குடத்தின்
அமைப்பைக் குறிப்பது கும்பம். குடத்தை திறந்து பார்த்தால்தான் உள்ளே
இருப்பது தெரியும். அதுபோல தனக்குள் இருப்பதை வெளியே தெரியாமல்
வைத்திருப்பீர்கள் நீங்கள். தூண்டுகோல் இருந்தால்தான் துலங்குவீர்கள்.
இல்லையெனில் உள்ளேயே விஷயங்களை வைத்துக் கொண்டு தவிப்பீர்கள்.
உங்களிடத்தில் பல ஆற்றல்கள் குவிந்து கிடக்கும். உங்களுக்கு பத்தாம் இடமான
வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறார். ஜோதிடம்,
மாந்திரீகத்தில் ஈடுபாடு காட்டுவீர்கள். கெமிக்கல், மருந்து வகைகள் போன்ற
கம்பெனிகளில் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணி புரிவீர்கள்.
உங்களிடம் இந்த இரண்டு விஷயங்களுமே கலந்திருக்கும். அரசியல்வாதிகள் மற்றும்
அரசாங்கத்தோடு தொடர்புடையவர்களால் எப்போதுமே அதிக லாபம் பெறுவீர்கள்.
வெளிநாடு
சென்று பட்டம் வாங்கினாலும், குலத் தொழிலை காதலிப்பீர்கள். ‘‘பொய் சொல்லக்
கூடாது. பித்தலாட்டம் கூடாது. நேர்மையா உழைச்சு சம்பாதிக்கணும்’’ என்று
ஸ்லோகம் போல சொல்லிக் கொண்டே இருப்பீர்கள். ராசிநாதனாக சனி பகவான்
இருப்பதால், கூலிக்கு மாரடிக்காமல் எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பாக
எடுத்துச் செய்வீர்கள். ஆனால், உங்கள் உத்யோக ஸ்தானாதிபதியாக விருச்சிக
செவ்வாய் வருவதால் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்ப்பு இருந்துகொண்டே
இருக்கும். ‘‘அடடா... அற்புதமான சிந்தனையாச்சே இது’’ என்று ஆமோதிக்கவும்
ஒரு கூட்டம் இருக்கும். இப்படி இடைவிடாத ஒரு போராட்ட சூழ்நிலை இருப்பதனால்,
நீங்கள் வித்தியாசமாக யோசித்து விறுவிறு என்று வளருவீர்கள்.
வியாபாரமாக
இருந்தாலும், வேலையாக இருந்தாலும், அதை முழுவதுமாக நேசிப்பீர்கள்;
சுவாசிப்பீர்கள். அதனால்தான் பலர் ஆறு வருடத்தில் முடிக்கிற விஷயத்தை
நீங்கள் இரண்டே வருடத்தில் முடிப்பீர்கள். படித்த படிப்பிற்கும், பார்க்கிற
தொழிலுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பீர்கள். இந்த விஷயம் பன்னிரெண்டு
ராசிகளில் ஏறக்குறைய ஆறு ராசிகளுக்குப் பொருந்தி வந்தாலும் உங்களில்தான்
இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும். மனம் எந்தத் தொழிலில் அதிக ஆர்வம்
கொள்கிறதோ, உடனேயே செய்கிற வேலையை விட்டுவிட்டு அதில் இறங்கி விடுவீர்கள்.
ஆரம்பத்தில் சாதாரண வேலையில் சேர்வீர்கள். ஆனால், தொலைநோக்குச் சிந்தனையும்
உழைப்பும் உங்களிடம் அதிகமாக இருப்பதால், பெரிய பதவிகளில் அமர்வீர்கள்.
பல்கலைக்கழக படிப்பு இல்லாமல் போனாலும் அனுபவ அறிவால் ஆதிக்கம்
செலுத்துவீர்கள்.
வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய்
வருவதால், புலம்பிக் கொண்டே வேலை பார்ப்பீர்கள். ‘‘ஒரு டிராஃப்ட் போட்டு
எடுத்துக்கிட்டு வரச் சொன்னா, ஒழுங்கா நாலு வரி எழுதத் தெரியல. ஆனா,
டிஸ்டிங்ஷன்ல பாஸ் பண்ணிட்டு டை கட்டிக்கிட்டு வந்து
உட்கார்ந்திருக்கீங்க’’ என்று திறமையற்றவர்களை, வேலை கற்றுக்கொள்ள
ஆர்வமில்லாதவர்களை விமர்சனம் செய்தபடி இருப்பீர்கள். உத்யோகத்தில் எத்தனை
பிரமோஷன் வாங்கினாலும் உங்கள் பேச்சில் பணிவு குறையாது. உடைகளிலும் பெரிய
மாற்றம் இருக்காது. அவ்வப்போது உத்யோக விஷயமாக வழக்குகளை சந்தித்தபடி
இருப்பீர்கள். ‘‘நியாயத்துக்குக் காலமில்லை. சட்டப்படி வரவேண்டிய பதவி
உயர்வைக்கூட கோர்ட் வரைக்கும் போய் வாங்க வேண்டியதா இருக்கு’’ என்று
சலித்துக் கொள்வீர்கள்.
உங்கள் ராசிநாதனாக கும்பச் சனி வருவதால்
சொந்தத் தொழில் செய்ய வேண்டுமென்கிற ஆர்வம் எப்போதும் இருக்கும். சின்ன
வயதிலேயே நான்கு பேருக்கு வேலை கொடுத்து வாழ வைக்க ஆசைப்படுவீர்கள்.
உங்களில் பலர் சிறந்த தொழிலதிபர் விருதெல்லாம் வாங்குவீர்கள்.
இனி ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் எப்படி என்று பார்ப்போம்...
அவிட்டம்
3, 4ம் பாதங்களில் பிறந்தவர்களான நீங்கள் தன்மானத்தோடு இருப்பீர்கள்.
அலட்டிக்கொள்ளாமல் வேலை பார்ப்பீர்கள். திறமை இல்லாமல் சிபாரிசால் வேலைக்கு
வருபவர்களை பிடிக்காது. மேலதிகாரிகள் சட்ட திட்டத்தை வளைத்து எதையாவது
செய்யச் சொன்னால் உடனே மறுப்பீர்கள். அதனாலேயே அடிக்கடி இடம்
மாற்றப்படுவீர்கள். 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் இன்சூரன்ஸ், கெமிக்கல்,
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், பொருளாதார ஆசிரியர், விவசாய
அதிகாரி, கால்நடை மருத்துவர் போன்ற வேலைகளில் பெரிய முன்னேற்றம்
அடைவீர்கள். வியாபாரமெனில், பால் பண்ணை, ஹேர் ஆயில் விற்பனை, தானிய
விற்பனை, நெய்க்கடை, அடகு வியாபாரம், பப்ளிகேஷன்ஸ், சர்க்கஸ் கம்பெனி, மரம்
இழைப்பகம் என்று ஈடுபடுவீர்கள். 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் வக்கீல்,
ஸ்டெனோகிராபர், மொழிபெயர்ப்பாளர், நீதிபதி, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்,
தீயணைப்புத் துறை, கெமிக்கல் எஞ்சினியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், கல்வி
அதிகாரி என பணியாற்றுவீர்கள். வியாபாரமெனில், பப்ளிகேஷன், மருந்துக் கடை,
ஹோட்டல், துணிக்கடை, நகைக்கடை, ஃபேஷன் ஜுவல்லரி, டிரை கிளீனிங், டியூஷன்
சென்டர், எலெக்ட்ரிகல் கடை என்று முன்னேறலாம்.
சதயம் நட்சத்திரத்தில்
பிறந்த நீங்கள், அனுசரித்துப் போகத் தெரியாததால் பதவி உயர்வு, சம்பள உயர்வு
என்று சில விஷயங்களைப் பறிகொடுப்பீர்கள். மனசாட்சிப்படி நடக்கிறேன் என்று
உங்களுக்கு நீங்களே நன்னடத்தை சான்றிதழ் கொடுத்துக் கொள்வீர்கள்.
நிர்வாகத்தை எதிர்க்கிற உங்களுக்கு தொழிலாளிகள் மத்தியில் ஆதரவு பெருகும்.
ஆனால், பிரச்னை வரும்போது தனி மரமாக நிற்பீர்கள்.
