கவிதைக்காரர்கள் வீதி




முள்ளைவிட மோசமாக
இருக்க வேண்டும்,
ரோஜாவைப் பிழிந்து
அத்தர் எடுக்க!
- பா.விஜயராமன், திட்டச்சேரி.

தொலைந்து போன நதியினால்
தொக்கி நிற்கின்றன பாலங்கள்
அர்த்தமற்று!
- மகிவனி, கோவை.

சிறு கலயத்தில்
மசித்துக் குழைத்து
மழலைக்கு ஊட்டும் கணத்தில்
அம்மாவின் வாயில் வந்து
அமர்ந்துகொள்கிறது
‘ஆ’வெனும் பால்யம்!
- வ.முருகன்,பாப்பனப்பட்டு.

காற்றில் தடுமாறிப்
பறக்கிறது மரம்,
காகிதமாக!
- தில்பாரதி, திருச்சி.

தொலைவில் வரும்
தொடர்வண்டி
எவ்வித சலனமுமின்றி
இருப்புப் பாதையில்
பட்டாம்பூச்சி.
- ச.கோபிநாத், சேலம்.

 பூட்டிக் கிடக்கும்
பூர்வீக வீட்டில்
ஏகபோகமாய்
வாழ்ந்து தொலைக்கிறது
வறட்டுப் பிடிவாதம்!
- நா.கி.பிரசாத்,கோவை.