கவிதைக்காரர் வீதி






பெயர்

திருடனொருவனை
காட்டிக் கொடுத்த
அடுத்த வீட்டுத்
திருட்டுப் பூனைக்கு
அதற்குப் பிறகும்
அதே பெயர்தான்!
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி.

சலனம்
கற்கள் தேவையில்லை
நிசப்தம் கலைக்க
மனக்குளம்!
- ச.கோபிநாத், சேலம்.

பசி
முழு நிலவு
ரசிக்கவிடாத
பசித்த வயிறு.
- ப.மதியழகன், மன்னார்குடி.

கருணை
வலையில் சிக்காத
மீன்கள்
வருத்தப்பட்டன மீனவனுக்காக!
- பி.என்.ஜெயசங்கர், திருவாரூர்.

துயரம்
யாரிடமும்
சொல்லமுடியாததுதான்
கடவுளின் துயரம்!
- பெ.பாண்டியன், காரைக்குடி.

மழலைகள்
குழந்தை ஒன்றை
ஆசீர்வதித்த பிறகு,
காசைப் பெற்றதாய்
பாசாங்கு செய்தது
கோயில் யானை
பிஞ்சுக் கைகளில்
இன்னுமிருக்கிறது
அந்த ஒற்றைக்காசு...
- அக்னிபுத்ரன், சென்னை.