வாராரு வாராரு கருப்பரு வாராரு!
5. சிவபெருமானும் கருப்பண்ணசாமியும்!
தட்சனின் யாகம் குறித்த அறிமுகம் தேவையில்லை. இன்றும் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் உள்ள கோயில்களில் எல்லாம் இக்கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டவர்தான் வீரபத்திரர்.கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம். ஏனெனில் வீரபத்திரரின் தோற்றம் குறித்த செய்திகளும் விவரங்களும் எண்ணற்ற பிரதிகளில் காணப்படுகின்றன.
 தட்சன் ‘பிரகஸ்பதி சவனம்’ என்ற யாகத்தைத் தொடங்கினார். இந்த யாகத்துக்கு தன் மகளான பார்வதி தேவியையும், தன் மாப்பிள்ளையான சிவனையும் தட்சன் அழைக்கவில்லை. இவ்விருவரையும் அழைக்காததற்கு புராணங்களில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன.அத்ரியின் மகன் துர்வாசர் ஜம்பு நாட்டிற்குச் சென்று ஜகதாம்பிகையை வேண்டினார். ஜகதாம்பிகைக்காக மாயாபீஜ மந்திரத்தை தியானம் செய்தார். துர்வாசரின் தியானத்தில் மகிழ்ந்த ஜகதாம்பிகை அவருக்கு, தான் சூடிய மலர் மாலையை பரிசாக அளித்தாள்.
துர்வாசர் அம்மலர் மாலையைத் தலையில் சூடி தட்சனின் அவைக்குச் சென்றார். துர்வாசரின் தலையிலிருந்த மலர்களைக் கண்ட தட்சன் அதன்மேல் ஆசை கொண்டார். தட்சனின் எண்ணத்தை அறிந்த துர்வாசர் அம்மலர்களை தட்சனிடம் கொடுத்தார். அவன் அந்த மலர்களை தன் அந்தப்புரத்தில் வைத்து மனைவியுடன் கூடியதால் அப்பூக்கள் நறுமணத்தை இழந்தன. ஜகதாம்பிகையின் மலர்களைத் தீட்டாக்கிய தட்சனிடம் அவரது மகள் பார்வதியும், சிவனும் கோபம் கொண்டனர்.
இதனை மனதில் வைத்து தட்சன் இருவரையும், தான் தொடங்கிய யாகத்துக்கு அழைக்காமல் விட்டதாக தேவி பாகவதத்தின் ஏழாவது ஸ்கந்தம் குறிப்பிடுகிறது.பிரபஞ்சம் தோன்றாமல் இருந்த போது பூமி கடலின் உள் இருந்தது. சூரியன், சந்திரன், காற்று, நெருப்பு... என யாவும் இல்லாமல் இருந்தன. மனிதர்கள் உருவாகவில்லை.
அப்போது விஷ்ணு உலகத்தைப் படைக்க விரும்பினார். உலகத்தைப் படைக்க தன் முகத்திலிருந்து படைப்புக் கடவுளான பிரம்மாவை உருவாக்கினார். ஐந்து தலைகள் கொண்ட பிரம்மாவுடன் மூன்று கண்களுடன், சடை முடி கொண்டு சிவன் தோன்றினார். சிவனும், பிரம்மாவும் ஒரே நேரத்தில் தோன்றிய தால் இருவருக்குள் யார் பெரியவன் என்ற போட்டி ஏற்பட்டது. போட்டி வளரந்து இருவருக்கும் சண்டை மூண்டது. சிவன் தன் கையிலிருந்த மழுவை எடுத்து பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கொய்தார். பிரம்மன் தலை சாபத்தை உச்சரித்துக் கொண்டே சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் உண்டானது. பிரம்மனின் தலையை சிவன் கொய்ததால், சிவனைத் தீட்டானவர் என தட்சன் எண்ணினார். அதனால், தான் நடத்தும் யாகத்துக்கு தன் மகள் பார்வதியையும், சிவனையும் தவிர்க்க விரும்பினார் என வாமன புராணம் குறிப்பிடுகிறது.
