சைலன்ஸ்





‘ஸ்ரீ ஸ்பந்தனா’ என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்கிறார் ஸ்ரேயா. பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது அவரது இலக்கு. தான் செல்லும் இடங்கள், தங்கும் ஓட்டல்களில் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரேயா.

‘‘நான் எழுதும் வரிகளுக்கு மெட்டு போட்டால், ஒரு பாடலுக்காக வாங்கும் சம்பளத்தில் பாதியைக் குறைத்துக்கொள்கிறேன்’’ என்று விழா ஒன்றில் வைரமுத்து பேச, கவிஞரின் டீலிங் பிடித்திருப்பதாகச் சொல்லி அவர் வீட்டுக் கதவைத் தட்டுகிறது இயக்குனர்கள் கூட்டம்.

‘சென்னையில் ஒரு நாள்’ டீம் மறுபடியும் இணையும் படத்தில் நாயகனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. இவரது தாத்தா, தந்தையாக இரட்டை வேடத்தில் சரத்குமார் நடிக்கிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் முப்பது பேருக்கு மேல் படிக்கிறார்கள். அவர்கள் ஃப்ரீயாக இருக்கும் சமயங்களில், ரஹ்மான்
படங்களுக்கு கோரஸ் பாடுகிறார்கள். அவர்களிலிருந்து சிலரை தேர்ந்தெடுத்து வெயிட்டிங்கில் வைத்திருக்கிறார் ரஹ்மான்.

‘குட்டிப்புலி’யைப் பார்த்து வியந்திருக்கிறார் விஜய். அவருக்குப் பிடித்தது சசிகுமாரின் நடிப்பாம். அனேகமாக விஜய்யின் அடுத்த டைரக்டர் லிஸ்ட்டில் சசிகுமார் இருப்பார் என்கிறார்கள்.

சந்தானத்தின் மனசில் ஈரம் நிறைய கசிகிறது. தன்னால் செய்ய முடியாத ரோல்களுக்கு மற்ற நடிகர்களை சிபாரிசு செய்கிறார். அந்தப் படத்திற்கு ஒரு நாள் கால்ஷீட் கொடுத்து, சின்னதாக ஒரு ரோலும் செய்து கொடுக்கிறார்.

தெலுங்கு நடிகர் வெங்கடேஷுக்கு அஞ்சலி காம்பினேஷன் மிகவும் பிடித்துப் போய் விட்டது. அதாவது ராசி. வெகுநாட்களுக்குப் பிறகு அவரது படம்
சூப்பர் ஹிட் ஆக அஞ்சலியும் ஒரு காரணம் என நினைக்கிறாராம். அட, இப்படியும் சான்ஸ் கிடைக்குமா?



வெகுநாட்களுக்குப் பிறகு அஜித்தும், சுந்தர்.சியும் மறுபடியும் சேர்ந்து படம் செய்யப் போகிறார்கள். கச்சிதமாக திரைக்கதையை உருவாக்குவதில் பிஸியாக இருக்கிறார் சுந்தர். இன்ச் பை இன்ச் கதை சொல்லி சுந்தருக்கு பழக்கமே இல்லாததால், அவரை மட்டுமே நம்பித்தான் எல்லோரும் அவரிடம் படம் ஒப்புக் கொள்வார்கள். அப்படியேதான் இந்தத் தடவையும் அஜித் ஒன்று சேர்கிறார்.

யுவன்ஷங்கருக்கு இப்போது நல்ல நேரம். லிங்குசாமி தயாரிப்பில் கமல் டைரக்ட் செய்யும் படத்திற்கு அவர்தான் மியூசிக். தயங்கித் தயங்கித்தான் கமலிடம் சொல்லியிருக்கிறார் லிங்கு. ‘‘இதில் என்ன தயக்கம், நான் ரெடி. ஏற்கனவே ராஜா, கார்த்திக் ராஜாவுடன் ஒர்க் பண்ணிட்டேன். இவருடனும் வேலை பார்த்துட்டா அது முழுமையாகும்’’ என்றாராம். உடனே யுவன் போய் கமலைப் பார்த்து ஆசி வாங்கிவிட்டார்.

இன்னொரு இந்திப் படம் காத்திருக்கிறது தமன்னாவுக்கு. ‘ஹிம்மத்வாலா’ படத்தை இயக்கிய அதே சஜித்கான் இயக்கும் ‘ஹம்ஷகல்’ படத்திலும் தமன்னாதான் நாயகி. ஹீரோ சயீப் அலிகான்.