முதல் பாதத்தில்
பிறந்தவர்கள் அணு உலை, நிலக்கரிச் சுரங்கம், இரும்பு உருக்காலை, கெமிக்கல்
கம்பெனி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், பிசியோதெரபிஸ்ட், ஆம்புலன்ஸ்
சர்வீஸ், தோட்டக் கலை என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரமெனில்
ஸ்கேன் சென்டர், குவாரி, சித்த மருத்துவசாலை, மோட்டார் ரிப்பேர், லாரி
பராமரிப்பு, செங்கல் சூளை என்று மேம்படலாம். 2ம் பாதத்தில் பிறந்தவர்கள்
மனநல மருத்துவர், பேராசிரியர், காவல் நிலைய எழுத்தர், பாடத்திட்டத்தை
உருவாக்குபவர், சி.பி.ஐ., ரயில்வே அதிகாரி, பஸ் கண்டக்டர், நிதித்துறை
அதிகாரி, வங்கி அதிகாரி, யோகா மாஸ்டர் என்று சில வேலைகளில் ஈடுபடுவீர்கள்.
அதுவே வியாபாரமெனில், இறைச்சிக் கூடம், மரப் பயிர், தோட்டப் பயிர்
செய்பவர், அசைவ உணவகங்கள், மரக்கடை, சிமென்ட் கடை, பட்டாசுத் தொழிற்சாலை,
முதியோர் இல்லம் வைத்து நடத்துதல் என்று தொழிலில் இறங்கி பாராட்டும்படியாக
சாதிப்பீர்கள்.
3ம் பாதத்தில் பிறந்தவர்கள் வருவாய் அலுவலர், நில
அளவையாளர், முத்திரைத்தாள் விற்பனையாளர், தரக் கட்டுப்பாட்டு அதிகாரி,
பிளான் அப்ரூவர், பைலட், பாடலாசிரியர், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை பழுது
பார்ப்பவர், இயற்பியல் விஞ்ஞானி, வெள்ளி ஆபரணக்கூடம் என்று சில வேலைகளில்
பணியாற்றுவீர்கள். அதுவே வியாபாரமெனில், கிளப் வைத்து நடத்துதல், தண்ணீர்
சுத்திகரித்து விற்பனை, லாரி கம்பெனி, பெட்ரோல் பங்க், அரிசி மண்டி போன்றவை
ஏற்றம் தரும். 4ம் பாத்தில் பிறந்தவர்கள் ராணுவம், உளவுத்துறை,
பாதுகாப்புத் துறை, புவியியல், மண்ணியல் சார்ந்த துறைகளில் வேலை, நிலக்கரி
சுரங்கத்தில் பணியாற்றுதல், உயிரியல் பூங்கா, பத்திரிகையாளர், சர்க்கஸ்
மாஸ்டர், மூளை அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜரி ஸ்பெஷலிஸ்ட்
என்று பணியாற்றுவீர்கள். அதுவே வியாபாரமெனில், இறால் பண்ணை, பள்ளிக்கூடம்,
செவிலியர் பயிற்சிக் கல்லூரி, எஞ்சின் ஆயில் கம்பெனி, மணல் வியாபாரம்,
சூரிய மின்சார சாதனங்கள் தயாரித்தல் என்று சிலவற்றில் இறங்கி நல்ல லாபம்
பெறுவீர்கள்.
பூரட்டாதி நட்சத்திரத்தை அனுபவ ஆச்சார்யன், ஞான
பரிபூரணனான குரு ஆட்சி செய்கிறார். இதன் முதல் மூன்று பாதங்கள் கும்பத்தில்
இடம்பெறுகின்றன. அலுவலகத்திலோ அல்லது அரசாங்கத்திலோ ‘மே ஐ ஹெல்ப் யூ’
என்று ஒரு போர்டு இருந்தால் அங்கு உங்களைத்தான் உட்கார வைப்பார்கள். அந்த
அளவிற்கு எல்லோருக்கும் உதவுவீர்கள். ஜென்ம எதிரியாக இருந்தாலும், ஏதேனும்
கேட்டு வந்துவிட்டால் தயங்காமல் கொடுப்பீர்கள்.
