தண்ணீரில் யோகா... கயிறு கட்டி யோகா!
யோகாசனத்துக்கு அறிமுகம் தேவையில்லை. பழமையானது. மனதுக்கு நிம்மதியளிப்பது. உடலுக்கும் உள்ளத்துக்கும் பலத்தை அளிப்பது.இப்படிப்பட்ட யோகாசனத்தை பொதுவாக தரையில் அமர்ந்தபடி செய்வதே வழக்கம். ஆனால், அதனை தண்ணீரில், கயிறுகட்டி அல்லது தொட்டில் போன்ற அமைப்பிலும் செய்ய முடியும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த யோகாசன பயிற்சியாளர் கற்பகவள்ளி. ‘‘நான் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தேன். என் கணவர் யோகாசன பயிற்சியாளர். ஐடி வேலையில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும் என்பதால் முதுகு வலியால் அவதிப்பட்டேன். அதற்கு யோகா நல்ல தீர்வு கொடுக்கும் என்று என் கணவர் சொல்லித்தான் நான் பயிற்சி எடுத்தேன்.  அதன் பிறகு என் கணவர் என்னை யோகாசனத்தில் தனிப்பட்ட பயிற்சி எடுக்கச் சொன்னார். அவரது ஆலோசனைப்படி யோகாசனத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் நேச்சுரோபதியில் முடித்தேன்.2011ல் இருந்து நான் பயிற்சி அளிக்கத் துவங்கினேன். அதே வருடம் நானும் என் கணவரும் சேர்ந்து ‘குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா’ என்ற பெயரில் சென்னை அண்ணா நகர் மற்றும் கொரட்டூரில் யோகாசனப் பயிற்சி மையத்தினை துவங்கினோம்.
நானும் என் கணவரும் முழு நேரம் இதில் கவனம் செலுத்தி வருகிறோம்...’’ என்று சொல்லும் கற்பகவள்ளி, மக்கள் யோகாவில் வித்தியாசமான பயிற்சிகளை விரும்புவதாகத்தெரிவித்தார்.
‘‘பொதுவாக யோகாசனங்களை தரையில் படுத்தும், உட்கார்ந்தும் செய்வது வழக்கம். ஆனால், என்னிடம் பயிற்சிக்கு வருபவர்கள் இதில் வேறு புதுமைகளை புகுத்த முடியுமா என்று கேட்ட போது அதில் வேறு என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யத் தொடங்கினேன். அது சார்ந்த ஒர்க் ஷாப்பில் பங்கு பெற்று பயிற்சி எடுத்தேன். சிலவற்றை ஆன்லைன் மூலமாகவும் கற்றுக்கொண்டேன்.
அப்படித்தான் அக்வா யோகா’ பற்றி தெரிய வந்தது. நீச்சல் குளத்தில் செய்யக் கூடிய இந்த யோகாசனப் பயிற்சியில் என்ன வித்தியாசம் உள்ளது என்று தெரிந்துகொள்ள அதற்கான பயிற்சியில் ஈடுபட்டேன்.சில அடுக்குமாடி குடியிருப்பு களில் நீச்சல் குளம் இருக்கும். அங்கு அனுமதி பெற்று பயிற்சி அளித்தோம். ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்திலும் பயிற்சி கொடுத்தோம். இரண்டு மணி நேரப் பயிற்சியினை நான்கு வருடங்களாக குறிப்பாக வெயில் காலத்தில் மட்டுமே அளித்து வருகிறோம்.
அக்வா யோகா மட்டுமில்லாமல் மேலும் பலவிதமான யோகாசனங்கள் உள்ளன. ஹத யோகா அதில் ஒன்று. ஏற்கனவே யோகா பயிற்சி மேற்கொண்டவர்கள் மேலும் மேம்பட இதனைச் செய்யலாம். அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரீநேட்டல் யோகா. ஐந்து மாதம் முதல் பிரசவ காலம் வரை மேற்கொள்ளலாம். தூக்கமின்மையால் தவிப்பவர்கள் மற்றும் PCOD பிரச்னை உள்ளவர்களுக்கு யோகா உகந்தது.
இதேபோல் ஏரியல் யோகா, ரோப் யோகா என யோகாசனத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் தேவைக்கும் உடல்வாகுக்கும் ஏற்ப ஆசனங்களைத் தேர்வு செய்து பயிற்சி பெறலாம்...’’ என்றவர், அக்வா யோகாவின் சிறப்பம்சத்தை விவரித்தார்.‘‘உடல் பருமனாக உள்ளவர்கள் தரையில் யோகாசனம் செய்யும்போது பலவிதமான அசௌகரியங்களை உணர்வார்கள். ஆனால், அவர்கள் அதே ஆசனங்களை தண்ணீரில் செய்யும் போது உடலே லேசானதுபோல் உணர்வார்கள்.
