ரோஜாவிடம் ரஜினி செய்த குறும்பு!





''சிவாஜி கார்டனில் 'வீரா’ படத்தில் வரும் ‘வாடி வெத்தல பாக்கு வாங்கித் தாரேன் போட்டுக்கோ...’ பாடல் ஷூட்டிங்கில் எடுத்த போட்டோதான் இது. ரஜினி சார்கூட நான் ரெண்டு படம்தான் நடிச்சிருக்கேன். ஆனால் என்னை மாதிரி எந்த நடிகையும் அவர்கிட்ட பேசியிருக்க மாட்டாங்க. அதேபோல எங்கிட்ட அவர் பண்ணாத கலாட்டாவே இல்லை...’’ என நினைவுகளில் மூழ்கினார் ரோஜா.

‘‘ஒருநாள் ‘வீரா’ படத்தோட அவுட்டோர் ஷூட்டிங். லஞ்ச் பிரேக்கில் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போ லேசா சூரிய ஒளி கட்டிலில் பட்டுக்கொண்டிருந்தது. திடீர்னு யூனிட்டில் இருந்தவர்கள் சிரிக்க, நான் தூக்கம் கலைந்து விழித்தேன். என்ன என்று பார்த்தால், ரஜினி சார் என் மேல் வெயில் படாதபடி குடைபிடித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து நான் பதற, மற்றவர்களோ ரஜினியின் குறும்பை ரசித்து சிரித்தனர்.

‘உழைப்பாளி’ படத்தில் வரும் ‘முத்திரை இப்போது குத்திட தப்பாது ராஜா ராஜா...’ பாடலில் நானும் ரஜினி சாரும் ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு ஆட முடிவானது. இந்த ஐடியாவை சொன்னதே ரஜினி சார்தான். ஷார்ட்ஸ் போட்டபடி நான் செட்டுக்கு வந்துட்டேன். ரஜினி சாரோ பேன்ட் போட்டுக்கொண்டு வந்தார். உடனே நான், ‘நீங்க மட்டும் இப்படி வந்தா எப்படி’ன்னு கேட்டேன். ‘உனக்கு இதுதான் அழகு. அதையும் மறைச்சிட்டா அப்புறம் என்ன இருக்கு?’ என்று கிண்டல் செய்தார். நானும் விடுவதாயில்லை... ‘சும்மா சிகரெட்டைத் தூக்கிப் போட்டு பிடிக்கிறீங்க. முடிய கோதி விடுறீங்க. அதைத் தவிர உங்ககிட்ட என்ன இருக்கு’ன்னு கேட்டேன். ஸ்பாட்ல இருந்தவங்க, ‘என்ன இந்தப் பொண்ணு இப்படி பேசுது’ன்னு ஆடிப் போயிட்டாங்க. ஆனா ரஜினி சார் எந்த ஈகோவும் இல்லாம சிரிச்சார்.

நடிக்க வந்த புதிதில் எனக்கு அவ்வளவா தமிழ் தெரியாது. ஒருமுறை டி.வி-யிலிருந்து என்னை பேட்டி எடுக்க வந்தாங்க. பேட்டிக்கு நான் தயாரானபோது, ‘இந்தப் பொண்ண பேட்டி எடுக்காதீங்கப்பா. பேட்டி எடுத்தீங்கன்னா என் மானத்தை வாங்கிடும்’னு சொன்னார் ரஜினி சார். அவங்க புரியாம விழிக்க, ‘நாயை வாங்க போங்கன்னு மரியாதையா சொல்லும். என்னை வாடா போடான்னு சொல்லும். டிவியில அது வந்தா என் மானமே போயிடும்’ என்று ரஜினி காட்டிய செல்ல பயத்தைப் பார்த்து ரிப்போர்ட்டர்ஸ் ஏரியாவே கலகலப்பாகிவிட்டது.’’
- அமலன்
படம் உதவி: ஞானம்