ரதஸப்தமி



ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்

ஆயுள், ஆரோக்கியம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாகச் சொல்லப்படுவது ரத சப்தமி விரதமே. தெற்குப் பாதையில் பயணிக்கும் சூரியன், ரதஸப்தமி நாள் முதல் வடக்கு திசை திரும்பிப் பயணிப்பதாக ஜோதிட, புராண நூல்கள் சொல்கின்றன. அதாவது,  தட்சிணாயன காலம் முடிந்து உத்தராயண காலம் ஆரம்பமாகும் நாள். ரதஸப்தமி அன்று சூரிய உதய நேரத்தில் எழுந்து ஆறு, ஏரி அல்லது குளத்தில் நீராடச் செல்வது சிறப்பு. இயலாதவர்கள் அவரவர் இல்லத்தில் சிறிதளவாவது சூரிய ஒளிபடும் இடத்தில் நீராடலாம்.

நீராடும்போது, ஏழு எருக்கம் இலைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி, அவற்றின் மீது சிறிது அரிசி, மஞ்சள், கோமயம் ஆகியவற்றை வைத்து அதனை அப்படியே உச்சந்தலையில் வைத்துக் கொண்டு நீரில் மூழ்கி எழ வேண்டும். வீட்டில் நீராடும் போது அவற்றைத் தலையில் வைத்துக் கொண்ட பின், தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிக்கலாம்.கீழ்க்காணும் துதியை ரதஸப்தமி தினத்தன்று பாராயணம் செய்யலாம்.

ஸப்த ஸப்திப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்ம க்ருதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்
யத் யத் ஜன்மக்ருதம் பாபம் மயாஸப்தஸு ஜன்மஸு
தன்மே ரோகம் ச ஸோகம் ச  மாகரீ ஹந்து ஸப்தமீ
நௌமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்த லோகைக மாதரம்

ஸப்தார்க்க பத்ர ஸ்னானேன மம பாபம் வ்யபோஹய!
ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்தலோக ப்ரகாஸக!
திவாகர! க்ருஹாணார்க்யம் ஸப்தம்யாம் ஜ்யோ
திஷாம் பதே! திவாகராய நம:

இதனால் நோய்கள் நீங்கும். எருக்கம் இலை வாதத்தைக் கண்டிக்கும். எனவேதான் நம் முன்னோர்கள் எருக்க இலையை அன்று தலையில் வைத்து நீராட வழி வகுத்துள்ளனர். பித்ரு தேவதைகளை திருப்திப்படுத்த எள்ளையும், மங்களங்கள் பெருக அக்ஷதையும் வைத்து நீராட வேண்டும்.

இதனால் நவகிரக தோஷமும் விலகும் என்கிறார்கள். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. காலவமுனிவர் என்பவர் தனக்கு தொழு நோய் வரப் போவதை ஞான திருஷ்டி மூலம் அறிந்தார். உடனே அவர் நவகிரகங்களை வழிபட்டு தொழுநோய் பிடிக்காமல் இருக்கும் வரத்தை பெற்றார். இதை அறிந்த பிரம்மா, வரம் கொடுக்கும் அதிகாரம் நவகிரகங்களுக்கு இல்லை என்று கோபம் கொண்டார். பிறகு அவர் நவகிரகங்களுக்கு தொழு நோய் பீடிக்க சாபமிட்டார். இதனால் நவகிரகங்களை தொழுநோய் பிடித்தது.

நவகிரகங்கள் சாப விமோசனம் பெறும் வழியை அகத்தியர் கூறினார். அதன்படி எருக்கம் இலையில் தயிர் சாதத்தை வைத்து சாப்பிட்டு தொழு நோயை நவகிரகங்கள் போக்கின. ஜாதி மத வித்தியாசம் இல்லாமல் அனைவரும் இதனை செய்யலாம். நதியில் குளிப்பவர்கள் நதி செல்லும் திசையை நோக்கித்தான் தலை முழுக வேண்டும்.

இதன் பயனாக நாம் தெரிந்தும் தெரியாமலும் 7 ஜென்மங்கள் செய்த பாவங்கள் விலகும்!இப்படிச் செய்வதால் நாம் 7 பிறவிகளில் செய்த பாவங்கள் விலகி மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் குளித்து முடித்த பின் சூரியனை நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின் தெரிந்த சூரிய துதிகளைச் சொல்ல வேண்டும்.

