ஊவா முள்






வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும், பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உள் அறையிலிருந்த அம்மா, என் மனைவியைக் கடிந்து கொண்டாள்.

‘‘நீ என்ன அந்த நாசமாப் போறவளை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சி, காபி குடுத்து சீராட்டிக்கிட்டு இருக்க? வாசல்லயே நிக்க வெச்சு பேசி அனுப்பியிருக்கலாமில்ல? ஒடம்புல எவ்ளோ தைரியமிருந்தா திரும்பியும் இந்த வீட்டுப் படியேறி வருவா? ஒரு தடவ வீட்டுக்குள்ள வந்ததுக்கே என் மகனை உண்டு இல்லன்னு ஆக்கிட்டா... இப்போ எதுக்கு வந்திருக்காளோ?’’

அம்மா பேசியது கண்டிப்பாக அவர்கள் காதிலும் விழுந்திருக்கும். ஆனால், விழாதது போல சமாளித்துக் கொண்டார்கள். அவன் - அதுதான் அந்த பாலு - ‘எல்லாவற்றையும் உனக்காகப் பொறுத்துக் கொள்கிறேன்’ என்பது போல அவன் மனைவி தேன்மொழியை ஒரு பார்வை பார்த்தான்.

‘‘சரி, காபி சாப்பிடுங்க... ஆறிடப் போகுது! ஒரு நொடியில
டிஃபன் எடுத்துட்டு வரேன்’’ என்றாள் என் மனைவி.

‘‘ஐயையோ! அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நாங்க வரும்போதே சாப்பிட்டுட்டுத்தான் வந்தோம்’’ என்று அவசரமாகக் குறுக்கிட்ட தேன்மொழி என் பக்கம் திரும்பினாள். ‘‘உங்க அம்மாவுக்கு என் மேல இருக்கற கோவம் இன்னும் தணியல போல இருக்கு’’ என்றாள். அவள் கழுத்தில் புதுத்தாலி.

எப்படித் தணியும்? அவள் செய்தது என்ன சாதாரண விஷயமா? சம்பவம் நடந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகியும் இன்னும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் எங்களைக் கேலி பேசி வருகிறார்களே?

உங்களுக்குப் புரிய வேண்டுமானால் இந்தப் பிரச்னையை ஆரம்பத்திலிருந்து சொல்ல வேண்டும்...

என் பெயர் கிருஷ்ணன். தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ்சிறு கதைகள் பேசும் சராசரி மனிதன். அப்பா கிடையாது; அம்மா மட்டும்தான். அப்பா சர்வீசில் இருக்கும்போது இறந்ததால், அந்த வேலை எனக்குக் கிடைத்தது. எனக்குக் கூடப் பிறந்தவர்களும் யாருமில்லை. இந்நிலையில்தான் அம்மா எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தாள்.

எனக்கும் பல கனவுகள், ஆசைகள் இருந்தன, என் வருங்கால மனைவி அப்படி இருக்க வேண்டும்... இப்படி இருக்க வேண்டும் என! ஆனால், அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவும் நல்ல படித்த பெண்ணாகவே பார்த்தாள். ஒன்றில் மட்டும் நான் உறுதியாயிருந்தேன்... அதாவது, எந்தப் பெண்ணை முதலில் பார்க்கிறேனோ அதே பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது என்று! பெண்ணைப் பார்த்து வேண்டாம் என்று சொல்வது காட்டுமிராண்டித்தனமாக எனக்குப் பட்டது. அம்மாவுக்கும் என் யோசனை பிடிக்கவே அவளும் ஒப்புக்கொண்டாள்.