பிரஜாதிபதிகள் யாகம் செய்த போது சிவன், விஷ்ணு, பிரம்மா பங்கேற்றனர். அதில் தட்சனின் வருகையின்போது சிவன் எழுந்து வணக்கம் செய்யாமல் அமர்ந்திருந்தார். இதனால் கோபம் கொண்ட தட்சன், சிவனை அவமதிக்க விரும்பினார். தேவர்கள் அனைவரையும் அழைத்து யாகத்தை நிகழ்த்தினார். யாகத்திற்கு தன் மகள் பார்வதியையும், சிவனையும் அழைக்கவில்லை என்பதால் கோபம் கொண்ட சிவன் யாகத்திற்குச் செல்லாமல் தவிர்த்தார்.
சிவனின் சொல் மீறி தன் தந்தை தட்சனின் யாகத்திற்கு பார்வதிதேவி சென்றாள். அங்கு தன் மகள் பார்வதியை தட்சன் வரவேற்கவில்லை. தந்தையின் செயலால் வருத்தமுற்ற பார்வதி, யாகத் தீயில் பாய்ந்து உயிர் துறந்தாள். பார்வதி இறப்பை அறிந்த சிவன் கோபமும், வருத்தமும் கொண்டார். தன் சடைமுடியில் ஒன்றை எடுத்து தரையில் வீசினார். அதிலிருந்து வீரபத்திரரும், பத்ரகாளியும் தோன்றினர். இருவரும் தட்சனின் யாகத்திற்குச் சென்று அவனது தலையைக் கொய்து திரும்பினர்.
தட்சனின் இறப்பால் உலகம் ஸ்தம்பித்தது. தேவர்கள் சென்று சிவனிடம் வேண்டினர். சிவன் வீரபத்திரரைத் திருப்பியழைத்தார். தட்சனுக்கு உயிர் கொடுத்தார். ஆனால், கோபத்தில் வெட்டப்பட்ட தட்சனின் தலை மீண்டும் கிடைக்கவில்லை.
இதனை அறிந்த பிரம்மா ஆட்டின் தலையை எடுத்து தட்சனின் உடலில் பொருத்தினார்.தட்சனை அழித்த பின் புவியிலுள்ள எல்லா உயிர்களையும் வீரபத்திரர் அச்சுறுத்தினார். இதனை அறிந்த சிவன், வீரபத்திரரிடம் சென்று அவர் கோபம் தணியச் செய்தார். ‘நீ சென்று வானில் அங்கரஷக அல்லது மங்கல கோளாக அமைவாய். பூமியிலுள்ள அனைவரும் உன்னை வேண்டுவர்’ என்றார்.
சிவன் சொல் கேட்டு வீரபத்திரர் வானில் கோளாக அமைந்ததாக பாகவதத்தின் ஏழாவது சர்கத்தில், வாயு புராணத்தில் (101, 209), பத்ம புராணத்தின் சிருஷ்டி காண்டம் 24ல் குறிப்பிடப்பட்டுள்ளன.
போலவே வீரபத்திரர் தட்சனை அழித்ததும், அவரிடமிருந்து வெளியேறிய ஒளியிலிருந்து ஆதி சங்கரர் (சங்கராச்சாரியார்) தோன்றியதாக பவிஷ்ய புராணம், பிரதிஸ்கார பருவத்தில் குறிப்பு உள்ளது.சிவன் திரிபுராந்தகராக போர் செய்தபோதும், ஜலந்திரனை வென்றபோதும் சிவனின் படையில் வீரபத்திரர் தளபதியாக இருந்ததாக பத்ம புராணத்தின் பாதாள காண்டத்திலும், உத்திர காண்டத்திலும் பதிவுகள் உள்ளன. வீரபத்திரர் சிவனின் மெய்க் காவலன் என்ற பொறுப்புடன், தேவர்களை அசுரர்களிடமிருந்து காக்கும் பணியையும் செய்தார்.காசியப முனிவரும் மற்ற யோகிகளும் சௌகத மலையில் தவம் செய்த போது மலையில் தீ பற்றிக் கொண்டது. தீயில் தேவர்களும், முனிவர்களும் எரிவதைக் கண்ட வீரபத்திரர் காட்டுத் தீயை தன் வாயில் உட்கொண்டார். இறந்த முனிவர்களையும் உயிர் பெறச் செய்தார். நாகம் ஒன்று தேவர்களை விழுங்கிய போது வீரபத்திரர் அந்த நாகத்தைக் கொன்று தேவர்களைக் காத்தார்.
