குங்குமம் டாக்கீஸ்



* கீர்த்தனா பார்த்திபனை ஹீரோயினாக நடிக்க வைக்க பலரும் முயன்றார்கள். மணிரத்னம், சீதா பார்த்திபனிடம் நேரில் சந்தித்துக்கூட கேட்டுப் பார்த்தார். மறுத்துவிட்ட சீதா, இயக்குநராக உருமாற ஓகே சொல்லிவிட்டார். அதே மணிரத்னத்தின் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார் கீர்த்தனா.

* சூர்யாவின் ‘எஸ் 3’ பட ஷூட்டிங் கிளைமாக்ஸை நோக்கிப் பரபரக்கிறது. சமீபத்தில் சென்னை பழைய மகாபலிபுரம் ரோட்டில் விறுவிறுப்பான கார் சேஸிங்கை படமாக்கியிருக்கிறார்கள்.

* பார்ட்டி, ஃபங்ஷன் காஸ்ட்யூம்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா. சைதன்யா ராவ், சிட்னி வரிசையில் இப்போது புதிதாக ஷ்ரவ்யா வர்மா என்ற டோலிவுட் டிசைனருடன் த்ரிஷ் கைகோர்த்திருக்கிறார்!

* ‘ஒருநாள் கூத்து’ ஹீரோயின் நிவேதா பெத்துராஜ், அடுத்தும் ஸ்ட்ராங்கான கதைக்காக காத்திருக்கிறார். துபாயில் வசித்து வந்த மதுரைப் பெண்ணான நிவேதா, தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தவே சென்னையில் செட்டில் ஆகியுள்ளார்.

* மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, திருமணத்துக்குப் பிறகு, மீண்டும் நடிக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. கடைசியாக அவர் நடித்த ‘இஷ்க் இன் பாரிஸ்’ படம் சரியாகப் போகவில்லை. இப்போது நடிக்கும் ‘பைய்யாஜி சூப்பர்ஹிட்’ படமாவது சூப்பர்ஹிட் ஆகட்டும்!

* சந்தானத்திற்கு நல்ல சினிமாக்களில் தான் இடம் பெற வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அதனால் முதலில் செல்வராகவனோடு கூட்டணி சேர்ந்துவிட்டார். இப்போது ‘காற்று வெளியிடை’யின் இரண்டு நாள் இடைவெளியில் வந்த மணிரத்னத்தைப் பார்த்து பேசியிருக்கிறார். என்னவெல்லாம் நடக்குேமா!

* எனக்கு படிப்புதான் முக்கியம் எனக் கூறிவந்த லட்சுமி மேனன், இப்போது முழுசாக சினிமாவில் இறங்கிவிட்டார். முன்னணி ஹீரோக்களுக்கு போன் போட்டு ‘பள்ளிக்கூடத்தை விட்டாச்சு’ என ஸ்டேட்மென்ட் கொடுத்துவருகிறார்.

* மகேஷ்பாபுவை தமிழில் நேரடியாக நடிக்கச் செய்ய கௌதம் மேனன், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் எனப் பலர் முயன்றார்கள். இதில் முருகதாஸ் வெற்றி பெற்றிருக்கிறார். மகேஷ்பாபு முதல் தடவையாக தமிழ் பேசி நடிக்கிறார்.

* ஃப்ரீ டைம் கிடைத்தால் ஆங்கில நாவல்கள் விரும்பிப் படிப்பவர் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இப்போது
புத்தகத்தை மூடி வைத்துவிட்டு ‘போகேமேன் கோ’ விளையாட ஆரம்பித்திருக்கிறார்.

* சமந்தா, ரெஜினா, ரகுல் ப்ரீத்சிங் இவர்களின் நட்புக் கூட்டணி ரொம்பவே நெருக்கமாகி வருகிறது. அமெரிக்காவுக்கு ஜாலி ட்ரிப் சென்ற இவர்கள், அங்கே சமந்தாவின் செம கிளாமர் காஸ்ட்யூமை ரொம்பவே பாராட்டியிருக்கிறார்கள். இவர்களின் நெருங்கிய தோழி நீரஜா வடிவமைத்ததாம். 

* தனுஷ், சிம்பு இரண்டு பேரும் நட்பில் ரொம்பவும் இறுகிவிட்டார்கள். சனி, ஞாயிறுகளில் வெளியே கிளம்புவது எல்லாம் சேர்ந்துதான்!

* வெரைட்டியான கார் கலெக்‌ஷன் வைத்திருக்கும் மல்லிகா ஷெராவத், சமீபத்தில் தன் கனவு கார் லம்போர்கினி அவெண்டேடரை ட்ரைவ் செய்து மகிழ்ந்திருக்கிறார்.

* தெலுங்கில் புராண கேரக்டர்கள் என்றால் ‘கூப்பிடு அனுஷ்காவை’ என்றாகிவிட்டது. நாகார்ஜுன், அனுஷ்கா நடிக்கும் ‘ஓம் நமோ வெங்கடேசா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனுஷ்காவின் கெட்டப்பிற்கு எக்கச்சக்க அப்ளாஸ். இதில் அவரது கேரக்டர் பெயர் கிருஷ்ணம்மா.

* பாரதிராஜாவும் பாலாவும் ‘குற்றப்பரம்பரை’க்காக சண்டை போட்டார்கள். இப்போதைக்கு இரண்டு பேருமே அந்தப் படத்தை எடுப்பதிலிருந்து பின் வாங்கிவிட்டார்கள் என நம்பகமான தகவல்கள் வருகின்றன!

* எப்படியாவது ‘தள்ளிப் போகாதே’ பாடலை படமாக்கிவிட்டுத்தான் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிட நினைத்தார் கௌதம். கடைசியில் வேறு வழியில்லாமல் மனசை இரும்பாக்கிக் கொண்டு படத்தை வெளியிடப்போகிறார். இப்போது சிம்புவே ஓகே சொன்னாராம். ஆனால், வேறு கெட்டப்பில் இருப்பதால் பாட்டு இடம்பெற சாத்தியம் இல்லை.

* ‘‘ஒன்றுக்கும் மேற்பட்ட பாய் ஃப்ரெண்டுகள் ஒரு பெண்ணுக்கு இருந்தால் போதும்... நம் நாட்டில் அவளுக்கு வேறு பெயர் வைத்துவிடுவார்கள். இப்படிப்பட்ட சமூகத்தில்தான் நடிகைகளாகிய நாங்களும் வாழ வேண்டியிருக்கிறது. அதனால்தான் பர்சனல் கேள்விகளுக்கு பெரும்பாலும் பதில் சொல்வதில்லை. ஹாலிவுட் போல இங்கே வெளிப்படையாக இருப்பது கஷ்டம்!’’ என ஒரு பேட்டியில் தில்லாக மனம் திறந்திருக்கிறார் பாலிவுட் நடிகை அலியா பட்!