சொந்தமாக பள்ளிக்கூடம் வாங்கிவிட்டதாக மீடியாவில் வந்த செய்தியை மறுத்திருக்கிறார் சூர்யா. ‘‘ஸ்கூல் நடத்துறது சாதாரண விஷயமில்லீங்க. அதுக்கெல்லாம் நிறைய அர்ப்பணிக்கணும். இப்போதைக்கு அதுக்கு நேரமில்லை. ஆனா உள்ளுக்குள்ள இருக்கும் அந்த ஆசையை வருங்காலத்தில் நிறைவேற்றுவேன்’’ என்கிறார்.

நம்புங்க பாஸ். அப்பாவி ‘சின்னதம்பி’யை எடுத்த பி.வாசு ஹாலிவுட் படத்தை இயக்கவுள்ளார். படத்தின் தலைப்பு ‘கரி இன் லவ்’. அடுத்த வாரம் அமெரிக்காவில் தொடங்கும் படத்தில் சோனம் கபூர் நடிப்பார் என்று சொல்லப்பட்ட செய்தியை மறுத்திருக்கிறார் சோனம். ‘‘அந்தப் படம் சம்பந்தமா எங்கிட்ட யாரும் இதுவரை பேசலை’’ என்கிறார்.

கிரேக்க மொழிப் படம் ஒன்றில் நடித்திருக்கும் நீது சந்திரா, அடுத்ததாக பாலிவுட் போகிறார். ‘ஜுராஸிக் பார்க் 3’ புகழ் ஜோ ஜான்ஸ்டன் இயக்கும் படம். நீதுவை நடித்துக் காட்டச் சொல்லி, ‘ஸ்கைப்’பில் ஆடிஷன் பார்த்து ஓகே சொல்லிவிட்டாராம். இதுதவிர இன்னொரு படமும் கைகூடும் நிலையில் உள்ளது. அதற்காக அடுத்த மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் பறக்கிறார் நீது.

கிட்டத்தட்ட 20 கிலோவிற்கு மேல் மெலிந்து விட்டார் விக்ரம். ஷங்கர் படத்திற்காக இந்த மெலிவாம். ஓர் ஆங்கில நாளிதழில் அவரது புகைப்படத்தோடு பேட்டி வெளியிட்டு இருக்கிறார்கள். சினிமாவின் மீது என்னவொரு அக்கறை!

கவலையில் நகம் கடிக்கிறார் சல்மான் கான். கவனக்குறைவாக கார் ஓட்டி ஒருவரைக் கொன்ற வழக்கில் தீர்ப்பு சொல்லப் போகிறார்கள். சஞ்சய் தத் மாதிரி ஆகிவிடுவாரோ என கோயில்களுக்கு படை எடுக்கிறார்கள் அவரது புரொடியூசர்கள்.

சேட்டை நடிகர், அவரால் விரும்பப்படுகிற நடிகை இங்கே ஷூட்டிங் வரும்போது யாருக்கும் பேட்டி தரக்கூடாது; யாரும் அவருக்குத் தொந்தரவு தரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம். வெளியூரில் இருந்தால் ரிமோட் கன்ட்ரோலில் இயக்குகிறார். எந்த ஒரு செய்திக்கும் அவரையே அடையாளம் காட்டுகிறார் நடிகை. கிட்டத்தட்ட கெட்டிமேளம்தான்!

அடுத்தடுத்து இரண்டு ஹீரோக்களுக்கு திருமணம் ஆகப் போகிறது. நிச்சய லிஸ்ட்டில் இருப்பவர்கள்... பாய்ஸ் நடிகர் மற்றும் விரல் நடிகர். இருவருமே கடைசி கட்ட இழுபறியில் இருக்கிறார்கள். அப்பா பிடிவாதம், இழுபறிக்குக் காரணம்!



கொஞ்ச நாளைக்கு சினிமாவை விட்டுத் தள்ளி நிற்கலாம் என கிரிக்கெட் நடிகை தீர்மானித்து விட்டார். படம் எதுவும் ஒப்புக் கொள்வதாக இல்லையாம். இந்த லீவு ஆறு மாதம் வரை நீடிக்குமாம்.

‘எதிர்நீச்சல்’ சூஸாவின் ஜாதகத்தில், ‘இரண்டாவது நாயகி’ என்ற கட்டம் ஸ்டிராங்காக இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார் சூஸா. அஜித்தின் சகோதரராக நடிக்கும் விதார்த்துக்கு ஜோடி!

மகன் சண்முகபாண்டியனுக்காக சனி, ஞாயிறு இரண்டு தினங்களிலும் கதை கேட்கிறார் கேப்டன். இனிமேலும் அவர் நடிப்பதாக இல்லை. மகன் நடிக்கும் படத்தில் மட்டும், எதிர்பாராத ஒரு ரோலில் வருவாராம். அதையும் சீக்ரெட்டாக வைக்கத் தீர்மானித்து இருக்கிறார்கள். அடுத்த ஒரு மாதத்தில் பட அறிவிப்பு வெளியாகும்.