பஞ்சமேத்திரன் என்ற அசுரன் தேவர்களை தன் வாயில் இட்டு விழுங்கியபோது வீரபத்திரர் பஞ்சமேத்திரனுடன் போர் செய்தார். போர் ஓர் ஆண்டுகாலம் நீண்டது. போரின் இறுதியில் வீரபத்திரர் பஞ்சமேத்திரனைக் கொன்று தேவர்கள் அனைவரையும் உயிர் பெறச் செய்தார்.
தேவர்களை வீரபத்திரர் காத்தது அறிந்த சிவன் வீரபத்திரருக்கு பல வரங்கள் வழங்கினார் என பத்ம புராணம் பாதாள காண்டத்தில் குறிப்பு உள்ளது.வீரபத்திரர் சிவ கணங்களுள் ஒருவர் என்ற குறிப்பு கந்த புராணத்தின் நான்காவது பகுதியில் உள்ளது. யோகினிகள், சூரியன், பிரம்மா ஆகியோரின் செயல்களைப் பற்றி அறிய சிவன் தன் கணங்களுக்கு காசி நகர் நோக்கிச் செல்லும்படி ஆணையிட்டார்.
வீரபத்திரர் உட்பட கணங்கள் காசியில் தங்கி அங்குள்ளவற்றை கவனித்தனர். காசி மன்னனாகிய திவோதாசனையும் அறிந்து கொள்ள அங்கே வாழ்ந்தனர் என கந்த புராணத்தில் வீரபத்திரர் பற்றிய கதை வருகிறது.சாக்த மரபில் வீரபத்திரர் சிவனின் எட்டு மெய்க்காவலர்களுள் ஒருவர்.
‘மந்தன பைரவ தந்திரம்’ நூலில் காமகயாவின் (பைரவரின் கிழக்கு முகம்) எட்டு காவலர்களுள் வீரபத்திரர் ஒருவர் என்ற குறிப்பு உள்ளது. சிவனுக்கு சங்கபாலன், காங்கலன், விசாலகன், அஜயன், விஜயன், வீரபத்திரன், ரக்தக்ஷன், கஷ்மலன் என எட்டு மெய்க் காப்பாளர்கள் என நூல் குறிப்பிடுகிறது. நதபித்தையின் எட்டு யோகிகளுள் வீரபத்திரரும் ஒருவர் என்ற குறிப்பும் மந்தன பைரவ தந்திரத்தில் வருகிறது.
வீரபத்திரர், காளி, கபாலி, விகிர்தை, க்ரோஷ்டாங்கி, வாமபத்ரர், வாயுவேகை, ஹயானன் ஆகியோரே எட்டு யோகிகளாவர்.வீரபத்திரர், ‘விமலாகம’த்தை சர்வாத்மகரிடமிருந்து பெற்றதாக ‘பிரதிசம்கித நூல்’ குறிப்பிடுகிறது.
‘விமலாகமம்’ பதினெட்டு ருத்ரபீட ஆகமங்களுள் ஒன்று. சிவ ஆகமங்களில் உள்ள இருபத்தியெட்டு சித்தாகமங்களிலும் ஒன்றாக ‘விமலாகமம்’ உள்ளது.விமலாகமத்தை சர்வாத்மகரிடமிருந்து வீரபத்திரர் பெற்றார். சர்வாத்மகர், சதாசிவனிடமிருந்து பரசம்பந்தர் மூலம் பெற்றார். ‘வீரபத்திரர் திவ்ய சம்பந்தம்’ என்ற பெயரில் தேவர்களுக்கு அதனைப் போதித்தார். திவ்ய சம்பந்தம் மூலம் தேவர்கள் ரிஷிகளுக்கு கடத்தினர். அதிவ்ய சம்பந்தம் மூலம் ரிஷிகள் மனிதர்களுக்கு விமலாகமத்தை போதித்தனர் என நூல் கூறுகிறது.சமணத்தில் தாமரலிப்தியிலுள்ள ரிஷபதத்தரின் மகனாக வீரபத்திரர் வருகிறார். பொது யுகம் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹேமசந்திரரின் ‘திரிசஷ்டிசலாகபுருஷ சரித்திரத்’தில் ரிஷபதத்தரின் மகன் வீரபத்திரர் பற்றிய குறிப்பு உள்ளது.
