மகர லக்னம் - சனி - சுக்கிரன் சேர்க்கை தரும் யோகங்கள்



கிரகங்கள் தரும் யோகங்கள் - 98

மனதின் ஆழத்தையும், அழுத்தத்தையும் குறிக்கும் சனியும், கலவர பூமிக்கு சென்றாலும் கனிவாகப்பேசும் சுக்கிரனும் இணைந்த கலவை இது. மனம் அந்தரத்தில் பறக்கும். எந்த அணியில் இருந்தாலும் அந்தக் குழுவிற்காக அதிகம் பாடுபடுவீர்கள். பல மடங்கு சக்தியிருந்தாலும் பயன்படுத்தத் தயங்குவார்கள். ஒருவரின் ஒட்டு மொத்த சூழ்நிலையையும் தெரிந்து வைத்துக் கொள்வார்கள்.

நிலை குலையாத நிறைகுடம் போல செல்வநிலை மாறினாலும் தன்னிலை பிறழ மாட்டார்கள். எப்போதும் கடைநிலை ஊழியருக்காக தோள் கொடுப்பார்கள். பலாப்பழம் போன்று பார்வைக்குக் கரடுமுரடாக இருந்தாலும், பழகிய பின்னர்தான் நீங்கள் தேன்சுளை என்பது தெரியவரும். இவர்களுக்குள் எப்போதுமே ஒரு ரகசிய உலகம் உண்டு. அருகிலிருப்போர்கூட அறியாதபடி பார்த்துக் கொள்வார்கள்.

மேலே சொன்னவை பொதுவான பலன்கள். இனி, ஒவ்வொரு ராசிகளிலும் சனியும், சுக்கிரனும் நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? மகர லக்னத்திலேயே-அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் ஜமீன்தார்போல வாழ வேண்டுமென ஆசைப்படுவார்கள். கூடவே தயாள குணமும் உண்டு. சருமத்தில் ஒவ்வாமை பிரச்னை இருந்து கொண்டேயிருக்கும்.

இவர்கள் பேச்சும் அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கும். சிறுவயதில் கூட அந்த வயதுக்குரிய சிறுபிள்ளைத்தனம் இருக்காது. அழகும் அறிவும் தீட்சண்யமாக இருக்கும். சிறிய விஷயங்களாக இருந்தாலும் ஆர்வம் செலுத்துவார்கள். மிக நேர்த்தி யாக உடைகளை அணிவார்கள். நல்ல நிர்வாகத் திறனுள்ளவர்களாக விளங்குவார்கள்.

பணம் இருக்கிறதோ இல்லையோ பெரிய பட்ஜெட்டாக போடுவார்கள். எப்போதும் மலர்ச்சி யாக தோற்றமளிக்க விரும்புவார்கள். இரண்டாம் இடமான கும்பத்தில் சனியும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் பழைய ஆவணங்கள் எதுவாக இருந்தாலும் பத்திரப்படுத்துவார்கள். ஆரம்பத்தில் திக்கிப் பேசிய பின்பு சரளமாகப் பேசுவார்கள்.

பக்கத்து வீட்டிலிருக்கும் மாணவ, மாணவியரோடு ஒப்பிட்டு பேசக்கூடாது. ஏதேனும் ஒரு சப்ஜெக்டில்தான் கவனம் செலுத்துவார்கள். சிலர் ஒரு வகுப்புக்கு ஒரு பள்ளி என மாறிக் கொண்டேயிருப்பார்கள். கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன், மரைன், ஆங்கில இலக்கியம், சட்டம், ஃபேஷன் டெக்னாலஜி என்று திட்டமிட்டு படித்தால் போதும்.

மூன்றாம் இடமான மீனத்தில் சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் ஆடை, ஆபரணச் சேர்க்கைகள், பாரம்பரியமான பொருட்களைச் சேர்த்து வைத்துக் கொள்ளுதல் என்று ஆர்வத்தோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் பெண்ணாக இருப்பின் பிரச்னைகள் இல்லாமல் இருக்கும். ஆணாக இருந்தால் ஏதேனும் தொந்தரவுகள் வந்தபடியே இருக்கும்.

இவர்களில் சிலர் ஆரம்ப காலத்தில் சம்பிரதாயத்தை பழிப்பவர்களாக இருந்தாலும், மத்திம வயதில் சமயச் சடங்குகளை நியாயப்படுத்தி பேசுவார்கள். நான்காம் இடமான மேஷ ராசியில் சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் அபார்ட்மென்ட்டில் வீடு வாங்கும்போது பொதுவான இடம் எவ்வளவு, வீட்டின் அளவு எவ்வளவு என்கிற விஷயத்தை சரியாகப் பார்த்து வாங்க வேண்டும்.

