அதை அவமானமாக நினைக்கிறேன்!





கடந்த வாரம் தமிழகத்தையும் இணையத்தையும் பரபரப்பாக்கியது அந்த இரண்டு போட்டோக்கள். ‘கொலவெறி’ பாட்டு மூலம் ஓவர்நைட்டில் உலகப்புகழ் அடைந்த இசையமைப்பாளர் அனிருத்தும், நடிகை ஆன்ட்ரியாவும் கண்கள் மூடி, கிறக்கத்தோடு, உதட்டோடு உதடு ஒட்ட முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இந்த முத்த போட்டோக்கள் சூடாகப் பரவ, இந்த முத்தக்காட்சி ஒரு வீடியோவாகவும் இருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. கூடவே 21 வயது அனிருத்துக்கும், 27 வயது ஆன்ட்ரியாவுக்கும் ஏற்பட்டிருக்கும் காதல் பற்றியும் கதைகள்...

நிஜம் என்ன?
தமிழ்நாட்டில் பிறந்த, தமிழ் நன்றாகப் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு பரபரப்பாக வாய்ப்புகள் அமையாது என்பதற்கு இன்னொரு உதாரணம், ஆன்ட்ரியா! அடிப் படையில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆன்ட்ரியா ஜெரோமையா. என்றாலும் பிறந்து, வளர்ந்ததெல்லாம் சென்னை அருகே உள்ள அரக்கோணம்தான். அப்பா வழக்கறிஞர். அம்மா ஹோம் மேக்கர். ஒரே ஒரு தங்கை பெல்ஜியத்தில் இருக்கிறார்.

நடிகை ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் ஆன்ட்ரியாவுக்கு இருந்ததில்லை. பாடுவது என்றால் உயிர்! ஆல்பங்கள், மேடைக் கச்சேரிகள் என நகர்ந்துகொண்டிருந்த கேரியரில் முதல் தமிழ் சினிமா வாய்ப்பு ‘அந்நியன்’. அதில் ஹிட்டான ‘கண்ணும் கண்ணும் நோக்கியா...’ பாடல்தான் ஒரு பாடகியாக அவரைப் பிரபலப்படுத்தியது. ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு பாடலுக்கு அழைத்த கௌதம் மேனன், ஆன்ட்ரியாவின் திறமையைப் புரிந்துகொண்டு கமாலினி முகர்ஜிக்கு வாய்ஸ் கொடுக்க வைத்தார். பிறகு அவரே ஆன்ட்ரியாவை நடிகையாகவும் ஆக்கினார். அந்தப் படம் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’.

படங்கள் அடுத்தடுத்து வரவில்லை என்றாலும் ஆன்ட்ரியா பற்றிய கிசுகிசுக்களுக்குக் குறைவில்லை. ‘கௌதம் மேனனுடன் நெருக்கமாக இருக்கிறார்’, ‘செல்வராகவன் - சோனியா அகர்வால் பிரிவுக்கு ஆதி அந்தமே ஆன்ட்ரியாதான்’, ‘ஒரு போட்டோகிராபருடன் காதலில் விழுந்திருக்கிறார்’ என்றெல்லாம் செய்திகள் வட்டமடித்து வந்தன. இதன் தொடர்ச்சியாக இந்த போட்டோக்கள்!
இந்த போட்டோக்களின் பின்னால் இருக்கும் உண்மை பற்றி அனிருத்திடம் கேட்டுவிட போன் போட்டால், அவர் ஸ்விட்ச் ஆஃப். ஆன்ட்ரியாவை தொடர்புகொண்டபோது நீண்ட தயக்கத்திற்குப் பிறகு கோபமும் கவலையும் கலந்து பேசினார்...

‘‘நான் இப்போது ஐதராபாத்தில் ஒரு ஷூட்டிங்கில் பிஸியா இருக்கேன். அந்தப் படங்கள் எல்லாம் கிராபிக்ஸ், யாரோ ஒட்டுவேலை செய்து பரப்பி விட்டார்கள் என்று நான் பொய் சொல்ல மாட்டேன். சுமார் பதினேழு மாதங்களுக்கு முன்பு எடுத்த படங்கள் அவை. நாங்கள் முத்தமிட்டுக்கொண்டது உண்மைதான். இது ஒரு சாதாரணமான நிகழ்வுதான். அந்த சமயத்தில் எனக்கும் அனிருத்துக்கும் இடையே ஒரு அழகான, ஆரோக்கியமான உறவு இருந்தது. அந்த நெருக்கமான உறவு, எங்கள் இரண்டு பேருக்கும் வாழ்க்கையில் நிறைய அர்த்தங்களைக் கொடுத்தது. ஆனால் இப்போது அது இல்லை.

அனிருத்துடன் பழகிய நாட்களை கசப்பானதாக நினைக்கிறேன். இனி அந்த உறவு நீடிக்காது. அந்தப் படங்களை எப்படி வெளியிட்டார்கள், யார் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. என் மனதை அது புண்படுத்தியுள்ளது. இன்டர்நெட்டில் அந்தப் படங்களை வெளியிட்டது அநாகரிகமான செயல். அனிருத்துடன் நான் இருக்கும் அந்தப் படத்தோட, அதனை வெளியிட்ட விதம்தான் மோசமானது. அதனை நான் அவமானமாக நினைக்கிறேன். இனி இதுபற்றி பேசுவதற்கு ஒன்றும் இல்லை.


நடிகைகளும் மனுஷிகள்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். எங்களுக்கும் நட்பு உண்டு, காதல் உண்டு, உறவுகள் முறிந்து இதயம் வலிப்பது உண்டு. இதெல்லாம் பர்சனல் விஷயங்கள். இதில் யாரும் தலையிடுவதை நான் விரும்பவில்லை. இதுபோன்ற சம்பவங்களால் நிகழும் மனரீதியான பாதிப்பை யார் உணர்ந்துகொள்ள முடியும்? நடிப்பு, பாடல் என்று என் கேரியர் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. நிறைய சாதிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வேலையில் மூழ்கி எல்லாவற்றையும் மறக்க நினைக்கிறேன்’’ என்றார் அவர்.

‘‘இசை ஆர்வம்தான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. இந்த இருவரின் காதல் பிடிக்காமல், எதை எதையோ கிளப்பி விட்டு அனிருத்துக்கும் ஆன்ட்ரியாவுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தியவர்களே இந்தப் படங்களை வெளியிட்டிருக்க லாம்’’ என்று கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அனிருத் பேசினால் இதற்கு விடை கிடைக்கலாம். அவர் பேசுவாரா?          
- அமலன்