‘தத்வ நீதி’ நூலில் வீரபத்திரரின் சிற்ப அமைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன், மூன்று கண்ணும் அகோர முகமும் உடையவர். இடது கைகளில் வில்லும், கதையும் தாங்கி நிற்பார். வலது கைகளில் கட்கமும் (வாள்), அம்பும் கொண்டிருப்பார். மண்டை ஓட்டு மாலையை கழுத்தில் அணிந்திருப்பார்.
பாதுணிகள் அணிந்திருப்பார். வீரபத்திரரின் அருகே பத்ரகாளியின் சிற்பமும் இடம்பெற்றிருக்கும். வீரபத்திரருக்கு இடது பக்கம் தட்சனும் (ஆட்டுத் தலை, இரண்டு கண், இரண்டு கொம்பு கொண்டு, கைகளை அஞ்சலி முத்திரையில்) இடம்பெற்றிருப்பார். அதேபோல் ‘காரணாகமம்’, அக்னி வீரபத்திரரின் அமைப்பைப் பற்றிக் கூறுகிறது. தலையில் ஜடைமுடி விரித்து காணப்படும். ஜடை தந்தங்கள் போல் மேலெழுந்து நெருப்பை வெளியேற்றும். கழுத்தில் மணிகள், மண்டை ஓடுகள், தேள், பாம்பு ஆகியவற்றைக் கொண்ட மாலை அணிந்திருப்பார். கையில் அழகிய வளையமும், காலில் பாதுணியும் கொண்டிருப்பார். அக்னி வீரபத்திரரின் நிறம் சிவப்பு. நான்கு கரங்களில் கட்கம் (வாள்), கேடயம், வில், அம்பு தாங்கியிருப்பார்.
தமிழகத்தில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களின் முக மண்டபத்தில் பத்து கரங்களுடன் வீரபத்திரர் காணப்படுகிறார். வலது கைகளில் முறையே பானம், கட்கம், பரசம், பாதி உடைந்த பெரிய வாள் (தட்சனின் கழுத்தை வெட்டும் வாள்), அம்பறாத்துணியிலிருந்து அம்பை எடுக்கும் கரம் என ஐந்து ஆயுதங்களும்; இடது கைகளில் முறையே வில், மான், பாசம், வட்ட கேடயம், நீள் சதுர கேடயமும் கொண்டிருப்பார். இவ்வளவு விரிவாக, கதையாக அல்லாமல் தகவல்களாக வீரபத்திரர் குறித்து இங்கு சொன்னதற்கு காரணமிருக்கிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் கம்பீரமாக வீற்றிருக்கும் இந்த வீரபத்திரருக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் சண்டிகாதேவி.இவர்களுக்கு - அதாவது வீரபத்திரருக்கும் சண்டிகாதேவிக்கும் - பிறந்தவர்தான் நம் கருப்பண்ணசாமி என்கிறார்கள்.
சிவபெருமானின் நெற்றிக் கண் அல்லது சடாமுடியிலிருந்து தோன்றியவர் வீரபத்திரர் என்றால்... சிவனின் மகனாகிறார் வீரபத்திரர்.அந்த வகையில் பார்த்தால் சிவபெருமானின் பேரன்தான் கருப்பண்ணசாமி என்றாகிறது.எனவேதான் கருப்பண்ணசாமியின் கோயில்களில் வீரபத்திரருக்கும் சிவனுக்கும் சிலைகள் உள்ளன என பயபக்தியுடன் குறிப்பிடுகிறார்கள்.இருக்கட்டும். நம் கருப்பர் இப்படித்தான் தோன்றினாரா?
(கருப்பர் வருவார்)
- கே.என்.சிவராமன்
|