சம்மர் சர்பத்!



குப்பையிலிருந்து செறிவூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரித்து விநியோகம் செய்யும் வசந்தம் சுய உதவிக்குழுவுக்கு ‘ஜெர்ம் ஃப்ரீ’ பாராட்டுகள்!
  - கோ.சு.சுரேஷ், கோவை.

‘குங்குமம்’ இதழில் வலைப்பேச்சு வாராவாரம் ‘வளர்கிறேனே மம்மி’ என மெருகேறி, வசீகர வல்லமை கொண்டதாக  ஈர்க்கிறது!
  - மனோ மணாளன், கோவை.

‘முத்தின கத்திரிக்காய்’ சுந்தர்.சி பேட்டியில் யூத் கெத்து குறையவில்லை. கத்திரிக்காய் எப்படியிருந்தாலும் செம டேஸ்ட்தானே! பூனம் பஜ்வா ஸ்டில்கள் ஜிலீர் கிளாரிட்டி!
  - க.நரசிங்கமூர்த்தி, ஈரோடு.

 சேல்ஸ்மேன் இல்லாத கடை நம் மன சுத்தத்தை சோதிக்கும் இடம்தான். ஃப்ளாட்ஸ், கார்ப்பரேட் ஆபீஸ்களில் வைப்பதால் உண்டியல் பிழைத்திருக்கிறதோ?
  - மு.சிவமுருகேசன், மதுரை.

சம்மரில் சாப்பிட்ட சர்பத் மாதிரி இருந்தது சமந்தாவின் சமர்த்தான பேட்டி. ‘இது நம்ம ஆளு’ பட விமர்சனம் செம தூளு!
  - டி.சத்தியநாராயணன், சென்னை-38

தந்தையை குடிக்கு பலிகொடுத்த ஒவ்வொரு மகனுக்குள்ளும் மதுவிலக்கு தீப்பந்தமாய் எரிந்துகொண்டுதான் இருக்கும் என்பதை உணர்த்தின மாரிமுத்துவின் வார்த்தைகள்!
  - கே.ஜெயம்மாள், திருவண்ணாமலை.

‘கேப்பிடல் லெட்டரில் மருந்துகளை எழுத வேண்டும்’ என்ற விதியை அனைவரும் கடைப்பிடித்தால்தான் பலன்தரும் என்பது மறுக்க முடியாத சுளீர் உண்மை!
  - கவிதவன் கே.குமார், திருப்பூர்.

கவர்ச்சி அருவி சோஃபியா ஹயாத் இறைவியானால் என்ன? பக்தகுழந்தையாக மடியில் புரள யோகம் இருக்கிறதே!
  - பி.தீனதயாளன், திருநெல்வேலி.

தாவர மனிதரான பஞ்சவர்ணம் தாவரங்களை வகைப்படுத்தித் தொகுப்பது, ஓர் அரசு செய்ய வேண்டிய பணி. அவருக்கு வாழ்த்தும் வணக்கங்களும்!

யதார்த்தமான சுகி.சிவத்தின் டவுன்லோடு மனசு பேச்சில் அத்தனை அனுபவ முதிர்ச்சி! அதில் மனம் லேசாகி, அப்டேட் ஆகி, எனர்ஜி கூடியது நிஜம்!
  - கே.எல்.பச்சைமுத்து, புதுச்சேரி.

(‘நினைவோ ஒரு பறவை’ இந்த இதழில் இடம்பெறவில்லை)