போட்டோவிலேயே பல பெண்களை வேண்டாமென்று சொல்லி, ‘படிப்பு போதாது’ என்று சில பெண்களைத் தள்ளி, கடைசியில்தான் தேன்மொழியை பெண் பார்க்க அழைத்துச் சென்றாள் அம்மா. எனக்கு முதல் பார்வையிலேயே அவளைப் பிடித்துப் போனது. டிகிரி முடித்துவிட்டு ஒரு ஆபீசில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள். கல்யாணத்திற்குப் பிறகு அவளுக்கு இஷ்டமிருந்தால் வேலைக்குப் போகலாம்... இல்லையேல் விட்டுவிடலாம் என்று சொல்லி விட்டாள் அம்மா.


எல்லாம் பேசி முடிவு செய்தாயிற்று. பெண் வீட்டார் கல்யாணத்திற்கு அவசரப்படுத்தினர். தேன்மொழி எனக்குள் பல கற்பனைகளை விதைத்தாள். பெண் பார்த்த அன்றே என் செல்போன் நம்பரைக் கேட்டாள். அதற்கு அவள் பெற்றோர், ‘‘அதெல்லாம் தேவையில்லை’’’ என்று சொல்லி அவள் ஆர்வத்துக்கு அணை போட்டனர். ஏனோ எனக்கு அவளைப் பார்த்து தனியாகப் பேச வேண்டும் என்றோ, அவளுடைய போன் நம்பரைக் கேட்டு வாங்க வேண்டும் என்றோ தோன்றவே இல்லை.

திருமண நாள் நெருங்கியது. புது மாடல் டில்டிங் கிரைண்டர், புது மிக்ஸி என்று வீட்டிற்குத் தேவையான சாமான்களை எல்லாம் வாங்கிப் போட்டேன். வீட்டுக்கு வெள்ளையடித்து சுத்தம் செய்தேன். அம்மா கேலி செய்தாள்.

‘‘பண்ற தடபுடல் எல்லாம் பாத்தா, பொண்டாட்டியே கதின்னு ஆயிடுவ போல இருக்கே...’’

எனக்கு அந்த நினைப்பே சுகமாக இருந்தது. எல்லாவற்றையும் அவளிடமே விட்டு விட வேண்டும். என்னையும் அம்மாவையும் தேன்மொழி மிக நன்றாகப் பார்த்துக் கொள்வாள் என்று மனக் கோட்டை கட்டினேன்.

இதற்கிடையில் என் ஆபீசுக்கு தேன்மொழியிடமிருந்து இரண்டு முறை போன் வந்து, நான் எடுத்துப் பேசுவதற்குள் கட்டானது. ‘‘சரி, இப்போ என்ன அவசரம்? வாழ்நாள் முழுக்கப் பேசப் போறோம்... கெணத்துத் தண்ணிய வெள்ளமா கொண்டு போயிடப் போகுது’’ என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். கல்யாணமும் நடந்து முடிந்து விட்டது. அன்றே ஒரு கார் வைத்து அவளை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம். மண்டபத்திலேயே தேன்மொழியின் பெற்றோர் விடை பெற்றுக்கொண்டனர்.

அம்மா மிகவும் உற்சாகமாக முதலிரவுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள். நாங்கள் இருவரும் ஓய்வாக எங்கள் அறையில் இருந்தோம். அப்போது அவளுடைய செல்போன் ஒலித்தது. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் என் போனை முந்தின நாளே ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்து விட்டேன்.

தேன்மொழி எடுத்து மிக மெல்லிய குரலில் பேசினாள். ‘‘ம்...’’, ‘‘ம்ஹும்...’’ என்பதற்கு மேல் வார்த்தைகளே இல்லை. போன் பேசி முடித்தவள், என்னை நிமிர்ந்து பார்த்தாள். ‘‘இதப் பாருங்க... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்’’ என்றாள். குரலில் வெட்கம் இல்லை; மாறாக ஒரு இயந்திரத்தனமும் பதற்றமும்தான் இருந்தது.

‘‘சொல்லு தேன்மொழி...’’
‘‘நான் பாலுங்கறவரைக் காதலிக்கிறேன். அவரு வேற ஜாதி. அதனால எங்க வீட்டுல சம்மதிக்கல. இப்போ இன்னும் கொஞ்ச நேரத்துல அவரு இங்க வருவாரு. நான் அவர் கூடப் போகப் போறேன்’’ என்று கொஞ்சமும் நாக்கூசாமல் சொன்னாள்.