பத்திரப்பதிவுக்கு முன்பு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கிராமம் எனில் புறம்போக்கு... பட்டா... கிராமத்து நத்தம் என்பது போன்ற விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமாக சுக்கிரன் வருவதால் மனைவி வழியிலும் கூட சொத்துக்கள் சேரும். தாயாருடன் விவாதிக்காது, சொல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய மாட்டார்கள். புத்தகம் எழுதுவதில் மிகவும் ஆவலோடு ஈடுபடுவார்கள்.

ஐந்தாமிடமான ரிஷபத்தில் சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் அதிக செலவாளியாகவும், நண்பர்களால் பாதை மாறுபவர்களாகவும் இருப்பார்கள். சொந்த பந்தங்களுக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் ஏன் இப்படி இழிவாக நடந்து கொள்கிறார்கள் என்று நொந்து கொள்வார்கள். பூர்வீகச் சொத்தில் பாகப் பிரிவினைகளால் பிரச்னைகளும், பாரபட்சமும் இருக்கும்.

சிலருக்கு குழந்தை பாக்கியம் ஒரு கருச்சிதைவிற்குப் பிறகு கிடைக்கும். பூர்வீகச் சொத்துகளை விரிவுபடுத்துவார்கள். நல்ல ஆசிரியர்களை வழிகாட்டிகளாக வைத்துக்கொண்டு முன்னேறுவார்கள். நகரத்தில் வீடு வாங்க பூர்வீகத்தை விற்க நேர்ந்தாலும் மீண்டும் சொந்த ஊரிலேயே வாங்கிப்போட விரும்புவார்கள்.

ஆறாம் இடமான மிதுனத்தில் சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றால் இவர்களுக்கு எதிரிகளே இவர்கள்தான். ஏதாவது சொல்லி மாட்டிக் கொள்வார்கள். பொருளாதாரத்தில் ஏதேனும் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். பூர்வீகச் சொத்தை அதிகம் நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. அது சம்பந்தமான வழக்குகளுக்கும் போகக்கூடாது.

வழக்கறிஞராக பிரகாசிக்கும் வாய்ப்புகளும் நிறைய உண்டு. கண்களில் நீர் வடிதல், கண் கூச்சமும் இருந்துகொண்டேயிருக்கும். கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்னை வரும்போது மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். வீண்வம்பு, வறட்டு கௌரவம் போன்றவற்றையெல்லாம் விட்டுவிடுவது நல்லது. இவர்கள் கடன் வாங்குவது அவ்வளவு நல்லதல்ல.

ஏழாம் இடமான கடகத்தில் சனியும், சுக்கிரனும் இருந்தால் திருமணத்திற்குப் பிறகு நல்ல முன்னேற்றம் இருக்கும். அவ்வப்போது யார் புத்திசாலி, யார் மிகுந்த திறமைசாலி என்பதில் போட்டி அதிகமிருக்கும். சில காலம் வேலை நிமித்தமாக வாழ்க்கைத்துணையை விட்டு அன்னிய தேசத்தில் இருக்க வேண்டியிருக்கும். கூட்டுத் தொழிலில் ஈடுபடும்போது நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எப்போதுமே பெண்களிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே செயல்பட வேண்டும். எட்டாமிடமான சிம்மத்தில் சனியும், சுக்கிரனும் இணைந்திருந்தால் இவர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டக் குறைவானவர் என்று சொல்லிவிடலாம். இவர்கள் தலைமைப் பதவியில் அமர முடியாது. ஆனால், இன்னொருவரை அமர வைத்துவிட முடியும்.

திடீர் பயணங்கள் வந்து அதன் மூலம் எப்போதும் லாபமும் வரும். மனைவி வழி உறவுகளால் சிறுசிறு பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். எப்போதும் ஏதாவது புலம்பியபடி இருப்பார்கள். எத்தனை வசதி வந்தாலும் நிம்மதியே இல்லையே என்று சொல்லுவார்கள். வீட்டை இவர்கள் பெயரில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது.

அடிக்கடி விபத்துகள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒன்பதாம் இடமான கன்னியில் சனியும், சுக்கிரனும் சேர்க்கை பெற்றிருந்தால் இவர்களைப் பார்த்து தந்தையார் திருந்தும் அளவிற்கு வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். எல்லாவிதமான தர்ம நியாயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள். பால்ய நண்பர்கள், பழைய இன்பமான அனுபவங்களை எப்போதும் மறக்க மாட்டார்கள். இவர்களுக்கும் சேமிப்புகள் அதிகம் இருக்காது.