எந்த தெய்வத்தை வழிபடுகிறோமோ அந்த தெய்வத்தின் திருக்கரங்களில் நீர் வார்ப்பது - அர்க்கியம் விடுவது - ஒரு சம்பிரதாயம். எனவே ரத சப்தமியன்று சூரியனுக்கு அர்க்கியம் விடுவது முக்கியத்துவம் கொண்டது. சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். பொங்கல் வைத்து அதை சூடு ஆறும் முன்பாக நைவேத்தியம் செய்துவிட வேண்டும். சூரியனுக்குப் படைத்த சர்க்கரைப் பொங்கலை பிறருக்கு விநியோகிப்பது சிறப்பான பலன் தரும். ரத ஸப்தமி நாளில் வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க்கோலம் போடுவது பலரது வழக்கம்.

இந்நாளில் காலை 5 மணிக்கு எழுந்து கங்கை, யமுனை, காவிரியை நினைத்து நீர் தெளித்துக் கொண்டு, தண்ணீரில் சிறிது மஞ்சள் பொடி இட்டு எருக்க இலை முழுக்கைச் செய்த பிறகு, சூரியனது கோலத்தை வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும் போட வேண்டும். அதன் நடுவில் தீபம் ஒன்றை வைத்து, வீட்டு விளக்கையும் ஏற்றுதல் வேண்டும்.

சூரியனுக்குப் பிடித்த சர்க்கரைப் பொங்கலைத் தயார் செய்து வைத்து, தேங்காய், பழம் தாம்பூலத்துடன் எளிய துதிகளால் வெள்ளை மலர் இட்டு அர்ச்சனை செய்து ஆரத்தி காட்டுதல் வேண்டும்.  இந்தக் கோலத்தினை வீட்டு வாசலில் போட்டு, அதன் வடமாக ஒரு கோட்டினை தெருவரை நீளும்படி வரைவதும் உண்டு. நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதஸப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார்.

அன்றைய தினம் விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்கியமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சொல்கிறார்கள்.

ரதஸப்தமி தினத்தில் வழிபடும்போது, சூரியனை நோக்கி, ‘ஓம் நமோ ஆதித்யாய ஆயுர், ஆரோக்கிய, புத்திர் பலம் தேஹிமே சதா’ என்று சொல்லி வணங்கலாம்.சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசியில் பிரவேசிப்பது பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நன்னாள் முதல் உத்தராயண காலம் ஆரம்பிக்கும்.

பொதுவாக அமாவாசை, பௌர்ணமி இரண்டும் உத்திராயண, தட்சிணாயண காலங்கள் ஆரம்பிக்கும் நாட்க, கிரஹண புண்யகாலங்களில் புனித நீர்நிலைகள், திருக்குளங்களில் கடல் நீராடுதல் மிகுந்த நற்பலன் களை அளிக்கும். அது போன்று ரதஸப்தமி அன்றும் புண்ணிய நதிகள், கடலில் நீராடுவது சிறப்பான பலன்களை அளிக்க வல்லது. மேலும் அன்று சூரிய வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அன்று முதல்தான் சூரியனின் ஒளி ஏற்றம் பெறுகிறது.

அன்று சில திருமால் திருத்தலங்களில் ஏக தின பிரம்மோத்ஸம் நடைபெறுவது வழக்கம். ஒரே நாளில் 7 வாகனங்களில் பெருமாள் வீதிவலம் வருவார். காலை 6 மணிக்கு சூரியப்பிரபை முதல் வாகனசேவையாகவும் அடுத்தடுத்து கருடன், ஹம்ஸம், யாளி, குதிரை, சிம்மம் சந்திரபிரபை என்று வீதிவலத்தில் வெவ்வேறு வாகன சேவையும் சாதித்து கோயிலுக்குத் திரும்புவார். திருமலையிலும் ஏகதின பிரம்மோத்ஸவ வைபவம் நடக்கும். சென்னையில் சில திருக்கோயில்களில் ரதஸப்தமி நாளில் எடுக்கப்பட்ட சில காட்சிகளை இங்கே காணலாம்.

-ப.பரத்குமார்,
எம்.என்.ஸ்ரீநிவாசன்