எனக்கு தலையில் இடி விழுந்தாற் போலிருந்தது. ஏற்கனவே வேறொருவனைக் காதலித்தவள் என்றாலும் அவளை ஏற்றுக் கொண்டு வாழ என் மனம் இடம் கொடுத்தது. ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு காதலனோடு போவதாவது?
‘‘நீ என்ன சொல்ற... தேன்மொழி?’’

‘‘தமிழ்லதானே சொன்னேன்? இந்தத் தாலியக் கழுத்துல கட்டிட்டதால மட்டும் நீங்க என் புருஷனா ஆகிட முடியாது. கல்யாணம்ங்கறது மனசு சம்பந்தப்பட்ட விஷயம். நீங்க போட்ட மூணு முடிச்சை விட ஆழமா, அர்த்தமுள்ளதா நான் என் மனசுல போட்டு வச்சுருக்கேன். அதுதான் எனக்கு முக்கியம். போலியா உங்களையும் ஏமாத்தி, என்னையும் ஏமாத்திக்கிட்டு, ஒரு வாழ்க்கை வாழ நான் தயாரா இல்ல. என்னை மன்னிச்சிடுங்க’’ என்றவள், நான் கட்டிய தாலியை அவிழ்த்து என் கையில் கொடுத்தாள்.

‘இப்போது செய்வது மட்டும் ஏமாற்றுதல் இல்லையா... இத்தனை சடங்குகளுக்கும் ஏன் தலைகுனிந்து சம்மதித்தாய்’ என்று தொக்கிய கேள்வியை எனக்குள் அடக்கினேன்.
எனக்குள் ஓராயிரம் கேள்விகள்.

‘‘இதக் கல்யாணத்துக்கு முன்னாலயே சொல்லியிருக்கலாம் இல்ல? நானே கல்யாணத்தை நிறுத்தியிருப்பேனே..?’’
‘‘அதுலதான் ஒரு சிக்கல். இந்தக் கல்யாணம் நின்னு போச்சின்னா எங்க அம்மா, அப்பா தற்கொலை பண்ணிக்குவோம்னு மிரட்டினாங்க! எங்க அப்பா சொன்னா சொன்ன மாதிரி செஞ்சிடுவாரு. மானஸ்தர். அதான் வேற வழி தெரியாம இந்த முடிவை எடுத்தேன்...’’
‘‘அப்ப நாங்களெல்லாம் மானம் கெட்டவங்க... அப்படித்தானே?’’
‘‘ஐயையோ! நான் அப்படி சொல்லல சார். நீங்க எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவீங்கன்னு நான் நம்பினேன். ப்ளீஸ்... புரிஞ்சிக்கங்க சார். இஷ்டமில்லாம நான் உங்க கூட வாழறதால உங்களுக்கு மனசு கஷ்டம்தான் மிஞ்சும்...’’
என் நிலைமை தர்மசங்கடமானது. எங்களுக்கும் இது அவமானம்தான். வீட்டிற்கு வாழ வந்த பெண், வந்த அன்றே ‘காதலனோடு போகிறேன்... ஆசீர்வாதம் செய்’ என்றால்? என்னுள் கோபம் மூண்டது.

‘ச்சே... என்ன பொண்ணு இவ? தன்னுடைய சுயநலத்துக்காக மத்தவங்களை பலி கொடுக்கறா? இப்போ நான் என்ன செய்யணும்? போகக் கூடாதுன்னு சொன்னா என்ன செய்வா? வலுக்கட்டாயமா ஒரு பெண்ணை இருக்க வைக்க முடியுமா? இப்போ இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஓடிப் போக மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? அந்த அவமானத்துக்கு இது எவ்வளவோ மேல். ஆனால், அம்மாவுக்கு என்ன பதில் சொல்ல?’
யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவனாக அவளிடம் பேசினேன்.