பத்தாம் இடமான துலா ராசியில் சனியும், சுக்கிரனும் சேர்வதால் சுக்கிரனால் கலைத்துறையோடு எப்போதும் நெருங்கியிருப்பார்கள். எப்படியேனும் கலைத்துறை அங்கீகாரத்தை பெற முயற்சிப்பார்கள். தோட்டக்கலை, சுரங்கத்துறை, மருந்துக் கம்பெனி, சுகாதாரத்துறை, சரும நோய் மருத்துவர், சினிமாவில் கேமராமேன், நடிகர் என்று பலதுறைகளில் கால் பதிப்பார்கள்.

கப்பல் படை அதிகாரி, நெடுஞ்சாலைத்துறை காவல் அதிகாரி, ஆங்கில ஆசிரியர், வக்கீல், குழந்தை நல மருத்துவர் என்று சில துறைகளில் வேலை பார்ப்பார்கள். கண்மூடித்தனமாக யாரையும் நம்பக் கூடாது என்பதை அலுவலகத்தில் தெரிந்து கொள்ள வேண்டும். பதினோராம் இடமான விருச்சிக ராசியில் சனியும், சுக்கிரனும் இணைவதால் மூத்த சகோதரர்களை விட சகோதரிகள் மிகுந்த அனுசரணையாக இருப்பார்கள். இந்த அமைப்பில் இருப்போர்கள் பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள்.

எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யக் கூடாது. கிடைக்கின்ற செல்வத்தை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சமூக எதிர் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. புத்தகக் கல்வியைவிட நடைமுறை வாழ்க்கைக் கல்வியையே மிகவும் விரும்புவார்கள்.

பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் சனியும், சுக்கிரனும் இணைவதால் ராகங்களை அலசுவார்கள். தூக்கமின்மையாலும், கனவுத் தொல்லையாலும் உடல்நிலையிலும் மனோநிலையிலும் சிறிய தொந்தரவுகள் வந்து விலகும். உடலை வருத்தி விரதமிருந்து பாதயாத்திரையையெல்லாம் மேற்கொள்வார்கள். தனியாக இருக்கும்வரையில் சரியாக இருப்பார்கள்.

கூட்டு சேர்ந்தால் அதிகமாக செலவும் ஊதாரித்தனமும் சேர்ந்து கொள்ளும். சிற்றின்பத்திற்கும் ஆன்மிகத்திற்குமிடையே போராடிக் கொண்டிருப்பார்கள். சனியும், சுக்கிரனும் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமான பலன்களையே தரும் என்பதில் ஆச்சரியமில்லை. பல சமயங்களில் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும். மேலும், கிரக யுத்தமோ, பகையோ, நீசமோ பெற்றிருந்தால் எதிர்மறை பலன்களுக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.

இம்மாதிரி சமயங்களில் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை பெருமாளை தரிசித்து வாருங்கள். இருந்தான் (நரசிம்மர்), கிடந்தான் (ரங்கநாதர்), நின்றான் (நீர்வண்ணர்), நடந்தான் (உலகளந்த பெருமாள்) என நான்கு நிலைகளிலும் பெருமாளை ஒரே இடத்தில் தரிசிக்கலாம். திருமங்கையாழ்வார் ஒவ்வொரு தலமாக மங்களாசாஸனம் செய்து கொண்டு வரும்போது காண்டவவனம் எனப்படும் தலம் அவரை ஈர்த்தது.

தேடி வந்த ஆழ்வாருக்கு பெருமாளை தரிசிக்க முடியவில்லை. காரணம், சுற்றிலும் நீர் சூழ நடுவில் குன்றத்தில் உறைந்திருந்தார் பெருமாள். ஆறு மாதங்களாக அவ்வண்ணமே தொலைவினின்று தரிசித்தார். நீருக்கு நடுவே மலையும், அதன் மீதமர்ந்து பெருமாள் சேவை சாதிப்பதால் திருநீர்மலை எனும் நாமம் இத்தலத்துக்கு ஏற்பட்டது.

வைகுண்டமான திருப்பாற்கடலின் மையத்தே பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் தோற்றத்தினுடைய பூலோக பிம்பமாக திருமங்கையாழ்வாருக்கு சேவை சாதித்தார். திருநீர்மலையின் பிரதான விஷயமே திருமாலின் நான்கு திரு அவதாரங்களும் மூலவராக அருளாட்சி செய்வதேயாகும். எழில் கொஞ்சும் அந்த காண்டவ வனம் எனும் திருநீர்மலையிலும், மலைக் கோயிலின் அடிவாரத்திலுள்ள தாழக் கோயிலிலும், திருமால் நான்கு அர்ச்சாவதார திவ்ய மூர்த்தங்களாக எழுந்தருளியிருக்கும் இத்தலம், சென்னை பல்லாவரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

(கிரகங்கள் சுழலும்)

ஓவியம்: மணியம் செல்வன்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்