காரணம், தண்ணீருக்குள் புவியீர்ப்பு விசை இருக்காது. இதனால் தங்கள் உடல் எடையை லேசாக உணர்வார்கள். மட்டுமல்ல; இவர்களால் ஆசனங்களை தண்ணீருக்குள் எளிதாகச் செய்ய முடியும். உடலும் எளிதாக வளைந்து கொடுக்கும். ரிலாக்சாக ஃபீல் செய்ய வைக்கும். அக்வா யோகாவை நீச்சல் குளத்தில்தான் செய்ய முடியும். அதுவும் தண்ணீர் தோள்பட்டை அளவுதான் இருக்க வேண்டும். அதற்கேற்ற நீச்சல் குளத்தினைத்தான் நாங்கள் தேர்வு செய்வோம்.
தண்ணீருக்குள் ஒருவரும், தண்ணீருக்கு வெளியே ஒருவரும் என இரு பயிற்சியாளர்கள் இருப்போம். வெளியே இருப்பவர் செய்யும் பயிற்சிகளைப் பார்த்துச் செய்ய வேண்டும். தண்ணீருக்குள் இருக்கும் பயிற்சியாளர் ஆசனங்கள் செய்ய மாட்டார். சிலர் தண்ணீருக்குள் ஆசனங்களை செய்யும் போது நிலை தடுமாறி விழ வாய்ப்புள்ளது. அவர்களைப் பாதுகாப்பதுதான் இவரது வேலை.
முக்கியமான விஷயம்-அக்வா யோகா செய்ய நீச்சல் பயிற்சி தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. முதலில் பயிற்சி எடுக்க வருபவர்களுக்கு தண்ணீரைப் பழக்கப்படுத்துவோம். அவர்களை நீச்சல் குளத்தில் மெதுவாக நடக்க பழக்குவோம்.
அடுத்து கண்களை மூடிக்கொண்டு நடக்க வேண்டும். அதன் பிறகுதான் பயிற்சியே துவங்கும். இந்த யோகாசனத்தை பெரியவர்கள் மட்டுமில்லை, குழந்தைகளும் செய்யலாம். குறிப்பாக உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்கு இந்த யோகா நல்ல பலன் கொடுக்கும். மேலும் தரையில் செய்வதை விட தண்ணீருக்குள் செய்யும் போது அவர்களின் உடல் நிலையில் மாற்றம் ஐந்து மடங்கு அதிகரிக்கும்.
கவனச் சிதறல்கள் குறையும். ஏனெனில் முழு கவனம் செலுத்தாமல் தண்ணீருக்குள் யோகாசனம் செய்ய முடியாது. அழுத்திச் சொல்ல வேண்டுமென்றால் அக்வா யோகா செய்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் எடை குறையும். உடல் லேசாக இருப்பதாக உணர்வார்கள். ஸ்ட்ரெஸ் நீங்கும். ஆனா ல், ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சருமப் பிரச்னை உள்ளவர்களும் இதனைச் செய்யக் கூடாது. மேலும் மாதவிடாய் நேரத்திலும் இதனை மேற்கொள்ளக் கூடாது. இந்தப் பயிற்சியினை மாதம் ஒருமுறை இரண்டு மணி நேரம் செய்யலாம். பெரும்பாலும் இளம் வயதினர்தான் இதனை அதிகமாக விரும்புகின்றனர்...’’ என்ற கற்பகவள்ளி, யோகாசனத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பகிர்ந்தார்.
‘‘யோகாசனம் செய்பவர்களின் உடலும் மூளையும் ஒரே அலைவரிசையில் இயங்கும். அதாவது உடலுக்கும் மூளைக்கும் நல்ல தொடர்பிருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலரும் மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். சோஷியல் மீடியாவின் ஆதிக்கத்தால் தூக்கமின்மையால் பாதிக்கப்படுகிறார்கள். இவை அனைத்தும் நம் உடல் நலனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கின்றன.
எனவே, தினமும் ஒரு மணி நேரம் யோகாசனம் மேற்கொண்டால் இவை அனைத்தும் நீங்கி உடல் ஆரோக்கியமாக இருப்பதை உணர முடியும். உடல் சோர்வு நீங்கும். நல்ல தூக்கம் வரும், சுவாசப் பிரச்னை சீராகும். மனம் அமைதியாகும். உள் உறுப்புகள் சுத்தமாகும். நோய் பாதிப்பு வராமல் பாதுகாக்கும்.
அப்படியே வந்தாலும் அதை கட்டுப்பாட்டில் வைக்கும். அவ்வளவு ஏன்... சில நோய்கள் குணமாகவும் வாய்ப்புள்ளது.எங்களின் மையத்தில் நேரடியாகப் பயிற்சி பெறலாம். வரமுடியாதவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும் பயிற்சி அளிக்கிறோம். சிலர் பயிற்சி மேற்கொண்டு அவர்களே அதனை வீட்டில் தொடர்வார்கள். சிலர் தனிப்பட்ட பயிற்சியினை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களின் வீட்டிற்குச் சென்றும் பயிற்சியளிக்கிறோம். பொதுவாக எந்தவகையான யோகாசனங்களையும் விடியற்காலை செய்வது சிறந்தது. முடியாதவர்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் படுக்கும் முன் செய்யலாம். தினமும் யோகாசனம் செய்து வந்தால் என்றும் மார்க்கண்டேயனாக இருக்கலாம் என்பது மட்டும் உறுதி...’’ அழுத்தமாகச் சொல்கிறார் கற்பகவள்ளி.
ப்ரியா
|