‘‘இதப் பாருங்க மேடம்! (அவள் சார் எனும் போது நானும் மேடம் என்பதுதானே நாகரிகம்?) அவரு இங்க வரட்டும். நானே உங்களை அனுப்பி வெக்கறேன். ஆனா, ஒண்ணு... எங்கம்மாகிட்ட இப்பவே இதைச் சொல்ல முடியாது. நீங்க போனப்புறம்தான் சொல்லுவேன். ஏன்னா அனாவசியமான கூச்சல் கூப்பாடு வேண்டாம்னு பாக்கறேன்’’ என்றேன்.

அவள் கண்களில் நன்றிப் பெருக்கு. கை எடுத்துக் கும்பிட்டாள். அவளுக்குப் பிறக்கும் முதல் குழந்தைக்கு என் பெயர்தான் என்றாள்; இன்னும் என்னென்னவோ சொன்னாள்; எதுவுமே என் காதில் விழவில்லை. மனம் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கல்லாகப் பாறையாக இறுகிக் கிடந்தது.

இனியும் வளர்க்க என்ன இருக்கிறது? பாலு வந்தான். இருவரையும் அனுப்பிவிட்டு அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லி, அக்கம்பக்கத்தவரின் கேள்விகளைச் சமாளித்து, கேலிப் பார்வையை அலட்சியப்படுத்தி, அலுவலகத்தில் மௌனம் காத்து...

அப்பப்பா! நான் பட்ட வேதனை... நரக வேதனைதான் போங்கள். இது நடந்து ஒரு மாதத்திற்கெல்லாம் என் அம்மா வேறு ஒரு பெண்ணைப் பார்த்து எனக்கு மணமுடித்து விட்டாள். பெண் சுமார்தான். படிப்பும் பிளஸ் 2தான். எத்தனை மருந்து போட்டாலும் என் மனதை ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருந்தாள் தேன்மொழி.

இதோ அந்தத் தேன்மொழி என் வீட்டில். நன்றி சொல்ல வந்தார்களாம். அப்படியே என் மனைவியையும் பார்த்துப் போக வந்தார்களாம். மரியாதை கருதி நான் அவர்களிடம் பேசினேன். என் மனைவிதான் ஓடி ஓடி கவனித்துக் கொண்டிருந்தாள். வந்தவர்கள் கிளம்ப... தேன்மொழிக்கு ஒரு எவர்சில்வர் தட்டு, ரவிக்கைத் துணி, பூ, மஞ்சள் எல்லாவற்றையும் ஒரு கவரில் போட்டுக் கொடுத்தாள் என் மனைவி. அவர்கள் போய் விட்டனர்.

‘‘சரசு! வந்தவங்க யாருன்னு உனக்குத் தெரியும் இல்ல? அப்படியிருந்தும் ஏன் அவங்களை நல்லா கவனிச்ச?’’ என்றேன் மனைவியிடம்.

‘‘வீட்டுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் கவனிக்கணும்கறது முதல் காரணம். அப்புறம், ரெண்டாவது காரணம்...’’ என்று இழுத்தவள் தயங்கினாள். முகத்தில் நாணத்தின் சாயல்.
‘‘உம், சொல்லு சரசு! ரெண்டாவது காரணம்..?’’ - தூண்டினேன்,
‘‘அந்தத் தேன்மொழி உங்களை வேண்டாம்னு சொன்னதாலதானே நீங்க எனக்கு கெடச்சீங்க? அதுக்கு ஒரு சின்ன நன்றி... அவ்வளவுதான்’’ என்றாள் முகம் சிவக்க.
தேன்மொழி என்ற முள் மறைந்து சரசு என்னும் பூங்கொடி என் இதயத்தை ஆக்கிரமித்துக்கொள்ள, அவளை அணைத்தபடி உள்ளே சென்றேன்.