மணிப்பூர் ஏன் எரிகிறது?



நான்கு பக்கம் மலை. நடுவே ஒரு தட்டு போல் ஒரு பள்ளத்தாக்கு. இந்திய வரைபடத்தில் வடகிழக்கு ஓரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கும் மாநிலம்.  இதுதான் மணிப்பூர்.சின்ன மாநிலம். மொத்த மக்கள் தொகையே 28 லட்சம்தான். இந்த அழகிய சிறு மாநிலம் இன்று எரிந்துகொண்டிருக்கிறது.
காரணம் சாதியும் அரசியல்வாதிகளும்.இந்திய மாநிலங்கள் அனைத்திலும் இதுதானே நிலை என்று தோன்றலாம். ஆனால், இது வித்தியாசமானது. ஆம். மணிப்பூர் ஒரு வித்தியாசமான சமூகப் பரவலைக் கொண்டுள்ள மாநிலம்.
இங்கு மெய்தே சமூகத்தினர்தான் சதவீத அடிப்படையில் அதிகம். அதாவது சுமாராக 53 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்து நாகா சமூகத்தைச் சார்ந்தவர்கள், குகி, சோமி போன்ற பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆம். மணிப்பூரில் மொத்தமாக 35 பழங்குடி சமூகங்கள் இருக்கின்றன. புவியியல் அமைப்பும் இதற்கு துணைபோகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் மலைகளுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கை கொண்ட அமைப்பாக மணிப்பூர் இருக்கிறது. இதில் 90 சதவீதம் மலைப்பகுதிகள், 10 சதவீதம் பள்ளத்தாக்குப் பகுதிகள்.எனவேதான் மற்ற மாநிலங்களை விட இந்த மாநிலத்தில் அதிகளவில் பழங்குடி சமூகங்கள் வசிக்கின்றன.

பிறகு, மணிப்பூர் வித்தியாசமான மாநிலம் என்று குறிப்பிட்டோம் அல்லவா..? அந்த வித்தியாசம் மலைப்பகுதிகளும் பள்ளத்தாக்குகளும்தான்.

யெஸ். 53 சதவீதத்தைச் சார்ந்த மெய்தே மக்கள் வசிப்பது வெறும் 10 சதவீத பள்ளத்தாக்குப் பகுதிகளில்தான். மீதமிருக்கும் 90 சதவீத மலைக்காடுகளில் வசிப்பவர்கள் 47 சதவீத பழங்குடி மக்கள்.

மணிப்பூரில் மொத்தம் 16 மாவட்டங்கள் இருக்கின்றன. இதில் 5 மாவட்டங்கள் பள்ளத்தாக்கில் இருக்கின்றன. மீதமுள்ள 11 மாவட்டங்கள் மலைப்பகுதிகளில் இருக்கின்றன.மணிப்பூரில் பழங்குடி பாதுகாப்பு சட்டம் இருப்பதால் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மெய்தே சமூகத்து மக்கள் மலைப்பகுதிகளில் நிலம் வாங்க முடியாது. அதற்கு அவர்கள் உள்ளூர் மக்கள் அனுமதி பெற வேண்டும்.

அது மட்டுமின்றி பெரும்பான்மையாக இருக்கும் மெய்தே மக்கள் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வருகிறார்கள். பழங்குடி மக்கள் எஸ்டி பிரிவில் வருகிறார்கள்.அதுபோலவே பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தே சமூக மக்கள் இந்துக்கள். ஆனால், மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினரில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள்.இப்பொழுது ஒரு புரிதல் கிடைத்திருக்குமே... சின்ன ஊர். சின்ன மக்கள் தொகை. ஆனால், ஏகப்பட்ட வித்தியாசங்கள்.இந்தச் சூழல்தான் இன்று மணிப்பூர் பற்றி எரியக் காரணம்.

பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தே சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை தங்களை பழங்குடியினரின் பட்டியலினத்தில் சேர்க்க வேண்டுமென்பது.ஆனால், அவர்களை பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்பது மலைவாழ் பழங்குடி சமூகத்தினரின் கோரிக்கை.இந்த பெரும்பான்மையான பழங்குடி மக்களின் கோரிக்கை மறுக்கப்பட்டு, மெய்தே சமூகத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவர்களைப் பழங்குடியினப் பட்டியலில் சேர்க்கலாம் என்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதனைத் தொடர்ந்துதான் இந்தக் கலவரங்கள், பதற்றங்கள்.

‘பள்ளத்தாக்கு மக்களுக்கு பழங்குடியின அடையாளத்தை தந்தால் நாங்கள் வாழும் மலைப் பிரதேசங்களை ஆக்கிரமித்து எங்கள் இடங்களை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்’ என்பது மலைவாழ் பழங்குடியினரின் அச்சம். அதுதான் போராட்டங்களாக வெடித்திருக்கிறது.‘நாங்களும் பழங்குடியினர்தான்... எனவே எங்களையும் இந்தப் பட்டியலில் இணைத்தது சரியே...’ என்பது பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தே சமூக மக்களின் கருத்து.அதற்காக நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் இந்தக் கலவரங்கள் வெடித்திருப்பதாக நினைக்க வேண்டாம்.

பல ஆண்டுகளாகவே பழங்குடி மக்களுக்கும் பள்ளத்தாக்கு மக்களுக்கும் மோதல்கள் இருந்து கொண்டேதான் இருந்தன. இப்பொழுது அது உச்சநிலையை எட்டியிருக்கிறது. தவிர அரசு எடுத்த சில நடவடிக்கைகளும் பழங்குடி மக்களின் கோபத்தைக் கிளறியிருந்தது.உதாரணமாக, மலைப்பிரதேசங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பல கட்டடங்கள் அகற்றப்பட்டன. அவற்றில் கிறிஸ்துவ தேவாலயங்களும் அடக்கம். இந்த சம்பவங்கள் மணிப்பூர் மாநில முதலமைச்சரான பிரேன் சிங் தலைமையிலான அரசின் மீது பழங்குடி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. காரணம், முதல்வர் பிரேன் சிங் மெய்தே சமூகத்தைச் சார்ந்தவர்!

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கலவரத்தின் அடிப்படையில் அரசியலும் இருக்கிறது என்கிறார்கள். இந்தப் பிரச்னைகள் புதியதாக வெடித்தவை அல்ல; காலம் காலமாக இருந்து வருகின்றன. இந்தப் பிரிவுகளையும் பிளவுகளையும் அரசியல் கட்சிகள் அவ்வப்போது தங்கள் ஆதாயத்துக்கு பயன்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார்கள்.2017ல் மணிப்பூர் மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 21 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்த இடங்கள் 60. சிறு கட்சிகளையும் சுயேச்சைகளையும் இணைத்துக்கொண்டு பாஜக ஆட்சி அமைத்தது. காங்கிரசிலிருந்து வந்த பிரேன் சிங்கை முதல்வராக்கியது பாஜக.

2022ல் தேர்தல் வந்தது. இந்த முறை 32 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது பாஜக.ஒவ்வொரு முறையும் போராடித்தான் வெல்ல முடிகிறது. 53 சதவீதம் இருக்கும் மெய்தே சமூகத்து மக்களின் முழுமையான ஆதரவு கிடைத்தால் நம்மால் எளிதில் வெல்ல முடியும் என்று பாஜக கணக்குப் போடுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பாஜகவின் அரசியல் எப்போதுமே பெரும்பான்மை சமூகத்தினரைச் சார்ந்துதான் இருக்கும். அதனால் மெய்தே சமூகத்து மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முயலுகிறது என்று பாஜக மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அது மட்டுமில்லாமல் 53 சதவீத மெய்தே சமூகத்து மக்கள் இந்துக்களாக இருப்பதால் பாஜகவின் பக்கம் முழுமையாக வருவதற்கு வாய்ப்பிருப்பதாக அக்கட்சி நினைக்கிறது. ஒரு சிறிய மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. யார் அணைக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.

ஜான்சி