வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்



அபூர்வ ஸ்லோகம்

வேல், வினைகளை வேரறுக்க வல்லது. ‘வேலுண்டு வினையில்லை’ என்பது அருளாளர் வாக்கு. ‘அச்சம் அகற்றும் அயில் வேல்’ எனச் சிறப்பிக்கிறார் குமரகுருபரர். ‘வினை ஓடவிடும் கதிர்வேல் மறவேன்’ என்று கந்தரநுபூதியும், ‘வினை எறியும் வேல்’ என்று திருப்புகழும் போற்றுகின்றன. ஆக, வேலாயுதத்தைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் நீங்கும். ‘வேலின்றி கந்தனைப் பூஜை செய்தால் பயன் வீண்படுமே’ வேல் அலங்காரம்), ‘வேல் வடிவாம் தெய்வமே’, ‘வேல் தெய்வமே’ ‘அயில் தெய்வமே’ என்றெல்லாம் குறிப்பிடுவதால் வேலனே வேல், வேலே வேலன் என்பது புலனாகும். வேல் வழிபாடே திருவருளை எளிதில் பெறச் செய்யும்.

வேலுக்கு உகந்த வழிபாடுகளில் ஒன்று வேல்மாறல் பாராயணம். அருணகிரிநாத சுவாமிகள் அருளிச் செய்துள்ள ‘வேல் வகுப்பு’ உடல் நோய், மன நோய், உயிர் நோய் ஆகிய மூவகைப் பிணிகளுக்கும் உற்ற மருந்தாகி, அவற்றை உடனே தீர்த்தருளவல்ல ஆற்றல் படைத்தது’ என்று வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் குறிப்பிடுவார். அத்தகைய பெருமைமிக்க வேல் வகுப்பினை இங்கே வழங்குகிறோம். இதனைப் பாராயணம் செய்து முருகப்பெருமான் திருவருளைப்பெறுவோமாக.

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கருத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்

ஆழ்ந்த, அகன்ற, நுண்ணியதாய் இருக்கும் வேல், கூரியதாய் நீண்டு ஒளிரும் வள்ளியம்மையின் கண்ணுக்கு ஒப்பாகும். (வள்ளிப் பிராட்டியாரின் கடைக்கண் நோக்கால் விளையும் பயன்களை வேல் அருளும் என்பது குறிப்பாகும்.)
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
  
கஜக்கடவுள் பதத்(து) இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும்

பனைமரம் போல் நீண்ட துதிக்கை, சித்திரங்களோடு விளங்கும் அலங்காரத் துணியை அணிந்துள்ள முகம், கன்னங்களிலிருந்து ஒழுகும் மதநீர்ப் பெருக்கம் ஆகியவற்றோடு, வெண்மை நிறம் வாய்ந்த யானையாகத் திகழும் ஐராவதத்தின் அதிபதியான இந்திரனது கால்களில் பூட்டியிருந்த விலங்கில்… அதனைப் பூட்டுவதற்கு ஆதாரமாக இருந்த ஆணியைத் தெறிக்கச்செய்யும் வேல் ஆற்றல் மிக்க அரமாகும்.

பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு கவிப்புலவன் இசைக்(கு)உருகி வரைக்குகையை இடித்துவழி காணும் சிறந்த ஞானத்துடன் பழைமை வாய்ந்த மதுரைத் தமிழ்ச் சங்கப் பலகையில் விளங்கிய ஒப்பற்ற நக்கீரர் இசைத்த திருமுருகாற்றுப்படைக்கு உருகி, அவர் அடைபட்டிருந்த குகையை இடித்துத் தள்ளி அவரை வேல் வெளி யேற்றும்.

பசித்தலகை முசித்தழுது முறைப் படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் பசியினால் துன்பமுற்றுப் பேய்கள் அங்கங்களை விசைத்தும், விதிர்த்தும், முடக்கியும், உதறியும் புலம்பி உணவு வேண்டி அழுவதைத் தவிர்த்து, அசுரர்களின் வளமிக்க ரத்தத்தையும் சதைகளையும் அவை உண்டு களிக்குமாறு வேல் அருளும்.

சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும் விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண் வினை சாடும்

தேவர்கள், முனிவர்கள், இந்திரன், பிரமன், திருமால், உலக மக்கள் ஆகியவர்களுக்கு நேரிடும் துன்பத்தையும், அதற்கு மூலகாரணமான பூர்வகர்ம வினைகளையும் வேல் தாக்கி அழிக்கும்.

சுடர்ப்பரிதி ஒளிப்பநில ஒழுக்குமதி
ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும்

ஒளிவிடும் சூரியன், குளிர்ந்த கிரணங்களை வீசும் சந்திரன், கடல் பொங்கிக் கரைகடந்து சென்று உலகத்தை அழிக்காதபடி அதனை அடக்கிக் கொண்டிருக்கும் வடவாமுகாக்கினி ஆகியவற்றை, ‘வேலின் ஒளிப் பிரபாவத்தின் முன் நம் ஒளி எம்மாத்திரம்’ என்று வெட்கப்பட்டு நாணி ஒளியச் செய்யும் வண்ணம், தனது பேரொளிச் சோதியை எங்கும் பிரகாசிக்கச் செய்யும், வேல்.

துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்க
இடர்நினைக்கின்அவர் குலத்தைமுதல்
அறக்களையும் எனக்கோர்துணை ஆகும்

தன்னைப் புகழ்ந்து போற்றும் அடியார்களை யாராவது கெடுக்க நினைத்து அவர்களுக்குத் துன்பம் இழைக்க மனதில் நினைத்த மாத்திரத்திலேயே, அந்த பகைவரது குலத்தையே வேருடன் அழித்துவிடும். எனக்கு ஒப்பற்றப் பெருந்துணையாகி வேல் அருள்பாலிக்கும் (ஆகவே, வேலை வணங்குவதையே வேலையாகக் கொண்டவர்களுக்கு மற்றவர்களால் எந்த விதத்திலும் துன்பம் அணுகாது.)

சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும்
அறத்தைநிலை காணும்

சொற்களால் விவரிக்க முடியாத பெருமையுடைய முருகனது திருவடியைப் புகழ்ந்து போற்றும் திருப்புகழ்ப் பாக்களை ஓதுபவர்களிடம் நிகழ்கின்ற பகையை அழிக்க, வேல் கோபித்து ஆரவாரத்துடன் கிளம்பும்.

தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்த
இறைகழற்குநிகர் ஆகும்

அலங்கார ஆர்ப்பாட்டத்துடன் அடியார்களின் உயிரைக் கவர யமன் வந்தால், எருக்கம்பூ மாலையையும் சந்திரனையும் சூடிய முடியுடைய சிவபெருமானின் பேராற்றல் மிக்க திருவடிக்கும் ஒப்பாக நின்று வேல் உதவும்.

தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்
உண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்
முனைவிதிர்க்கவளை வாகும்

உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் பெருமகிழ்ச்சி பெறும் அளவுக்கு உணவளிக்க நேரிடும்போது, மலர்ந்த தாமரை மலருக்கு ஒப்பான முருகன் திருக்கரத்தில் இருந்தபடியே, அவர் அதன் நுனியை லேசாக அசைத்தவுடன், உணவுப் பொருட்களை வேல் விளைத்துச் சேகரித்து வளைத்துக்கொண்டு சேர்த்துவிடும். (வேல் பசியைப் போக்கும்; வறுமையின்றி வாழ வைக்கும்; நமது கருத்தறிந்து முடிக்கும்; நாம் நினைப்பதையெல்லாம் நிறைவேற்றும்)

தனித்துவழி நடக்கும்என திடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்

துணையின்றித் தனியாகச் செல்லும் எனது வலது இடது பக்கங்களிலும், முன், பின் பக்கங்களிலும் உடன் நின்று இரவு பகல் எப்போதும் வேல் துணையாக நின்றருளும். சலத்துவரும் அரக்கர்உடல்கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்சினந்து வந்த அசுரர்களின் உடம்பில் கொழுத்துத் தடித்திருந்த பெரிய குடல்களைச் சிவந்த பூமாலை போல் தனது முடியில் ஆவலோடு வேல் சூடிக்கொள்ளும். (வினைகளையும் அடியோடு அழிப்பது வேல் ஒன்றே)

திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்
துதிரம் நிறைத்துவிளை யாடும்

அலைகளை வீசுகின்ற கடலில் உடைப்பு உண்டு பண்ணியும், அதில் நிறைந்துள்ள நீரையெல்லாம் ஒரு நொடியில் குடித்தும், அந்த உடைப்பு முழுவதையும் அடைத்து அங்கு அசுரர்களின் ரத்தத்தை நிரப்பியும் வேல் விளையாடும்.

திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்த சிறை
முளைத்ததென முகட்டின்இடை பறக்கஅற
விசைத்ததிர ஓடும்

குலிசாயுதத்துடன் விளங்கும் இந்திரன், முன்னொரு காலத்தில் திசைகளில் உள்ள மலைகளிலிருந்து அறுத்துத் தள்ளிய இறக்கைகள் மீண்டும் அம்மலைகளிடம் முளைத்து விட்டனவோ என்று ஐயுறும்படி, அண்டத்தின் உச்சியிலே அளவிலா வேகத்துடன் எல்லா உலகங்களும் அதிர்ச்சியுற்று நடுங்கும்படி வேல் விரைந்து செல்லும். (வேலின் அளவிலா ஆற்றல் அநேக அதிசயம் வாய்ந்தது.)

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்
வெகுகுறைத்தலைகள் சிரித்தெயிறு
கடித்துவிழி விழித்தலற மோதும்

சினம் கொண்டு அசுரர்கள் எதிர்த்த போர்க்களத்தில் அளவற்ற அறுப்பட்ட தலைகள் சிரிக்கும்படியாகவும், கண்களை உருட்டி விழித்துப் பார்க்கும்படியாகவும், வாய்கள் அலறும்படியாகவும் வேல் சாடும்.

திருத்தணியில் உதித்தருளும்ஒருத்தன்
மலை விருத்தன் என துளத்தில்உறை கருத்
தன் மயில் நடத்துகுகன் வேலே

திருத்தணிகையில் உயிர்களின் அக இருள் அகல ஞான சூரியனாகத் தோன்றி அருளும் ஒப்பற்றவனும், குறிஞ்சிக் கிழவனும், உயிருக்குயிராய் எனது உள்ளக் குகையில் உறைபவனும், கருணை உருக்கொண்டு ஆதிக்கு ஆதியாய் நிற்கும் முதல்வனுமான, திரோதான சக்தியாகிய மயிலைச் செலுத்தி நடத்தும் குகப்பெருமானின், ஞானமே உருக்கொண்ட திருவருட் சக்தியாகிய வேலே!

வேல்மாறல் பாராயணம் மன ஒருமைப்பாடு என்ற ஏகாக்ர சித்தத்தை உண்டாக்கும் வல்லமை உடையது. பொதுவாக மன ஒருமைப்பாட்டுடன் மந்திரங்களை உச்சரித்து வழிபடும்போது உண்டாகிற அதிர்வு அலைகளை வேல் மாறல் பாராயணத்தில் உணர முடியும். பயத்தினாலும், மனச்சிதைவாலும் உண்டாகும் ஏவல், வைப்பு, பில்லி, சூனியம், பேய், பிசாசு பிடித்தல் போன்ற அவஸ்தை துக்கங்களிலிருந்து விடுவிக்க வேல்மாறல் பாராயணம் கைகண்ட மருந்தாகும்.

வேல்மாறலை பக்தி, சிரத்தை, மன ஒருமைப்பாட்டுடன் குறைந்தது ஒரு மண்டல காலம் அதாவது 48 நாட்கள் விடாமல் தொடர்ந்து தினமும் காலையோ அல்லது மாலையோ ஒரு முறையாவது பாராயணம் செய்வது மிகவும் அவசியம். இதனை ஆண், பெண் மற்றும் சாதிமத பேதம் இல்லாமல் யாவரும் பாராயணம் செய்யலாம். நோய், வாழ்க்கைச் சிக்கல் முதலான பிரச்னைகள் இல்லாதவர்கள்கூட இதனைப் பாராயணம் செய்வதால் மேலும் மன உறுதி மன மகிழ்ச்சி, மன நிறைவு உண்டாகும் என்பதில் ஐயமில்லை.