முதல் பாதத்தில்
பிறந்தவர்கள் எலெக்ட்ரிகல் துறை சார்ந்த பணிகள், அக்குபங்ச்சர், தானிய அரவை
நிலையம், ஸ்டோர்ஸ் இன்சார்ஜ், உளவியல் நிபுணர், ஹோமம் செய்தல், ஜோதிடத்
துறை என்று பணியாற்றுவீர்கள். முடநீக்கியலில் சிறப்பு மருத்துவராக
வருவீர்கள். அதுவே வியாபாரமெனில், பப்ளிகேஷன், தானிய மண்டி, அரிசி
வியாபாரம், வேர்க்கடலை மிட்டாய், வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்தல்
என்று பல தொழில்களில் பிரகாசமான எதிர்காலம் உண்டு. 2ம் பாதத்தில்
பிறந்தவர்கள் கன்ஸ்ட்ரக்ஷன், ஆர்க்கிடெக்ட், நான்கு சக்கர வாகனப்
பழுதுபார்ப்பு, சாஃப்ட்வேரில் புரோக்ராமர், புராஜெக்ட் மேனேஜர்,
வருவாய்த்துறை அலுவலர், அரசு கருவூலம், நீதித்துறை என பணிபுரிவீர்கள்.
வியாபாரமெனில் புத்தக வெளியீட்டாளர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனைக்
கூடம், ஜிம் வைத்து நடத்துதல், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்ஸ் கடை, காய்கனி
அங்காடி, எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை என்று ஈடுபட நல்ல லாபம்
கிட்டும்.
3ம் பாதத்தில் பிறந்தவர்கள் யோகா மாஸ்டர், பர்சனாலிட்டி
டெவலப்மென்ட் கோர்ஸ் மாஸ்டர், வங்கியில் காசாளர், தொடக்கப் பள்ளி ஆசிரியர்,
கமிஷன் ஏஜென்ட், மருத்துவத்தில் ரேடியோலஜி, அனஸ்தீசியா ஸ்பெஷலிஸ்ட்,
அஞ்சல்துறை போன்று பல்வேறு பணிகளை சிறப்பாக செய்வீர்கள். டெலி கம்யூனிகேஷன்
கம்பெனிகள் மற்றும் டெலி ஷாப்பிங் போன்ற துறைகள் நல்ல வருமானம் தரும்.
வியாபாரம் எனில், கமிஷன், புரோக்கரேஜ், ஃபேன்சி ஸ்டோர், கிஃப்ட்
ஆர்ட்டிகல்ஸ், வாஸ்து மீன், வளர்ப்பு மீன்கள் விற்பனைக் கூடம், கூரியர்,
பூஜை சாமான்கள் விற்பனை என்று இறங்க நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பத்தின்
வேலை ஸ்தானத்திற்கு அதிபதியாகவும், பத்தாம் இடத்திற்கு உரியவராகவும்
விருச்சிகச் செவ்வாய் வருகிறார். எனவே, முருகன் வழிபாடு மிகவும் அவசியம்.
நெல்லை மாவட்டம் தென்காசிக்கு அருகே இருக்கும் ஆய்க்குடி முருகனை தரிசித்து
வாருங்கள். அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரமணிய
சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலிருந்த குளத்தை
தூர்வாரியபோது இந்த மூலவர் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர்
அந்தச் சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே
வைக்கப்பட்டு தற்போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள். சைவ, வைணவ
ஒற்றுமை கருதி ராமபக்தர்களும் இத்தலத்து முருகனை வழிபட ஆரம்பித்ததால்
இங்குள்ள பாலசுப்ரமணியர், ‘ஹரிராம சுப்ரமணியர்’ என்றழைக்கப்பட்டார். இங்கு
ராமபிரான் வந்து சென்றதாகக் கூறப்படுவதன் அடிப்படையில் மூலவரான
பாலசுப்ரமணியருக்கு வைகானஸ ஆகம முறையிலும், உற்சவரான முத்துக்குமார
சுவாமிக்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடத்தப்படுகின்றன. நெல்லை மற்றும்
தென்காசியிலிருந்து ஆய்க்குடிக்கு பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.
(தீர்வுகளைத் தேடுவோம்...)