ஜொள்ளு
‘‘எதுக்குடி அறுந்த செருப்போடவே இருக்கே? அந்த மரத்தடியில செருப்புத் தைக்கிற பெரியவர்கிட்ட போய் தச்சுக்க வேண்டியதுதானே! பெரியவர் கேர்ள்ஸ்னா காசு கேக்க மாட்டார். சரியான ஜொள்ளு பார்ட்டி!
 சுமாரா இருக்குற எனக்கே நேத்து ஓசியில தச்சுக் குடுத்தார்... நீ பாக்கறதுக்கு அப்படியே தமன்னாவாட்டம் பளபளனு இருக்கே. உன் காலைப் பார்த்துக்கிட்டே மடமடனு செருப்பைத் தைச்சுக் குடுத்துடுவார் பார்!’’வேறு வழியின்றி, அந்த தமன்னா பெரியவரிடம் போக, செருப்பை வாங்கிய பெரியவர் மளமளவென வேலையை ஆரம்பித்தார்.
தைத்த செருப்பைக் காலில் அணிந்ததும், ‘‘கூலி எவ்வளவு?’’ என்றாள்.‘‘என்னம்மா இது? உன்கிட்ட காசு வாங்குவனா கண்ணு! கிளம்பு’’ என்றார் பெரியவர்.‘‘பாத்தியாடி? நான் சொல்லலை... பெருசு ஜொள்ளு பார்ட்டிடி!’’ என்று கிசுகிசுத்தாள் தோழி.‘‘உஷ்...’’ என அவளை அதட்டிவிட்டு தமன்னா ஒரு இருபது ரூபா நோட்டை எடுத்துப் பெரியவர் முன் வைத்தாள்.
‘‘எடுத்துக்கங்க. இனி யாருக்கும் ஓசில செருப்பு தச்சிக் குடுக்கக் கூடாது. கூலியைக் கறாரா கேட்டு வாங்கிடணும். அப்பத்தானே உங்க பெண்ணைக் காலேஜ்ல படிக்க வைக்க முடியும்? நம்ம பொண்ணு கூட காலேஜ்ல படிக்கிற பொண்ணுங்கதானேனு ஒரு பிரியத்தில யாருக்கும் ஓசில தச்சுக் குடுக்காதீங்கப்பா!’’ என்றாள் அவள் கண்ணீருடன்!
சுபமி
|