5 ஆண்டுகளில் 41,600க்கும் மேற்பட்ட பெண்கள் மாயம்..?
ஸ்பெல்லிங் மிஸ்டேக் எதுவும் இல்லை. இந்தியாவையே இந்தத் தகவலும் புள்ளிவிவரமும் அதிர வைத்துள்ளது.2016ல் 7,105 பெண்களும்; 2017ல் 7,712 பெண்களும்; 2018ல் 9,246 பெண்களும்; 2019ல் 9,268 பெண்களும்; 2020ம் ஆண்டில், 8,290 பெண்களும் காணாமல் போயிருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் காணாமல்போன பெண்களின் மொத்த எண்ணிக்கை 41,621 என்றும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அதிகாரபூர்வ புள்ளிவிவர தரவுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும் குஜராத் என்ற ஒரேயொரு மாநிலத்தின் நிலை என்பது தேசத்தையே உறைய வைத்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களுக்காக அவர்களின் பெற்றோர், உறவினர்கள் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். எனவே, காணாமல் போனவர்களின் வழக்கை ஒரு கொலை வழக்கைப்போல கடுமையாக விசாரிக்க வேண்டும் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.
முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குநரான ராஜன் பிரியதர்ஷி, ‘‘சிறுமிகள் காணாமல்போனதற்கு மனித கடத்தல்தான் காரணம். எனது பதவிக் காலத்தில், காணாமல்போன பெண்களில் பெரும்பாலானோர் சட்டவிரோத மனிதக் கடத்தல் குழுக்களால் கடத்தப்பட்டு, வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களை நான் அறிவேன். கேடா மாவட்டத்தில் நான் காவல் கண்காணிப்பாளராக (SP) இருந்தபோது, அந்த மாவட்டத்தில் கூலி வேலை செய்துகொண்டிருந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு ஏழைப் பெண்ணைத் தூக்கிச் சென்று, தனது சொந்த மாநிலத்தில் விவசாயக் கூலி வேலைக்காக விற்றுவிட்டார்.
இதுபோன்ற சமயங்களில் பாதிக்கப்பட்ட பெண்களை மீட்பது சற்று எளிது. ஆனால், பல சந்தர்ப்பங்களில் இப்படி மீட்க முடியாது...’’ என செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். பிரதமர் உடனடியாக தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே குஜராத் மாநில மக்களின் வேண்டுகோள்.
என்.ஆனந்தி
|