தனுசு லக்னம் - புதன் - குரு சேர்க்கை



கிரகங்கள் தரும் யோகங்கள் - 86

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

புத்திக்கு அதிபதியான புதனும், ஆசிரியத்துவத்திற்கு அதிபதியான குருவும் சேரும்போது பேரறிஞராகத் திகழ்வார்கள். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். விதைக்கு வீர்யத்தை அளிப்பவராக இருக்கிறார். பட்டுப்போனதை பட்டாக துளிர்க்கச் செய்வதில் கருணைமுனி. எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து, நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டுமெனில் இவருடைய அனுமதியும், ஆசியும் தேவை. குரு மரபுக் கவிதை எனில்,புதன் புதுக்கவிதை. குரு, குருகுலக் கல்வி எனில் புதன் தோழமைக் கல்வி. எண்ணுபவன் குரு எனில் அதை எழுத்தாக்குபவன் புதன்.

குரு பார்க்க கோடி நன்மை என்பது மகாவாக்கியம். குல தெய்வத்திற்குச் செய் என்று உணர்த்துபவர்தான் குரு. புதன் என்றாலே ஆறாம் அறிவையும் தாண்டி யோசிப்பார்கள். நடமாடும் நூலகங்களாகத் திகழ்வார்கள். அப்பனுக்கே பாடம் சொல்லுபவர்களென்றால் அது இவர்கள்தான். எதையும் மனதில் நினைத்தவுடனே அந்த வினாடியே செய்து முடிப்பார்கள்.

இவர்கள் நினைப்பது போன்று செயலைச் செய்யவில்லை எனில் கடுமையான கோபம் கொள்வார்கள். சமயோஜித புத்தி அதிகமிருக்கும். வெற்றியானாலும், தோல்வியானாலும் இவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது என்று நினைப்பார்கள். இவ்விரு கிரகங்களும் ஒன்று சேர்ந்தால் ஒரே உறையில் இரண்டு வாள்கள்போல இருக்கும். ஒருவரை ஒருவர் விஞ்சவே முயற்சிப்பார்கள்.

மேலே சொன்னவை பொதுவானதாகும். இவ்விரு கிரகங்களும் தனுசு லக்னத்தை ஒன்றாம் இடமாகக் கொண்டு ஒவ்வொரு கட்டத்திலும் நின்றால் என்ன பலனென்றும் பார்க்கலாம். முதலில் தனுசு லக்னத்திலேயே, அதாவது ஒன்றாம் இடத்திலேயே புதனும் குருவும் நின்றால் எதிலுமே ஒரு தடுமாற்றம் இருக்கும். முடிவெடுக்க முடியாமல் குழம்பியபடி இருப்பார்கள்.

நான்குக்கு உரியவராக குரு இருப்பதால் தாயா, தாரமா என்கிற போராட்டம் இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு ஹைஜீனிக்கோடு இருப்பார்கள். எதற்காகவும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமலும், டென்ஷன் ஆகாமலும் இருப்பார்கள். தன்னை ஆதரிக்கும், உற்சாகப்படுத்துபவர்களிடம் மட்டுமே உற்சாகமாகப் பேசுவார்கள்.

வாழ்க்கை சொகுசாகச் செல்லும். இவர்களின் வாழ்க்கைத்துணை கலை, சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டோடு இருப்பார்கள். ஆண்களாக இருப்பினும் காதில் கடுக்கண் அணியும் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். மகர ராசியில் இரண்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்களும் அமர்ந்தால் சில குழந்தைகள் ஆரம்பத்தில் தாமதமாகப் பேசத் தொடங்குவார்கள்.

ஆரம்பக் கல்வியில் மந்தமாகப் படித்துவிட்டு உயர் கல்வியில் சிறப்பாகச் செயல்படுவார்கள். இவர்கள் பற்களில் கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை கண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். சின்னச் சின்ன மனக் குழப்பங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அதாவது தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்தபடி இருப்பார்கள்.

ஆரம்பத்தில் வேலை விஷயங்களில் ஸ்திரத்தன்மை இல்லாதிருந்து 41 வயதிலிருந்து ஏற்றம் கண்டு நல்லதொரு நிலையை அடைவார்கள். கும்ப ராசியான மூன்றாவது இடத்தில் புதனும் குருவும் மறைகின்றனர். எழுத்துத் திறமையும் பேச்சுத் திறமையும் பெற்று விளங்குவார்கள். புகழோடு செல்வ வளத்திலும் சிறந்து விளங்குவார்கள்.

அடுத்த தலைமுறை குறித்த அக்கறையை புதன் கொடுத்துக் கொண்டே இருப்பார். இந்த உலகை விட பெரிய ஆசிரியர் வேறு எவருமில்லை என்று விட்டுவிடுவார்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வார்கள். புத்தகமே தெய்வம் என்று வழிபாட்டுணர்வோடு படிப்பார்கள். பொதுவுடைமைச் சிந்தனை எழுத்தில் தெறிக்கும். இளைய சகோதரர்கள் மீது மிகுந்த பாசத்தோடு இருப்பார்கள். யார் ஆட்சியாளர்களாக இருந்தாலும் எல்லோரையும் எதிர்ப்பார்கள்.

