப்படம் உருவாகி இருக்காது’’ என்றார்.வரலட்சுமி பேசும்போது,  ‘‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும்போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்தப் படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திரு மணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்.

நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இந்தப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’’ என்றார்.விமல் பேசும்போது, ‘‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. படத்துல நடிக்கிற எல்லோருடனும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. அதனால படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடுதான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். ஏராளமான படங்களில் கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்தப் படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளையோட நடித்திருக்கிறேன்’’ என அருகில் இருந்த வரலட்சுமியைக் கலாய்த்தார்.

- எஸ்