நிறைய படித்துக் கொண்டே இருப்பார்கள். இலக்கியம், இசை, நாட்டியம் என்று கலைத்துறையின் ஏதேனுமொரு இடத்தில் தனக்கென்று ஒரு இடத்தை வைத்திருப்பார்கள். மீன ராசியான நான்காம் இடத்தில் குரு ஆட்சி பெறுகிறது. தாயைப் பாராட்டிப் பேசினால் மனைவிக்குப் பிடிக்காது. தாயாரோடு இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கும்.

ஆனால், வாழ்க்கைச் சூழல் சேர்ந்திருக்க விடாது. தாயாருக்கு நரம்புக் கோளாறு வந்து நீங்கும். இவர்கள் கியர் இருக்கும் வண்டியை ஓட்டாமல் இருப்பது நல்லது.  இரவு  நேரங்களில் இவர்கள் பிரயாணப்படும்போது உடைமைகளை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். இவர்கள் ஒட்டுமொத்த சமூகமும் எப்படி அமைய வேண்டும் என்கிற சிந்தனையை முன்னெடுப்பவர்களாக இருப்பார்கள்.

மேஷ ராசியான ஐந்தாம் இடத்தில் குருவும், புதனும் இடம் பெற்றால்  காலதாமதமாகத்தான் குழந்தை பாக்கியம் கிட்டும். ஆனால், அழகும், விவேகமும், புத்திசாலித்தனமும் நிறைந்த குழந்தைகள் அமைவார்கள்.  புதனும் குருவும் கிரக யுத்தத்தில் இல்லையெனில் பிள்ளைகள் பெரியளவில் பிரகாசிப்பார்கள். கனவுத் தொல்லைகளால் அவஸ்தைப்படுவார்கள்.

உறக்கமின்மையும் இருக்கும். அதனால் இவர்கள் உடல்நிலையின் பொருட்டு நன்கு தூங்குவது நல்லது. அரசாங்கத்திலுள்ள பெரிய அதிகாரிகளோடு கூட சர்வ சாதாரணமாக மோதுவார்கள். பூர்வீகச் சொத்துகளால் தொந்தரவு வந்து நீங்கும். இவர்கள் அதை ஒரு அளவுக்கு மேல் எதிர்பார்க்க வேண்டாம். மந்திரங்களின் மகத்துவம் அறிந்தவராக இருப்பார்கள். மந்திர ஜபத்திற்கு பழகுவார்கள்.

ரிஷப ராசியான ஆறாம் இடத்தில் குருவும் புதனும் சேர்ந்திருந்தால் எவ்வளவு நல்லது செய்தாலும் கெட்ட பெயர்தான் மிஞ்சும்.  இவர்கள் கடன்மேல் கடன் வாங்கி கடனை அடைக்கக் கூடாது. பெரியளவில் சிக்கிக் கொள்வார்கள். தேவையில்லாமல் எல்லோரையும் நம்பி கெடுவார்கள். மூதாதையர்கள் மீது மிகுந்த மரியாதையோடு இருப்பார்கள்.

அவர்களின் கனவுகள், ஆசைகள் என்னென்ன என்று கேட்டு அதை நிறைவேற்றுவார்கள். மிதுன ராசியான ஏழாம் இடத்தில் புதன் ஆட்சி பெறுகிறார். கூடவே லக்னாதிபதியான குருவும் இணைகிறார். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது காசு,பணம், சொத்து என்று பார்க்காமல் குணத்தை மட்டும் பார்த்து தேர்ந்தெடுப்பது நல்லது.

தன்னைவிட அதிகம் படித்த வாழ்க்கைத் துணைவர் அமைவார். கலையுணர்வு மிக்கவராக இருப்பார். அதிலும் மரபார்ந்த இசை, நாட்டியம் என்றிருப்பார். ஆனால், இங்கும் குருவிற்கு கேந்திராதிபத்ய தோஷம் ஏற்படுகிறது. எனவே, அவ்வப்போது கருத்து மோதல்களும் இருக்கத்தான் செய்யும்.

கடக ராசியான எட்டாம் இடத்தில் இவ்விரு கிரகங்கள் சேர்வதால் திடீர் பிரயாணங்கள் இருந்து கொண்டேயிருக்கும். வீடு, மனை என்று எல்லா வசதிகளும் எளிதில் கிட்டும். ஆனால், மனதில் திருப்தியற்ற ஒரு வெறுமை இருப்பதை தவிர்க்க முடியாது. சமூகத்தில் மறக்கப்பட்ட மரபான விஷயங்களைத் தோண்டியெடுத்து ஆராய்வார்கள்.

இவர்களுக்கு மர்ம ஸ்தானத்தில் நோய் வரும் வாய்ப்பு உண்டு. கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னை வரும்போது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். சித்திரம் வரைவதில் மிகுந்த ஈடுபாடு காட்டுவார்கள். சிம்ம ராசியான ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குருவும் புதனும் அமைந்தால் பெரும் யோகத்தையே கொடுக்கும். தந்தையே குருவாக இருப்பார். 

எதிலும் தனித்துவமாக இருக்க வேண்டுமென்று கடினமாக உழைப்பார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் தன்னைவிட பெரியோர்களிடம் அல்லது விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுத்தான் செய்வார்கள். இவர்கள் எந்த விஷயத்தைப் பேசினாலும் கறாராக இருப்பார்கள். பாசாங்காகவும், பாவனையாகவும் எதையும் பேச முடியாது. தன்னைச் சார்ந்தவர்கள் கஷ்டப்படும்போது தூக்கி விடுவார்கள்.

கன்னி ராசியான பத்தாம் இடத்தில் குரு மீண்டும் கேந்திராதிபத்ய தோஷம் அடைகிறார். அதாவது லக்னத்திற்கும் நான்கிற்கும் உரியவர் பத்தில் இருப்பதுடன் பத்துக்கு  உரியவரும் பத்திலேயே அமர்கிறார். வாழ்க்கைத் துணை சரியாக அமைந்தால், வேலை சரியாக அமையாது. நல்ல உத்யோகம் அமைந்து முன்னேறும்போதே வாழ்க்கைத் துணையுடன் சங்கடங்களும் பிரச்னைகளும் வந்தபடி இருக்கும்.

அரசியலில் அதிகமாக ஈடுபாடு காட்டுவார்கள். எம்.எல்.ஏ., எம்.பி. என்று ஆவார்கள். பலர் சி.ஏ. படித்துவிட்டு ஆடிட்டராகப் பணிபுரிவார்கள். அதேபோல ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராவார்கள். அந்த அளவிற்கு இங்கு கிரகங்கள் வலிமையாக நின்று பலன்களை அள்ளித் தரும். துலா ராசியான பதினோராம் இடத்தில் புதனும் குருவும் இணைந்தால் எல்லாமே லாபமளிக்கக் கூடியதாகவே இருக்கும். இது 11ம் இடமாகவும் அமைவதால் மூத்த சகோதர, சகோதரிகளாலும் நன்மைகள் அதிகமுண்டு. 

இவர்கள் எந்தத் தொழிலைத் தொடங்கினாலும் அதில் எப்பாடுபட்டாவது முன்னேறுவார்கள். செய்யும் தொழிலில், ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியே. விருச்சிக ராசியான பன்னிரெண்டாம் இடத்தில் குருவும் புதனும் இணைகின்றனர். சந்நியாசம், அருள்வாக்கு, குறி சொல்லுதல் என்றெல்லாம் ஈடுபடுவார்கள். பொருட் தேடலை விட அருட் தேடல்தான் அதிகமாக இருக்கும்.

மரபு, சடங்கு, சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களாகவும் இருப்பார்கள். எதையுமே புள்ளி விவரத்தோடு சொல்லிப் புரிய வைப்பார்கள். குருவும் புதனும் சேர்ந்த அமைப்பு என்பது பொதுவாக தேடலையே குறிக்கும். இவ்விரு கிரகங்களும் தீராப்பகை கொண்டுள்ளவை என்று கூற முடியாது. நட்புக் கிரகங்கள் என்றும் சொல்ல முடியாது. ஒன்றையொன்று மிஞ்சி இயங்கி தமக்குள் போட்டியிடும் கிரகங்களாகும். 

சில இடங்களில் இவ்விரண்டும் நீசமும், பகையும் பெறும்போது எதிர்மறை பலன்களைப் பெறுகின்றன. அதுபோன்ற நேரங்களில் அப்படி நேரும் பட்சத்தில் அவற்றின் கடுமையை குறைத்து நற்பலன்களை பெற ஞானிகளின் ஜீவசமாதிகளுக்கோ அல்லது அவர்கள் அவதரித்த தலங்களுக்கோ செல்லும்போது எதிர்மறை பலன்கள் குறையும். அப்படிப்பட்ட ஒரு தலமே புவனகிரி ஆகும்.

இங்குதான் மகான் ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தார். இன்றும்  ராகவேந்திரரின் ஆலயத்தை இங்கு தரிசிக்கலாம். புவனகிரி எனும் இத்தலம் சிதம்பரத்திற்கு அருகேயே உள்ளது. இதுதவிர ஸ்ரீராகவேந்திரர் ஜீவசமாதியான மந்த்ராலயத்திற்குச் சென்று வாருங்கள். இத்தலம் ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மந்த்ராலயம் நகரம், கர்நாடக எல்லையில், துங்கபத்ரா நதிக்கரையோரம் அருள் பரப்பி அமைந்திருக்கிறது.

(கிரகங்கள் சுழலும்...)

ஓவியம்: மணியம் செல்வன்